சனி, 8 மார்ச், 2008

விழி!


சுற்றும் சுழலும் பம்பரமோ? –பனி
சொட்டும் மார்கழி இரவுகளோ?
வெட்டும் மறையும் மின்னலுமோ? –கணை
வீசும் காமன் வில்தானோ?

கனவுகள் சிறைப்படும் சிறையறையோ? –பல
காட்சிகள் காட்டிடும் திரையறையோ?
மௌனம் பேசும் சித்திரமோ? –மணி
ஊஞ்சல் ஆடும் ரத்தினமோ?

மையைத் தீட்டும் காகிதமோ? –பல
பொய்கள் தீட்டும் புலவருமோ?
மெய்மேல் வரைந்த ஓவியமோ? -இது
மெய்யோ? இதன்பேர் காவியமோ?

பூமனின் தூரிகை உடைந்ததுவோ? –அது
புருவத்தின் கீழ்வந்து விழுந்ததுவோ?
தாமரை வடிவில் தா-மரையோ? -இமை
சாமரம் வீசிடும் அரசவையோ?

இமைக்கை காட்டிக் காட்சிகளை –மன
இருட்டறைக் கழைக்கும் விபச்சாரி!
நமைப்பிறர் அறிந்திட அகம்காட்டி –தொடர்
நாடகம் ஆடிடும் கண்ணாடி!

பொருள்: பூமன்-பிரம்மன்; தா-மரை-தாவுகின்றமான்;

அகரம்.அமுதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக