வியாழன், 12 மார்ச், 2026

 

என்னடா தம்பி! எனக்கெதுக்குப் போன்செஞ்சே?

இன்னிக்கு நாளுனக்கு ஏகலையா? – சின்னதுமாய்ச்

செதியில்லை என்றால்உன் செல்போன் சிணுங்காதே;

மீதிவைக் காமல் விளம்பு! 01

 

அண்ணனுடன் நான்பேசி ஆறுதிங்கள் ஆனதனால்

புண்ணடைஞ்ச நெஞ்சோடு போன்போட்டேன்; – கண்ணளந்த

காட்சிகளில் ஒன்றைக் கடத்தலாம் என்றிருந்தால்

காட்டுவதேன் என்மேல் கடுப்பு!? 02

 

கோச்சுக்  கிடாதடேய்! கோபமெல்லாம் ஒன்னுமில்லை;

ஆச்சரியப் பட்டேன்; அதான்கேட்டேன்; – மாச்சரியம்

ஆர்மீதும் கொண்டாயா? ஆள்காட்டு கின்றாயா?

ஊர்க்கதைதான் உண்டா? உரை! 03

 

உன்பின் பிறந்தவன் ஒப்பனை ஏமாற்றித்

தன்பெயரில் சொத்தெழுதித் தா!ங்கிறான்; – உன்தாயும்

ஒத்தூது கின்றாள்; உனக்கினி மேலிங்கு

சொத்தேது? போய்விட்டாய் தோற்று! 04

 

எல்லாரும் கூடி எனைஏய்க்கப் பார்ப்பதனை

தில்லாய்நீ சொன்னதற்குத் தெண்டனிட்டேன்; – கல்லான

சாமியிப்போ உன்னுருவில் சாட்சிசொல்ல வந்ததென்று

தீமிதித்துச் செய்வேன் சிறப்பு! 05

 

அண்ணனுக் கொன்றென்றால் அஞ்சி ஒதுங்கநான்

அன்னியனா? வேண்டிய ஆளாச்சே! – கண்ணியமாய்க்

கேட்டால் கிடைக்குமென்று கேட்கின்றாய்; உன்தம்பி

வேட்டுவைக் கின்றான் விரைந்து! 06

 

ஆளுக்குப் பாதி அளிப்பதுதான் ஊர்வழக்கம்

தோளுக்கு மேல்வளர்ந்தால் சொத்துகளை; – நாளுக்கு

நாளுரசல் கூடும் நயவஞ்ச கத்தால்அந்

தாளுக்கென் றைக்குவரும் சாவு!? 07

 

எல்லாப் பிரச்சினைக்கும் ஏதுனது தந்தைனென்று

மல்லாக்கப் போட்டு மிதிக்கின்றான்; – பொல்லாப்பு

வந்துவிடும் என்பதனால் வந்து தடுக்கவில்லை

உந்தம்பிக் கஞ்சியே ஊர்! 08

 

போகட்டும் என்று பொறுமையாய் நான்போனால்

சாகட்டும் அப்பனென்றா சாத்துகிறான்? – ஆகட்டும்

ரெண்டிலொன்று பார்க்கின்றேன்; ரெக்கமண்டுக் காள்சேர்த்துக்

கொண்டுவந்தா லும்செல்வேன் கோர்ட்! 09

 

பஞ்சாயம் கூட்டிஉன் பங்கைக்கைப் பற்றாமல்

குஞ்சாட்டிப் போவாயா கோர்ட்டுக்கு? – பொஞ்சாதி

உன்னை மதிப்பாளா? உன்பேச்சைக் கேட்பாளா?

என்னநான் சொல்ல இனி!? 10




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக