வியாழன், 30 ஏப்ரல், 2009

அன்பீர்க்குத் தாக்கியதால் ஆங்கு!

மெய்போய் துளைத்திட்ட வில்லம்பால் தன்மகவும்
எய்போல் கிடக்குதென்(று) ஏற்றினாள் -ஐயமற
அன்னையவள் கூறுவமை ஆகினேன் ஐய!உம்
அன்பீர்க்குத் தாக்கியதால் ஆங்கு!

அகரம்.அமுதா

சனி, 25 ஏப்ரல், 2009

அவள்!

மயில்நடை கற்க மரமடக்கம் கற்கக்
குயிலோ எனில்தேன் குரலே -பயில
முகில்வண்ணம் வேண்டி முறையிட மன்றல்
அகில்வேண்டி நிற்கும் அணங்கு!


அகரம்.அமுதா

திங்கள், 20 ஏப்ரல், 2009

சொன்னது நீதானா சொல்!

மௌனத்தால் கொன்றென்னை மௌனத்தால் வென்றென்னை
மௌனத்தால் நம்காதல் வாழவைத்தாய் -மௌனத்தால்
சொன்ன மொழிமாற்றித் தோகை உனைமறக்கச்
சொன்னவள் நீதானா சொல்!

அகரம்.அமுதா

புதன், 15 ஏப்ரல், 2009

உள்ளிருள் நீக்கும் ஒளி!

அடிதோய் இருளை அகற்றா விளக்கைக்
கடிதேற்றி வைப்பதனால் கங்குல் -மடிந்திடுமோ?
நள்ளிருள் நீக்குவது ஞாயிறாம்; தீங்குறளே
உள்ளிருள் நீக்கும் ஒளி!

அல்வழி நீக்கும் அறிவுசால் நல்வழியும்
இல்வழி வீடருளும் இன்குறளும் -சொல்வழி
தொல்லை பலநீக்குந் தொன்னூலாம் நாலடியும்
உள்ளிருள் நீக்கும் ஒளி!

தன்னை வருத்தித் தவங்கிடந்து பெற்றெடுத்து
உன்னை மடிசுமந்(து) ஓம்பிவளா் -தந்தையவா்
சொல்லுக் கிணையுண்டோ? தொல்லுலகில் வேறுண்டோ
உள்ளிருள் நீக்கும் ஒளி?


அகரம் அமுதா

வெள்ளி, 10 ஏப்ரல், 2009

இட்டவடி நோவும் அவட்கு!

சீர்பதி னைந்தும் அகவையாம் சேர்மோனை
மாராம் வழங்கெதுகை பின்னழகே நேர்தனிச்சீர்
கட்டழகுக் கூந்தல் கருதுதளை தட்டிவிடின்
இட்டவடி நோவும் அவட்கு!

நூலாடை யால்மேனி நோகும் எனத்தெரிந்தே
பாலாடை கட்டிவிட்டுப் பார்த்திருத்தேன்! -பாலாடை
பட்டவிடம் நோகப் பரப்பியப்பூ மெத்தையிலே
இட்டவடி நோகும் இவட்கு!


அகரம் அமுதா

ஞாயிறு, 5 ஏப்ரல், 2009

உழவின்றி உய்யா துலகு (2)!

கொஞ்சமும் நீரைக் கொடார்கரு நாடகத்தார்;
தஞ்சைநிலம் எல்லாம் தரிசாகிப் -பஞ்சம்
எழுந்தாடக் கண்டபின்னும் ஏமாந் திருந்தால்
உழவின்றி உய்யா துலகு!

பற்றாக் குறையென்றே பஞ்சப்பண் பாடுகிறார்;
முற்றாக நீரை முடக்குகிறார்; -அற்றார்
புழங்கவும்* நீர்வழங்கார் போக்கால் வயல்காய்ந்
துழவின்றி உய்யா துலகு!

வழங்கும் மனமின்றி வைத்ததனைக் காத்துப்
புழங்கும்* வகையறியாப் புல்லர் -முழக்கம்
பழுதன்றி வேறில்லை பாரதமே! காண்பாய்
உழவின்றி உய்யா துலகு!

வியலாய்* முகில்வழங்கும் நீரை வழங்க
வியலா தெனமறுப்பார் வீணர் -வயற்குக்
கொழுநீரும்* இன்றேல் கொழுவூண்றிக் கீறும்
உழவின்றி உய்யா துலகு!

புழங்குதல் -கையாளுதல்; வியல் -மிகுதி; கொழுநீர் -பெருகும் நீர்


அகரம் அமுதா

திங்கள், 30 மார்ச், 2009

உழவின்றி உய்யா துலகு (1)!

பலவாய்த் தொழில்வளங்கள் பல்கிப் பெருகும்
நிலையால் பசிப்பிணியும் நீங்கிடுமோ? நாடி
உழுது நடும்நாற்றே ஊர்பசியைத் தீர்க்கும்;
உழவின்றி உய்யா துலகு!

மாரி பொழிந்திட; மன்னன் குடிநடத்த;
வாரி வழங்குகையார் வந்தீய; -ஊரில்
இழவின்றி* யாவரும் ஏற்றமுற் றாலும்
உழவின்றி உய்யா துலகு!

வாழ வகையாய் வயலழித்து நாடாக்கிப்
பாழும் தொழில்பலவாப் பல்கிடினும் -கூழும்
பழஞ்சோறும் இன்றிப் பசிநீங்கா தென்றும்
உழவின்றி உய்யா துலகு!

சோலைகளைச் சாலைகளாய்த் தோற்றுவித்துப் பாலைகளை*
வேலைத் தளம்செய்யும் வீணர்களால் -நாளை
பழனம்* அழிந்து பயிர்செய் தொழிலாம்
உழவின்றி உய்யா துலகு!

இழவு -வறுமை, கேடு; பாலை -பயிர்த்தொழில் முடிந்தபின் தரிசாய்க் கிடக்கும் நிலம்; பழனம் -வயல்


அகரம்.அமுதா

புதன், 25 மார்ச், 2009

அணுவாற்றல் வேண்டாம் அகற்று!

அமெரிக்காவுடன் இந்தியா அணுவொப்பம் செய்தபோது:-

மின்சாரத் தேவைக்காய் மேற்கின் அடிவீழ்தல்
தன்மானப் போக்கா? தகுமோதான்? -நன்காய்ந்(து)
உணர்ந்தேயிவ் வொப்பம் உதவா தெனத்தேர்ந்(து)
அணுவாற்றல் வேண்டாம் அகற்று!

நம்பி அவருறவை நாமேற்றுப் பின்னாளில்
வெம்பி விழுவதுவும் வேண்டாமே! -தெம்பால்
திணவெடுத்தத் தோளர்தம் தீயுறவுக் கஞ்சி
அணுவாற்றல் வேண்டாம் அகற்று!

வல்லார் வகுத்ததே வாய்க்கால் எனவானால்
இல்லாரின் சொல்லோ எடுபடும்? -வல்லார்
பிணக்கின் இலார்க்குப் பெருந்துயரே மிஞ்சும்;
அணுவாற்றல் வேண்டாம் அகற்று!

மேற்கு கிழக்கென்று மேதினியைத் துண்டாக்கி
மேற்கு கிழக்கையாள விட்டுவிட்டோம் -மேற்கை
இனியும்நாம் நம்பும் இழிநிலை ஏனோ?
அணுவாற்றல் வேண்டாம் அகற்று!


அகரம்.அமுதா

வெள்ளி, 20 மார்ச், 2009

ஒரு கொள்கையாளனின் குமுறல்கள்!

திரைகடல் ஓடியும்
திரவியம் தேடென்ற
பரம்பரைப் பாட்டிற்குத் தன்னை
பக்குவம் செய்து கொண்டு
இரவு பகலென்றும் பாராமல்
இனிதே உழைத்துயர
திரைகடல் கடக்கும்
தோழர்கள் ஏராளம்!

விழியில் எதிர்பார்ப் புக்களோடும்
வண்ணக் கனவுகளை
மொழியில் ஏற்றியும் வரும்
மனிதர் எண்ணிக்கை தாராளம்!

சூழ்கின்ற வறுமைக்கு மெல்ல
சூடுவைக்கும் நோக்கோடு
ஆழிதனைக் கடக்கும்
ஆடவரும் ஏராளம்!

ஒவ்வொரு குணவான்களும்
ஒன்றுசேரும் பாலைவனம்
வெவ்வேறு திசைப் பறவைகள்
வந்துபோகும் வேடந்தாங்கல்

காலும் அறையுமெனக்
காணிகள் இருந்தபோதும்
நாளும் அதையெண்ணி
நானும் நாடுகடந்தேன்

பாலும் தோற்கும் மனம்
படைத்த பெற்றோருக்காய்
வேலும் தோற்கும் அல்லி
விழித் துணையாளுக்காய்

சிந்திய வியர்வைத் துளிக்காய்
சிலநூறு கைக்குவரும் -அதைச்
சிந்தாமல் சிதறாமல் அனுப்ப
சிறகடித்துக் கடிதம்வரும்

தளிர்கள் அனுப்ப முகத்தில்
தழும்பேறி வரும்மடல்
குளிருக்கும் வெயிலுக்கும்அதுவே
குடையாய் எனைக்காக்கிறது

தொலைதூர உறவுகளுக்குத்
தகர்க்கப்பட்ட மனதினூடே
தொலைபேசி உரையாடல்
தேனினும் தமிழினும் இனிது

நலமா? சுகமா? என
நாலுவரி கேட்டுமுகக்
களையோடு கண்ணுறக்கம்
கனவுகளும் சிறகடிக்கும்

மலரெனப் பூக்கும்முகம்
மறுநாளே மாறிவிடும்
தளிரெனத் தழைக்கும் இன்பம்
தாரகையாய்ச் சிறுத்துவிடும்

களிறுடல் இளைத்துவிடும்
கனவுகளும் குறைந்துவிடும்
பிளிறுகின்ற யானைப்போலே
பாவிமனம் படுத்திவிடும்

காலமது எடுத்துச் சொல்லும்
கட்டளைக்கு அடிபணிந்து
நாளமதை முறுக்கேற்றி
நாளுமெனை வதைக்கின்றேன்

காலமது கறைந்தபின்னும்
கோலமது களையவில்லை
சாலளவு ஆசைகளோ -ஏழ்மைச்
சாக்கடையில் மூழ்கியதே!


அகரம்.அமுதா

ஞாயிறு, 15 மார்ச், 2009

அம்மாவுக்கு!

பத்துத்திங்கள் சுமந்தீன்று
பாசத்தைப் பொழிந்தஉன்றன்
கண்ணோரக் கதகதப்பில்
காலம்பல வாழ்ந்திருந்தேன்

சிறுவன்என் கைகளிலே
சிறகுகளைக் கட்டிவிட்டு
திரவியம் தேடிவரத்
திரைகடல் தாண்டவெச்சே!

தனிமரமா ஆகிவட்ட
தவிப்பினில் நானிருக்க
"மறந்துட்டியா?" என்றுகேட்டு
மடலொன்று வரைந்தவளே!

உதட்டோடு முத்தமிட்டு
உயிரோடு சேர்த்தணைத்துத்
திகட்டாத அன்புவெச்ச
தாயுன்னை மறப்பேனா?

தடத்தில்தாள் பதியாதுன்
தளிர்த்தோளில் தடம்பதித்து
நடைபயின்று நான்வளர்ந்த
நாட்களை மறப்பேனா?

வயிற்றினில் சுமந்துகொண்டே
வேலைவெட்டி செய்தஉன்னை...
வாயோடு வயிற்றைக்கட்டி
வளர்க்கப் பாடுபட்டஉன்னை...
காலங்கள் மறந்திடலாம்- என்றன்
நாளங்கள் மறந்திடுமா?
நெஞ்சமதை மறந்துவிட்டால்
நல்லகதி சேர்ந்திடுமா?

கடையாணி உடைந்துவிழ
கடைக்குட்டி வண்டிக்குக்கீழ
உடையாத மனமுடைந்து
மூர்ச்சையற்றுப் போனதந்தை

அறியாத சிறுவன்நான்
தெரியாமல் தவறுசெய்ய
திட்டினால் திருந்தேனென்று
தூணில்கட்டித் தோலுரித்தார்

கேள்விப்பட்டு ஓடிவந்து
"கோ"வென அழுதுகோண்டு
இரத்தக்கண்ணீர் வடித்தஉன்னை
இராக்கனவும் மறந்திடுமா?

பெற்றபிள்ளை அறிவுகெட்டு
பேசிய பேச்சையெல்லாம்
ஒற்றைநொடிப் பொழுதுக்குள்ள
பெற்றவள்நீ மறந்திடுவாய்...

அத்தனையும் கனவோடு
அம்புமழை பொழியுதம்மா...
நித்தநித்தம் நினைவிலாட
நித்திரையும் போனதம்மா...

"நான்பிறந்த அப்புறந்தான்
நெல்லுசோற்றைக் கண்டோ"மென்ற
தித்திக்கும் செய்திசொல்லி
திருட்டிசுற்றிப் போட்டவளே

நெல்லுசோற்றை விட்டுத்தள்ளு
நேசமனம் கொண்டவளே
நான்பொறந்த அப்புறம்நீ
நல்சோறு தின்றதுண்டா?

அறுவை சிகிச்சைசெய்து
அம்மாநீ கிடக்கயிலே
அன்புமுகம் பார்ப்பதற்கு
அருமைமகன் நான்வரலே

கருணையுள்ள தாய்மனசு
அதற்கும் கலங்கவில்லே
நினைத்தால் அழுகைவரும்
நதியூறும் கன்னத்திலே

மூன்று அகவையில்நான்
உன்நெஞ்சில் உதைக்கையிலே
உதைத்த காலைச்சுற்றி
முன்னூறு முத்தம்வைப்பாய்

பதினாறு அகவையில்நான்
படுத்திய பாவத்திற்குப்
பிணத்திற்கும் சாபம்சேரும்
பிணந்தின்னி விலகியோடும்

ஆத்தா! அடிஆத்தா!
நான்செத்தாக் கொள்ளிவை
முந்திக்கொண்டு போயிட்டின்னா
பெயரன்கிட்டச் சொல்லிவை!


அகரம்.அமுதா