செவ்வாய், 29 ஏப்ரல், 2008

காக்கைகளின் ஒப்புரவு!

கார்முகிலும் காக்கைகளும் நிறத்தால் ஒன்று;
கனிவுடனே ஈகின்ற குணத்தால் ஒன்று;
சேர்கின்றத் துளியையெல்லாம் வையத் திற்கே
வார்க்கின்ற கார்முகில்போல் காக்கைக் கூட்டம்
ஓர்பருக்கை யானாலும் பகிர்ந்தே உண்ணும்;
ஒப்புரவாய் வாழ்வதனை உயிராய் போற்றும்;
நேரில்லா நற்குணங்கள் நிறையப் பெற்று
நிலமிசை நீடுவாழும் காக்கைப் போல்யார்?

ஐயமிட் டுண்ணென்றே ஒளவை சொன்னாள்!
ஐயன்மீர்! அவ்வுரையின் பொருள்தான் என்ன?
“கையளவே உண்டெனினும் ஈதல் தன்னை
கடுகளவே னும்செய்க” என்ப தேயாம்!
மையன்னக் காக்கைகளைக் கண்டே யன்றோ
தையலவள் செப்பிவைத்தாள்! சமத்து வத்தை
வையத்தில் வாழ்விக்கும் உயிர்கள் தம்மில்
மைவண்ணக் காக்கைகளே முதன்மை யன்றோ!

அகரம்.அமுதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக