சனி, 20 டிசம்பர், 2008

தாலி வரம்!

திருமண முறிவு வேண்டி கணவன் நீதிமன்றம் செல்கிறான். அந்த இறுதிக்கட்ட நேரத்தில் அவன் மனைவி அவனுக்கு எழுதும் கவிதைக் கடிதமாக இக்கவிதை!

திருமணம் கசந்துவிட்டத்
திரு-மனம் நலமா?
இறந்துவிட்ட இறந்தகாலம்
திரும்பவும் வரும்?

இழக்கப்போகும் உறவெண்ணி
இறுக்கிடும் ஏக்கங்கள்...
உறவறுக்க முயலுகின்ற
உள்மனதை மாற்றுங்கள்...

அழுதழுது வடிகின்ற
கண்ணீர் கரிக்குது...
அதைக்காணும் ஊர்மனமோ
அழகாய் சிரிக்குது...

பெயர்சொல்ல முத்துப்போல
பெற்றுத்தந்தேன் வாரிசு...
அடிவழிற்றில் வளருது
ஆறுமாத நின்சிசு...

விவகாரம் முற்றிப்போக
விவாகரத்துத் தேவையா?
விட்டுக்கொடுக்கும் மனமிருந்தால்
வீடும்சுவர்க்கம் இல்லையா?

சொந்தமாய் ஒருதுன்பம்
இருந்தாலது சுகமாகும்...
துன்பமே நீயெனினும்
வாழ்க்கையும் வரமாகும்...

முடிவுக்கு முற்றுப்புள்ளி
முழுமனதாய் வைப்போமே...
விடிவென்னும் விளக்கேற்றி
வாழ்க்கையைப் படிப்போமே...

முந்தானையில் வேண்டிக்கொண்டு
முடிந்தக்காசு இறைவனுக்கு...
முந்துகின்ற விழிநீரால்
முடிகின்றக்கடிதம் உமக்கு!

அகரம்.அமுதா

1 கருத்து: