திங்கள், 1 டிசம்பர், 2025

இறகுப் பந்துவிடு தூது!

 

காற்றில் எழுந்து
கணக்காய் நனிவிரைந்து
மாற்றார்க்குத் தப்பிவிடின்
மண்வீழ்ந்து - தோற்றாராய்
ஆக்கத் தெரிந்த
அழகிறகுப் பந்தே!என்
ஏக்கமறிந் தென்னவள்கண்
ஏகு!
ஏகும் முனமென்
இளநெஞ்சைத் தொட்டுப்பார்
வேகும் அவள்நினைவின்
வெப்பத்தால் - ஆகம்
இழைபோல் இளைத்த
இவன்நிலையைச் சொல்லி
அழைப்பாய் அவளைச்சென்
றாங்கு!
ஆங்கவளைக் கண்டால்
அருங்கதைகள் பேசிப்பின்
தேங்குவளைக் கண்ணாட்குச்
சேவைசெய் - பாங்காய்ப்பின்
என்னிலையைச் சொல்க;
எழுங்காதல் மிக்குடையாள்
தன்னிலையைச் சொல்வாள்
தளர்ந்து!
தளர்ந்து தனித்துத்
தவிக்கின்றேன்; நீபோய்
வளர்ந்தமுலை மாதை
வரச்சொல் – குளம்வாழ்
மரைமுகத் தாளும்
மறுப்பாள் எனிலோ
இறப்பான் இவனென்
றியம்பு!
இயம்புங்கால் அன்னவளின்
இன்முகத்தை நோக்கு
மயங்கும் விழிகள்;
மருள்வாள்; - தயங்காதே!
நண்டுறை நீர்த்துறையில்
நானுள்ளேன்; என்னுயிரோ
ஒண்டொடி தன்சொல்லில்
உண்டு!
உண்டா எனக்கேள்
உறுகாதல் என்மீதிற்
பெண்டாள் இலையென்னாள்;
பின்பென்ன? - பண்டென்
உளங்கள வாடி
உவந்தாள்தன் மேனி
வளங்கள வாடுகிறேன்
வந்து!
வந்தாரக் கட்டி
வளஞ்சேர்க்கச் சொல்தன்னைத்
தந்தாலே என்னுயிர்
தங்குமெனும் - அந்தப்பேர்
உண்மையினைச் சொல்லி
உளமறிந்து வா!இந்த
நன்மையினைச் செய்க
நயந்து!
நயந்தேன்; அவளின்
நறுந்தேன் உடலை
வியந்தேன்; இதனை
விளம்பத் - தியங்குமென்
ஆவியுண்ணும் கண்ணாள்
அருகில் இருந்தணைக்கத்
தூவிறகுப் பந்தே!போ
தூது!
தூதாக நீயும்அத்
தோகை இடஞ்செல்லத்
தோதாவாய் என்பதனால்
சொல்லிவைத்தேன் - போதாயோ?
மெல்லப்போ கின்ற
மிறல்பந்தே! பெண்நெஞ்சை
வெல்லப்போ கொஞ்சம்
விரைந்து!
விரைந்துநீ போய்என்
விருப்பம் உரைப்பாய்
கரந்தமனத் தாளவளின்
காதில் - சுரந்துவரும்
வாயெயிற்றின் சாற்றில்
வழுக்கிவரும் சொல்லேயென்
காயத்தை வாழ்விக்கும்
காற்று!
அகரம் அமுதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக