வெள்ளி, 13 செப்டம்பர், 2013

திருமண வாழ்த்து! 2


எனது நண்பர் சின்ன பாரதியின் மைத்துநர் அறிவழகன் அவர்களின் திருமணத்திற்கு வாழ்த்துப் பாவாக இயற்றியது

தண்ணளி நெஞ்சன்; தண்டாப் பொறையினன்;
கண்ணோளி யாஞ்செழுங் கல்வியில் வான்புகழ்
வேளாண் துறைசார் வெல்லுங் கல்வியே
மேலாம் எனநனி விரும்பிப் பயின்றோன்;
சான்றோன் ‘தனிக்கொடி’ தாய்‘கோ சலை’சேய்;
ஆன்ற அறிவின் அழகன் ஆதலால்
‘அறிவழ கன்’எனும் அழகுறு பெயரினைச்
செறிவுடன் ஏந்திய செம்மல்; அறிவழி
உட்குச் செகுத்த பெட்புக் குரியோன்;
கட்குண வாகிடுங் கவின்யாக் கையினன்;
ஒள்ளிதி யாதென் றுள்ளி உஞற்றும்
மள்ளன்; என்மன மன்றில் உறையும்
பாவலன் ‘சின்ன பாரதி’ மைத்துனன்;
நாவலன்; நனிபெரும் நல்லோன் தனக்கும்,
வைகற் கதிராய்; வம்பு செறிமலர்ப்
பொய்கைத் தேறலாய்ப் பொலஞ்செறி அன்னம்
அனைய காரிகை; அன்பின் நிறைகுடம்;
மூரல் உதிர்க்கும் முழுநிலா; கற்பெனுஞ்
சாரம் செறிந்த தளிர்க்கொடி; செழுங்கனி;
பொறியியல் படித்த பூமகள் ‘சுமித்திரை’
நெறியியல் செழித்த நிறைவயல் தனக்கும்
ஈன்றோர், கிளைஞர், இவரொடு நொதுமலர்,
சான்றோர் கூடித் தகைமிகு திருமண
ஓலை வரைந்து ஒருமன தாக
சோலைக் குயில்களின் தோள்க ளிணைத்தனர்;
கண்ணொடு கண்ணினைக் கண்டு கலந்தும்
பண்பொடு நல்லுடல் பழகித் திளைத்தும்
பெரியோர் மெச்சும் பிறன்கடை பெருக்கி
வரியோர்க் குதவி வான்புகழ் எய்தி
தாமார்க் கும்முன் சான்றென
ஏமாப் பெல்லாம் இயையவாழ்த் துவனே!

சொற்பொருள்:- தண்ணளி –குளிர்ந்த அன்பு; தண்டாத –நீங்காத; பொறையினன் –பொறுமையானவன்; ஆன்ற –அகன்ற; செம்மல் –தலைவன்; உட்கு- அச்சம்; செகுத்தல் –அழித்தல்; பெட்பு –பெருமை; ஒள்ளிது –நல்லது; உள்ளுதல் –எண்ணுதல்; உஞற்றுதல் –செய்தல்; மள்ளன் –வீரன்; மன்று –அவை; நனிபெரும் –மிகப்பெரிய; வைகல் –விடியற்காலை; வம்பு செறிமலர் –மணம் மிகுந்தமலர்; தேறல் –தேன்; பொலம் –அழகு; மூரல் –புன்சிரிப்பு; கிளைஞர் –உறவினர்; நொதுமலர் –அயலார்; பிறன்கடை –வாரிசு; ஏமாப்பு –மகிழ்ச்சி; இயைய –பொருந்த.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக