புதன், 2 ஏப்ரல், 2008

கருத்ததேன் முகிலே!


வாகாய்வெண் ணிறத்தை மாற்றி
வலம்வந்து மழைக்கும் காரே!
ஆகாய வீதி யெங்கும்
ஆவியாய் அலையும் நீரே!
போகாத நகரம் எல்லாம்
போயுலவிப் பார்த்து விட்டு
வேகாத வெயிலில் மேனி
வியர்த்திடும் மேக தேரே!

காசிரும் மனங்கள் போலே
கருத்ததேன் முகிலே? நெஞ்சில்
மாசெதும் வைத்திட் டாயோ?
மாற்றமேன் முகத்தின் மேலே?
பேசரும் பஞ்சின் வண்ணம்
பிறங்கிடும் மேனி வண்ணம்
ஈசனின் நீல கண்டத்(து)
இணைநிறம் உற்ற தேனோ?

வெய்யிலில் நடந்த தாலே
விரைந்துநீ கருத்திட் டாயோ?
மையலை வழங்கு முன்றன்
மணிமுலை இரண்டி னோடும்
தொய்யிற்குப் பதிலாய் கண்ணின்
மையெழுதி னாயோ? மையால்
மெய்யெழுதி னாயோ? உன்றன்
மெய்வண்ண மாற்றம் ஏனோ?

பார்க்கவெள் ளைக்கா ரன்போல்
பால்வண்ணம் கொண்ட போதும்
நீக்ரோவின் நிறத்தின் மீதே
நீங்கிடாக் காதல் தானோ?
மாக்களாகி மாந்தர், மேனி
வண்ணத்தால் பிரியா வன்னம்
சேர்க்கத்தான் வண்ண மாற்றம்
தேகத்தில் செய்கின் றாயோ?

அகரம்.அமுதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக