வெள்ளி, 20 செப்டம்பர், 2013

வாழ்த்துப்பா!


வாழ்த்துப்பா!

கிறுக்கன்தான் பெயரெனினும் பலரைப் போலக்
கிறுக்குவதைக் கவியென்னும் பண்பில் லாதான்!
சிறிதுந்தான் செறுக்கில்லாச் சிந்தை கொண்டோன்!
சிலேடைக்குக் காளமேகம் தம்பி ஆவான்!
நறுக்கென்றே இவன்பாடும் வண்ணம் கேட்டு
நஞ்சுடைய நெஞ்சத்தார் நாணு கின்றார்
மறுப்பில்லா மணிக்கவிதை வடித்துக் காட்டும்
வரகவிஞன் நம்கிறுக்கன் போலிங் கேயார்?

தேறலதில் இத்துளிதான் சிறந்த தென்று
தேர்ந்துசொல்ல இதுவரையில் முடிந்த துண்டோ?
மாறனவன் மலர்க்கணைபோல் மயங்க வைக்கும்
மதுப்பாவின் எப்பாவின் மாண்பைச் சொல்வேன்?
ஊறலுள்ள ஊற்றினைத்தான் ஊரும் நாடும்!
உண்மையுள்ள பாவினைத்தான் உலகம் பாடும்!
ஆறடுத்த கழனியைப்போல் பாக்கள் தீட்டும்
அருந்தமிழ்க் கிறுக்கன்பா என்றும் வாழும்!




குறிப்பு:- அருமை நண்பர் கவிஞர் தமிழ்க்கிறுக்கன் அவர்களை வாழ்த்தி நான் எழுதிய எண்சீர் மண்டிலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக