திங்கள், 1 டிசம்பர், 2025

அவன் கவியிலையாம்!


அவன் -
ஏடகம் நடத்தும்
நாடகம் என்பது -
தவ்வித் தாவும்
நவ்வியை ஒத்தது...
விருத்தம் காணும்
அருத்தம் என்பது -
தண்டகம்
தண்ணீரில் வைத்து
முகம் காட்டும்
முண்டகம் ஒத்தது...
அவன் -
கன்னல் பற்றிக்
கவிதை கழறினால் -
கேட்போர்
காதுகள் இனிக்கும்;
விழிநீர் பற்றி
விருத்தம் விரித்தால் -
காண்போர்
கண்கள் பனிக்கும்;
தீயைப் பற்றிச்
செய்யுள் செய்தால் -
படிப்போர் பார்வை
பற்றித் தகிக்கும்;
பனியைப் பற்றிப்
பாக்கள் புனைந்தால்
வெந்த நெஞ்சம்
வெப்பைத் தணிக்கும்;
அவன் -
தவழும் வயதிலும்
சந்தம் தீட்டியவன்
விருத்த வயதிலும்
விருத்தம் விரிப்பவன்!
அவன் தீட்டினால் -
கலிப்பா
களிப்பாகும்...
ஆசிரியப்பா
ஆச்சரியப்பா ஆகும்!
பாவலம் கொழிக்கும்
பா நிலம் -அவனுள்
பாவலம் இல்லையெனப்
பகருவதோ -இருகண்கள்
குருடான
கோகுலம்?
நூல்இடை ஒசியும்
நுண்தமிழை -
நூல்நடை கொண்டு
நுகர்ந்தானை -
கவியிலை எனக்
கழறுவதோ -ஓர்
கால்நடை?
பழத்தைப் பற்றிப்
பழிசொல் பகர்வது
காலத்தால் கனியாக்
காயா?
ஞாயிறைப் பற்றி
நவைகள் நவில்வது
ஞானத்தால் தெளியா
நாயா?
எட்டைப் பற்றி
எள்ளித் திரிவது
எட்டிற் சிறிய
ஏழா?
இரத்தம் பற்றி
இழிந்தன உரைப்பது
சிரங்கில் வழியும்
சீழா?
வாளியால் முகப்பதால்
வங்கம் வற்றியடுமா?
ஈயிறகின் காற்றுப்பட்டு
இமயம் இற்றிடுமா?
கவி
குன்றேறி உலுக்குவதால்
ஆடாது -
அசையாது புவி!
மறம்
மல்லுக்கு நிற்பதால்
அடங்காது -
ஒடுங்காது - அறம்!
தீவட்டி கொண்டு
தீய்ப்பதால்
வாரணம்
வண்ணம் மாறா; -அவ்
வண்ணம் மாறா
வாரணம் நேரன்றி
பாத்தென்றல் என்னும்
பசுந்தென்றலே - நீ
வேறா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக