திங்கள், 21 ஏப்ரல், 2008

ஆடி அடங்கும் வாழ்க்கையடா!

இரவில் இருவர்
இயற்றிய ஆட்டத்(து)
உறவால் ஆடத் தொடங்குகிறான் -இவன்
இறக்கும் வரையில்
இளமை தொடங்கி
இனிதே ஆடி அடங்குகிறான்!

தினவெ டுத்தவன்
தோள்கள் தளருமுன்
துடியிடை மீதே ஆடுகிறான் -மிக
உணர்ச்சி மிக்கவன்
உள்கோ பத்தை
உலவ விட்டுப்பின் வாடுகிறான்!

முகத்தின் முன்னே
முறுவ லிப்பவன்
முதுகில் குத்தி ஓடுகிறான் -தன்
அகத்தில் தீதை
ஆட விட்டவன்
அடுத்தவன் வளர்ச்சியில் வாடுகிறான்!

தனமொன் றினையே
தகுதி யென்பவன்
தப்பின் வழியை நாடுகிறான் -நற்
குணமென் பதையே
குழியில் இட்டவன்
கோபுரம் மீதே வாழுகிறான்!

சுயநல மதையே
சூத்திர மாக்கிச்
சுகக்கணக் கொருவன் போடுகிறான் -மதி
மயங்கி மதுவில்
மனதை விட்டவன்
வாழ்வை தொலைத்துத் தேடுகிறான்!

விதியின் வழியில்
விருப்ப முற்றவன்
'விதியே எல்லாம்' என்றிடுவான் -தன்
மதியி ருப்பதை
மறந்து போனவன்
வாழ்வே சுமையென வைதிடுவான்!

மோகப் போய்தினில்
மெல்லிடை தனிலே
சொர்க்கம் கண்டவர் பலருண்டு –தன்
தேகம் தளர்கையில்
தளிரிடை யதையே
நரகம் என்பவர் சிலருண்டு!

ஆடி அடங்கும்
வாழ்க்கை இதையே
வாழ்ந்திட எவனும் கற்றானா? –உள்
ஆடும் ஆசையை
அகற்றும் ஆசையால்
ஆசையை புத்தன் வென்றானா?

பிறப்பில் தொடங்கும்
ஆட்டம் இதனை
இறப்பில் தானே முடிக்கின்றான் -உடன்
இறப்பில் இவனே
முடித்த ஒன்றை
அடுத்தவன் ஆடத் துடிக்கின்றான்!


அகரம்.அமுதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக