கொடுத்துச் சிவந்த
கொடைஞரின் கையாய்
வெடித்துச் சிதறிடும்
அடித்த இடச்சிவப்பாய்
அந்தி சிவக்கும்
படிக்கு நடந்ததென்
ன?
நடந்து கடந்த
நலிவால் கதிரும்
கிடந்து சிவந்து
கிழிய - படர்குருதி
அம்மாஅவ் வந்தியென்பர்;
ஆன்றச் சிவப்பழகு
செம்மாந்த வானின்
சிரிப்பு!
சிரிக்கும் சிலையின்
செழிப்பொடு செம்மண்
பரப்பின் நிறமும்
படர்வான் - விரிப்பழகை
அன்ன மெதுநடையார்
அங்கை மருதாணி
என்னல்செவ் வந்திக்(கு)
எழில்!
எழுமந்திப் போழ்தின்
எழில்சொல்ல ஒல்லா(து)
அழுமென்றன் உள்ளம்
அடடா! - தொழுகின்றேன்
விண்ணில் நிறங்களின்
வெற்றித் திருவிழா
கண்முன் தெரிகின்றக்
கால்!
காலைக் கதிர்வளர்ந்து
மாலை தனில்முதிரச்
சோலைப் பழச்சிவப்பாய்த்
தோற்றமுறும் - ஆலைபடு
செங்கரும்பின் தீஞ்சாறாய்ச்
சிந்தும் நிறப்பொழிவால்
அங்கரும்பும் அந்தி
அழகு!
அன்றொருத்தி பிய்த்தெறிந்த
அம்கொங்கை யால்மதுரை
நின்றெரிந்த காட்சியினை
நேரொக்கும் - என்றென்றும்
கீழ்வானம் பிய்த்தெறியும்
செங்கதிரால் மேல்வானம்
பாழ்பட்டு வெந்தழிதல்
பார்!
பாராண்ட பத்துத்
தலைவேந்தோ கீழ்வானம்?
சீரான் இராமன்போல்
செங்கதிரைப் - போராடி
மீட்ட உடன்தீயின்
மேலேற்றிப் பார்க்கிறதே
மீட்டுவந்த மேல்வான
மே!
மேனி கருகாமல்
மேலெழுந்த சீதையைப்போல்
வானில் கதிர்காலை
வந்தொளிரும்; - கானில்
கடுந்தீயை மூட்டுகின்ற
காற்றெனவே மேகம்
தொடுமந்தித் தோற்றத்தில்
தோய்ந்து!
தோயுங் குருதியுடன்
தொப்பென்று வீழ்கின்ற
காயுங் கதிரவனைக்
கண்டவுடன் - தாயும்
கழுகதன் குஞ்சுமெனத்
திங்களும் மீனும்
எழுகின்ற அந்தி
எழில்!
எழிலந்தி வானத்தில்
ஈழத்தைக் காய்ச்சி
வழிந்தோட விட்ட
வகையாய்ச் - சுழித்தோடும்
தேன்பாகின் ஆறாய்த்
தெறிக்கும் நிறந்தேவர்
கோன்பாருக்(கு) ஈந்த
கொடை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக