ஞாயிறு, 5 ஏப்ரல், 2009

உழவின்றி உய்யா துலகு (2)!

கொஞ்சமும் நீரைக் கொடார்கரு நாடகத்தார்;
தஞ்சைநிலம் எல்லாம் தரிசாகிப் -பஞ்சம்
எழுந்தாடக் கண்டபின்னும் ஏமாந் திருந்தால்
உழவின்றி உய்யா துலகு!

பற்றாக் குறையென்றே பஞ்சப்பண் பாடுகிறார்;
முற்றாக நீரை முடக்குகிறார்; -அற்றார்
புழங்கவும்* நீர்வழங்கார் போக்கால் வயல்காய்ந்
துழவின்றி உய்யா துலகு!

வழங்கும் மனமின்றி வைத்ததனைக் காத்துப்
புழங்கும்* வகையறியாப் புல்லர் -முழக்கம்
பழுதன்றி வேறில்லை பாரதமே! காண்பாய்
உழவின்றி உய்யா துலகு!

வியலாய்* முகில்வழங்கும் நீரை வழங்க
வியலா தெனமறுப்பார் வீணர் -வயற்குக்
கொழுநீரும்* இன்றேல் கொழுவூண்றிக் கீறும்
உழவின்றி உய்யா துலகு!

புழங்குதல் -கையாளுதல்; வியல் -மிகுதி; கொழுநீர் -பெருகும் நீர்


அகரம் அமுதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக