புதன், 2 ஏப்ரல், 2008

மேகம்!

காற்றுத் தறியில்
கானல் இழைகொண்டு
நேர்த்தியாய் நெய்த
நீர்க்கம்பளம்...

தாரகை வண்டுகளைத்
தனக்கிரை ஆக்கிட
நீரென்னும் சிலந்தி
நெய்தவலை...

கைநீட்டி வான்தொடக்
கரைதாவும் அலைகள்
மெய்சோர்ந்துத் திரும்பி
மேனி வியர்வையால்
நீலவானுக் கெழுதும்
நீளுரைமடல்...

காலனாம் காற்றினால்
கறைகின்ற கற்பூரம்...

சூழ்மின்னலற் சுடரினால்
உருகும் மெழுகு...

ஆழ்கடற் கிழவியின்
அழுக்குச் சேலை...

வான வெற்றிலையில்
தடவும் சுண்ணாம்பு...

கானென்னும் வண்டை
நாடும் தேன்மலர்...

துடுப்பில்லா ஓடம்...
தூணில்லா மண்டபம்...

யாரும்எடுக்க இயலாத
இளவம் பஞ்சு...

ஆழிக் குயவன்
வனைந்த நீர்க்குடம்...

தென்றல் இடறத்
தடுக்கி வீழ்ந்திடினும்
மின்னற் கொடிகாக்கும்
குமரன்...

என்றென்னை
கற்பனை கவிஞர்கள்
கவிதை வரிகளில்
சொற்புனைந் துவமை
சொல்வர்!

நானோ
பசுமை தேசத்தில்
பறக்கும் கொடி...

பச்சை வனங்களின்
பந்தல்...

நானே
மழையின் தாய்...
முத்தின் தந்தை...
பிழைகாண முடியாப்
பெரும் பிழைநான்...

கழைக்கூத் தாடிநான்!
கழையடித் தாடுவேன்!
இசைமழைக் கோட்டையில்
இருந்துல காளுவேன்!

மீன்கள் நீந்தா
மலட்டுநீர் நிலைநான்...
தேன்'கள்' சொரிந்திடும்
தெங்கிளம் பாளை...

மரங்கள் என்றன்
மழைத்துளிகளின் பிடிமானம்...
வயல்கள் என்றன்
வருகைக்கு வரவேற்பு...

மேடையாம் என்மீதேறி
முழங்கும் மின்னலுக்கு
மேடைநான் களைந்தபின்பே
வண்ணவிற் பொன்னாடை
போர்த்துமந்த
வான்போல் பலரையென்
வாழ்நாளில் காணுகின்றேன்...

தேன்போல் சுவைகூட்டி
திசையெங்கும் மேவிப்
பொழியும் காலங்களில்
போவென்று குடைபிடிப்பார்
பொய்க்கும் கோடையிலோ
வான்பார்த்து ஏங்கிடுவார்!

அகரம்.அமுதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக