திங்கள், 30 மார்ச், 2009

உழவின்றி உய்யா துலகு (1)!

பலவாய்த் தொழில்வளங்கள் பல்கிப் பெருகும்
நிலையால் பசிப்பிணியும் நீங்கிடுமோ? நாடி
உழுது நடும்நாற்றே ஊர்பசியைத் தீர்க்கும்;
உழவின்றி உய்யா துலகு!

மாரி பொழிந்திட; மன்னன் குடிநடத்த;
வாரி வழங்குகையார் வந்தீய; -ஊரில்
இழவின்றி* யாவரும் ஏற்றமுற் றாலும்
உழவின்றி உய்யா துலகு!

வாழ வகையாய் வயலழித்து நாடாக்கிப்
பாழும் தொழில்பலவாப் பல்கிடினும் -கூழும்
பழஞ்சோறும் இன்றிப் பசிநீங்கா தென்றும்
உழவின்றி உய்யா துலகு!

சோலைகளைச் சாலைகளாய்த் தோற்றுவித்துப் பாலைகளை*
வேலைத் தளம்செய்யும் வீணர்களால் -நாளை
பழனம்* அழிந்து பயிர்செய் தொழிலாம்
உழவின்றி உய்யா துலகு!

இழவு -வறுமை, கேடு; பாலை -பயிர்த்தொழில் முடிந்தபின் தரிசாய்க் கிடக்கும் நிலம்; பழனம் -வயல்


அகரம்.அமுதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக