திங்கள், 28 ஜூன், 2010

பந்து!

பையன்கள் ஆடினர் பந்து!
பாப்பா பார்த்தனள் வந்து!
பந்தை வளைக்குள் நந்து
பாய்ச்சுமுன் பிடித்திட முந்து!

வியாழன், 24 ஜூன், 2010

புகழைத் தேடு!

தம்பி! தம்பி! ஓடிவா!
தங்கக் கம்பி ஓடிவா!
எம்பிக் குதித்து ஓடிவா!
எவரும் மெச்ச பாடிவா!

பள்ளிப் படிப்பை நாடிவா!
படித்தால் உயரலாம் ஆடிவா!
வெள்ளி நிலாவே! ஓடிவா!
விரும்பிப் புகழைத் தேடிவா!

ஞாயிறு, 20 ஜூன், 2010

குறளே வெண்பாவாக! (4)

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு! -குறள்-


உண்டால் உயிர்க்கும் உவப்பன்றி உள்ளியதைக்
கண்டால் களிசெய்யா கள்ளதுவே! -கண்டிடினும்
பூமனத்தில் எண்ணிடினும் பொங்கி எழுந்தாடும்
காமத்திற் தோன்றும் களிப்பு!

அகரம் அமுதா

சனி, 12 ஜூன், 2010

கரிகாலன் ஈற்றெடுப்பு! (13)



மனத்தில் உரனும், மதியில் தெளிவும்,
நினைப்பில் நெறியின் நிறைவும், –முனைந்தே
உயரும் உழைப்பும், உதவும் குணமும்
இயல்தமிழர்க்(கு) ஊட்டினாய் இங்கு! (121)

இங்ஙனம் நாட்டை இனிதுற ஆளவும்
சிங்களர் நெஞ்சம் தியங்கினார்* –எங்ஙனம்
மாத்தமிழர் மாள வழியொன்று காண்பதெனக்
காத்திருந்தார் உள்ளம் கரந்து! (122)

தியங்குதல் –கலங்குதல்.

கரப்பில்* மனத்தனுனைக் கண்டு கலங்கித்
திறத்தில் இழிந்தோர் திகைத்தார் –உரத்தில்*
உனக்கிணை இல்லாதார் ஓர்ந்து* பிறரைத்
தனக்குத் துணைகொண்டார் தாழ்ந்து! (123)

கரப்பில் –குற்றமில்லாத; உரம் –வலிமை; ஓர்ந்து –உணர்ந்து.

தாழ்ந்தோர்க்(கு) உதவ தகையில்லாச் சீனரும்
பாழ்மன பாகிசுத் தானியரும் –சூழ்ந்தாங்(கு)
உருசிய நாடும் உகந்தவற்றைச் சீய
மிருகத்திற்(கு) ஈவும் விரைந்து! (124)

சீயம் –சிங்கம்.

விரைந்து படையணியை வீணர்க்(கு) உதவும்
திரைமறைவில் இந்திய தேயம் –புரைநெஞ்சர்*
முன்நின்று போர்புரிய முப்படைக்கும் ஆனவரை
பின்நின்(று) உதவும் பெரிது! (125)

புரைநெஞ்சர் –குற்றமுடைய நெஞ்சை உடையவர் (சிங்களரைக் குறித்தது)

பெருவான் வழியே பெரும்போர் புரிந்து
கருமா மனத்தர் களித்தார் –தரையில்
எதிர்நின்று தோற்றங்(கு) எமன்கண்ட தாலே
விதிர்த்திட்ட* தோளர் விரைந்து! (126)

விதிர்த்தல் –நடுங்குதல்.

விரையும் உலங்கூர்தி வீசிடும் குண்டால்
தரையில் தமிழர் தகர்வார் –வரைவில்*
அழிவைப் புரிந்தும் அடங்காக் கொடியர்
பொழிவார் நெடுவான் புகுந்து! (127)

வரைவில் –முடிவில்லாத.

புகலிடம் இன்றிப் புழுங்கிப் புறம்போய்
தகைசால் தமிழிர் தவிக்க –பகைவர்
நவை*யின் வழியினையே நத்தி*க் குமை*செய்(து)
உவப்பார் அவரை ஒழித்து! (128)

நவை –குற்றம்; நத்துதல் –விரும்புதல்; குமை –துன்பம்.


ஒதுங்கிடம் ஆங்கேஎம் ஒண்டமிழர்க்(கு) இல்லை
பதுங்கு குழியில் படுப்பார் –பிதுங்கிக்
குடல்சரிய சாதற்குக் குண்டள்ளி வீசும்
நெடுவானில் வானூர்தி நின்று! (129)

நின்றெதிர்த்துப் போரிடும் நெஞ்சுரம் இல்லாதார்
சென்றுவான் ஊர்திவழி சீரழித்தார் –பொன்றுவான்*
ஈழத் தமிழனதில் இன்பம் அடைந்திடுவான்
சீய*த் தலைவன் சிரித்து! (130)

பொன்றுதல் –இறத்தல், அழிதல்; சீயம் –சிங்கம்.
அகரம் அமுதா

செவ்வாய், 8 ஜூன், 2010

கள்ளிப் பாலைக் கருதிக் கொடுப்பரே!

உடலின் பசிக்காய் உறவில் திளைத்துக்
குடலிற் கருவைக் குவித்து வளர்த்துப்
பத்துத் திங்கள் பாரம் தாங்கிப்
பெற்றபின் பெற்றது பெண்மக வெனிலோ
அள்ளிப் பாலை அளிக்காது
கள்ளிப் பாலைக் கருதிக் கொடுப்பரே!

அகரம் அமுதா

வெள்ளி, 4 ஜூன், 2010

யார்சொல்லிக் கேட்டதிந்த உலகம்!

யார்சொல்லிக் கேட்டதிந்த பாரே –பெரி
யோர்சொற்கள் விழற்கிறைத்த நீரே!
யார்வழியில் நடந்ததிந்த பாரே –சிறி
யோர்போலே நடந்ததன்றி வேறே?
(யார்சொல்லிக்)
நூலறிவு வாய்த்தவர்சொல் எதையும் –கேட்டால்
நூதனமாய்ப் பார்த்தெள்ள விழையும்!
வாலறிவு வாய்த்ததுபோல் எதையும் –செய்து
வருந்திப்பின் துன்பத்தில் புதையும்!
(யார்சொல்லிக்)
மாயத்தில் மந்திரத்தில் அமிழும் –அந்த
மடமையினைச் சுட்டுவோர்மேல் உமிழும்!
தேயத்தைச் சீர்திருத்த விழையும் –எவரும்
தீண்டத்தகார் என்றுவசை பொழியும்!
(யார்சொல்லிக்)
ஆழ்கிணற்றின் தவளைகளாய் மக்கள் –இதை
அறிந்துரைப்போர் வாழ்வினிலே சிக்கல்
சூழ்ந்திழைக்கப் புகுமிவரா மக்கள்? –இல்லை
தோற்றத்தால் வளர்ச்சிபெற்ற மாக்கள்!
(யார்சொல்லிக்)
தானென்று தறுக்குவதில் நாட்டம் –என்றும்
தன்னலமே பேணிபொருள் ஈட்டும்!
மானமுள்ள பேர்களையே வாட்டும் –இந்த
வஞ்சகரின் பைந்நிறைய தேட்டம்!
(யார்சொல்லிக்)
வாய்நிறைய வாய்மையினை மொழியும் –நெஞ்சில்
வைத்துவளர் பொய்மையினால் இழியும்!
நாய்வாலாய் வல்லான்முன் குழையும் –ஏழை
நல்லாரை ஏய்த்திடவே விழையும்!
(யார்சொல்லிக்)
தன்மதமே பெரிதாமென் றார்க்கும் –பிறர்
தன்மதத்தின் வளர்ச்சிகண்டு வேர்க்கும்!
பொன்மனத்தைப் புதைகுழியாய் ஆக்கும் –இந்தப்
புல்லர்களால் தடம்புரளும் நாக்கும்!
(யார்சொல்லிக்)

திங்கள், 31 மே, 2010

கரிகாலன் ஈற்றெடுப்பு! (12)



நலிவு புரிந்தும், நமைத்தடை செய்தும்
களிக்கின்ற காடையர் காண –உலகம்
வியக்கும் விதத்தில் விரிநீர் நடுவில்
இயக்கம் வளர்த்தாய் இயன்று! (111)


இயல்வது செய்தெம் இனத்தவரைக் காக்க
முயல்வது போலும் மொழிவார் –முயல்வதெம்
மக்களை மாய்க்கும் வழியறிய வேயந்தக்
குக்கலைக் கொல்வதுன் கோள்! (112)

குக்கள் –நாய்கள்; கோள் –குறிக்கோள்.

கோரிக்கை வைத்தும் கொடுத்திடார்; எம்மக்கள்
வாரிக்கை கூப்பியும் வந்துதவார்; -சீறித்
தடைபோடும் ஆங்கு நுகர்பொருட்கே; மீறி
நடைபோடும் நம்மினம் நன்கு! (113)


நன்றாக வாழ்ந்தகுடி நாடற்ற சிங்களர்கள்
சென்றங்கு சேர்ந்ததனால் சீரிழந்தார் –இன்றளவும்
கன்னித் தமிழினம் கண்ணீர் வடிக்கிறதே!
எண்ணிமுன் னேறும்நாள் என்று? (114)

எண்ணித் துணிந்தாய்! எடுத்தடி வைத்துவிட்டாய்!
திண்ணிய போர்மரபைத் தேர்ந்தீழ –மண்ணில்
கடற்படையும் வான்படையும் கட்டி எழுப்பித்
தடையகற்றி ஆண்டுவந் தாய்! (115)

தாயானாய் தந்தையும் தானானாய் மூத்தோர்க்குச்
சேயானாய்; பாவலர்க்குப் பாப்பொருள் –நீயானாய்;
பட்டினி பஞ்சத்தைப் பார்த்தகற்றிப் பார்புகழ
விட்டினி(து) ஆண்டாய் விழைந்து! (116)

விழைந்து* கொடுத்திடினும் வெல்ஈழ நாட்டில்
குழைந்து பெறுவார் இலரே! –உழைத்துப்
பெறுவார் பொருளன்றிப் பின்சென்றால் ஐயம்*
தருவார் எனவிழையா தார்! (117)

விழைதல் –விரும்புதல்; ஐயம் –பிச்சை.


தாங்கிப் பிடிக்க தலைவன்நீ உள்ளதனால்
ஏங்கித் தவிப்பார் எவருமில்லை; -ஆங்கெவரும்
ஐயம் இடுவதில்லை; அண்டிப் பெறுவதில்லை;
கையிரண்டை நம்பியதால் காண்! (118)

கண்டு வியந்தேற்றும் காசுள்ள நாடுகளும்
கொண்டால் இவன்போல் கொளவேண்டும் –மன்னனென
ஏற்றும் பலஇனமும், ஏக்கமுறும் சிங்களமும்
மாற்றம் நிகழ்த்தியநீ மன்!* (119)

மன் –மன்னன்.

மன்னே! மறனே! மருள்நீக்கும் மாமதியே!
அன்னே!* எமைக்காத்(து) அருள்வோனே! –உன்னால்
அறனும், அறிவும், அருள்மிகும் அன்பும்,
மறனும் வளர்த்தோம் மனத்து! (120)

அன்னே –அத்தகையவனே.
அகரம் அமுதா

வெள்ளி, 28 மே, 2010

கரிகாலன் ஈற்றெடுப்பு! (11)


உவக்காண் உடலின் உறுப்பிழந்தோர் ஓலம்;
இவக்காண் இறந்தோரை என்றே –உவப்பான்
உலங்கூர்தி ஓட்டுநனும் உள்ளிருக்கும் மற்றை
விலங்கும்ஆம் என்னும் விரைந்து! (101)

விரட்டிவரும் வான்படையை வீழ்த்த விரைந்துன்
முரட்டுப் படையர் முனைந்தார் –திரட்டி
அடித்ததில் ‘‘நாயக’’ வான்தளம் வீழும்
வெடித்(து)உலங்(கு) ஊர்திபல வெந்து! (102)

நாயக –கட்டுநாயக வான்படைத்தளம்.

வெந்து தணிந்ததில் விம்மினர்; வீங்கினர்;
நொந்து நொடிந்தனர் நோக்கிலார்; –வந்து
அமைதி உடன்படிக்கை ‘நார்வே’ அமைக்க
தமைநொந்து கொண்டனரே தாழ்ந்து! (103)

தாழப் பிறந்தோர் தரைமீதில் பல்லாண்டு
வாழப் பிறந்தயெமை வாட்டினார் –பாழும்
சிறுமதியர்க்(கு) இந்தச் சிறுசெயலை நீயே
முரசறைந்து சுட்டினாய் முன்பு! (104)

முன்னே அமைதி முரசினொலி ஓயும்முன்
பின்னே படைநடத்திப் பாய்ந்திடுவார் –என்னே
அமைதி குலைத்தாயென்(று) ஆங்கவரைக் கேட்க
உமையன்றி வேறிலரே ஓர்ந்து! (105)

ஓர்ந்து பிரித்தார்நம் ஒப்பில் படையணியை;
சேர்ந்தான் ‘அருளன்*’அச் சீயருடன் –நேர்ந்த
பழியறியும் பண்பில்லான் பாழும் வழிசென்(று)
இழிந்தோர்க்(கு) உதவினனே இங்கு! (106)

அருளன் –கருணா; சீயர் –சிங்கத்திடமிருந்து பிறந்தவராகச் சொல்லிக் கொள்கின்ற சிங்களர்.

இங்குன் படைப்பிரிவை ஏற்று நடத்தியவன்
அங்குளவு சொல்லி அடிவீழ்ந்தான் –எங்கும்
இவன்போல் இரண்டகனை இவ்வுலகம் காணா;
இவன்போல் இவனே எனும்! (107)

எடுத்தகுறிக் கோள்வழி ஏகா(து) அதனைக்
கெடுத்த அருளனில் கேடால் –விடுதலைப்போர்
நட்டாற்றில் தத்தளிக்கும் நாவாயைப் போலாச்சே!
எட்டாக் கனியாச்சே ஏன்? (108)

ஏற்றிப் பிடித்தார் இனப்பகையை; இந்தநிலை
மாற்றத் துடித்த மறவனுனைத் –தூற்றித்
தடைபோடும் மண்ணுலகம்; தாங்கியதை வென்று
நடைபோடும் நம்மியக்கம் நன்கு! (109)

நன்முறையில் வாழாத நாடற்ற சிங்களரைத்
தன்வலியால் வெல்லும் தகையாளா! -உன்னால்
நிலைத்திட்ட இன்ப நிறைவாலெந் நாளும்
நலங்கண்டோம் இல்லை நலிவு! (110)

அகரம் அமுதா

செவ்வாய், 25 மே, 2010

சங்கத் தமிழனைத்தும் தா!


கரையென்னும் மன்னவனைக் கட்டி அணைக்கத்
திரையென்னும் கைநீட்டித் தீதில் –நுரையென்னும்

முத்தம் இடுகின்ற மூவாக் கடலே!நல்
முத்தம் பிறக்கும் முதலிடமே! –மொத்தஉடல்

உப்பாய் விளங்கும் உவரியுனை நாடியவர்க்(கு)
உப்பிடும் வள்ளலே! ஓங்குமழைக்(கு) –அப்பனே!

நீரலையைப் பேரலையாய் நீட்டி நிலமழிக்கப்
பாரினிலே வாய்த்த பகையரசே! –நேரெதிர்த்(து)

அந்நாளில் எங்கள் அருங்குமரிக் கண்டத்தை
எந்நாளும் தோன்றா இடரலை –தன்னால்

அழித்துக் களிப்புற்(று) அருந்தமிழ் நூல்கள்
செழித்த சுவடழித்துச் சென்ற(து) –எழிலாமோ?

பண்ணுக் கினியமொழி பால்மழலைக் கேற்றமொழி
எண்ண உவகைதரும் இன்பமொழி –மண்ணுலகில்

முன்தோன்றி மூத்தமொழி முச்சங்கம் கண்டமொழி
தன்னேரில் லாத தமிழ்மொழியாம் –நன்மொழியின்

எண்ணிறந்த ஏடழித்(து) ஏதும் அறியாத
பெண்ணெனவே வீற்றிருத்தல் பேறாமோ? –கண்ணினிய

எங்கள் தமிழழித்த இன்கடலே! நீயழித்த
சங்கத் தமிழனைத்தும் தா!

அகரம்.அமுதா

வெள்ளி, 21 மே, 2010

சிலையோ? கொடியோ?


சிலையோ? கொடியோ? செழுமாங் கனியோ?
கலைமான் உருவோ? கடல்மீன் வகையோ?
இலையோ எனநான் வினவும் இடைமேல்
மலையோ? மலரோ? மறைத்தாய் அணங்கே!

நாட்டைப் பிடித்து நலிக்கும் வறுமைக்
கோட்டின் பிடியில் கொடியாம் இடையே
மாட்டி உழல மணிமார் பகமோ
மேட்டுக் குடிபோல் மிகவாழ் கிறதே!

அடிமேல் அடிவைத் தகலும் பொழுதிற்
கொடிமேல் கனிகள் குலுங்கும் அழகில்
அடியே! எனைநான் மறந்தேன் இழந்தேன்
பொடிமண் விழுந்த புழுவாய் நெலிந்தேன்

இருநீள் விழியால் இவன்தோள் அளக்கும்
அருமாங் கனியே! அழகின் அழகே!
தருவாய் உனையென் தளிர்க்கை சேர்ப்பாய்
கருவாய் உனையென் கவியில் வார்ப்பாய்!


அகரம் அமுதா