செவ்வாய், 29 ஏப்ரல், 2008

தீக்குச்சி!

தலையோடு மருந்திருந்தும் தீக்குச் சிக்கு
தலைக்கனம் இருப்பதுவாய்த் தெரிய வில்லை!
தலையோடு மருந்துள்ள கார ணத்தால்
தலைப்பற்றிச் சுடர்விட்டு சிதைந்து மாளும்!

உயிர்பிரிந்தால் எரிப்பதுவே உலக நீதி...
உயிர்பெறவே எரிகிறதே உணர்த்தும் சேதி?
உயிர்பெற்று விளக்கிற்கே ஒளிவ ழங்கி
உயிர்பிரிந் திறப்பதுவோ இதற்கு நீதி?

சிலநொடிகள் வாழ்ந்தாலும் சிரத்தை யோடு
செய்கிறதே ஒளிஈகை விளக்கிற் கெல்லாம்!
நிலையில்லை வாழ்வென்று தெரிந்த பின்னும்
நிமிர்ந்தபடி நின்றெரியும் துணிவால் மேலாம்!

பாரதத்துக் கர்ணனப்பா! சாகும் போதும்
பார்த்தறிந்(து) ஈகின்ற பண்பி னாலே!
காரொத்த ஈதலினால் கடையேழ் வள்ளல்
கண்முன்னே தீக்குச்சாய் நிற்கக் கண்டேன்!

சிரத்தையொடு கையாள சுடரைச் சிந்தும்...
சிந்தைக்கொஞ் சம்தப்பத் தீங்கே மிஞ்சும்...
மறம்கற்ற அறமென்பேன் இதனை கண்டீர்...
மாண்புடனே கையாள்வர் நாளும் பெண்டிர்...!


அகரம்.அமுதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக