புதன், 27 அக்டோபர், 2010

மாவீரர்! -உரைப்பா! (1991)

இந்தநாள் நமது வீரர்
இன்னுயிர் ஈகம் செய்து
நந்தமிழ் இனத்தைக் காக்க
நடுகற்க ளான தெண்ணிப்
புந்தியில் அவரை வைத்துப்
போற்றுவோம்! குறிக்கோ ளுக்காய்த்
தந்தனர் உயிரை அந்தத்
தகைஞரை வணங்கச் செய்வோம்!

வியர்வை,கண் ணீர்செந் நீரால்
விளைந்தயிவ் விடுத லைப்போர்
வியத்தகு குறிக்கோள் வாழ்வில்
மிகுப்பல இடுக்கண் துய்த்தும்
அயர்வுறா வீரர் கண்ட
அம்கன விவையெல் லாமும்
இயல்புறு வெளிப்பா டாக
இயைந்ததால் பிறந்த தன்றோ?

செருக்களில் எம்போல் பாரில்
தேர்வுகள்* எதிர்பா ராத
திருப்பங்கள் நிறைந்த போரைத்
திறமுடன் கண்டா ருண்டோ?
நெருக்கடி நிறைந்த தாயும்
நீண்டதும் கடின மாயும்
இருக்கிற செலவை* எங்கள்
இயக்கமே தொடரக் காண்பீர்!

ஏற்பிலா இரண்ட கத்தோ
டேமாற்றம் எம்மைச் சூழக்
கூற்றெனப் பகைவர் பாயும்
கொலைக்களம் ஒருபு றம்மும்
வேற்றவர் வன்க வர்பை
விரட்டிட மறுபு றம்மும்
ஆற்றொணா அழிவின் எல்லை
அடைந்துமே மீட்சி கண்டோம்!

அப்பெரும் புயற்கு வெற்பாய்
அசைவுறா நெஞ்சத் திட்பம்
மெய்ப்புறு தூண்க ளாக
மிசையெழுந் தியக்கம் தாங்க
இப்பெரும் போரில் நந்தம்
இணையிலா வீரர் செய்த
செப்பரும் செயலால் அன்றோ
செருவிடை நிமிர்ந்து நின்றோம்!

உளத்திடம் ஊன்று கோலாய்
உதவிட; சூழ்ச்சி வென்று
விளிவிலாக் குறிக்கோள் ஒன்றே
விடுதலைச் செலவில் வெற்றி
அளிப்பதைத் துய்த்த றிந்தே
அறைகிறேன்; செந்நீ ராலும்
விளிவொடு* துன்பத் தாலும்
விளைதலே விடுத லையாம்!

தின்னுணா தடையோர் பக்கம்
செருப்படை* இன்னோர் பக்கம்
இன்னொரு நெருக்க டிக்குள்
எமைவிட முனையும் மாணார்*
சென்றுயாழ் நாட்டைச் சூழ்ந்து
செய்தடை யாலே ஊனுக்
கென்றுமில் லாப்பஞ் சத்தை
எம்மக்கட் கியற்றி னாரே!

இடக்குகள் இயற்றி எம்மை
இடுக்கணுள்* தள்ளி நாளும்
அடக்குமு றையாம் தீயில்
அமுக்கினார்; இறப்பின் நீழல்
படுத்துறங் கிடுமெம் மையிப்
பட்டினி என்ன செய்யும்?
விடுதலைப் பசியுற் றார்க்கு
வேறொரு பசியுண் டாமோ?

அடுகளக் கருவி ஏந்தி
அமைதிசை கையுங் காட்டும்
கெடுமனச் சிங்க ளர்காள்!
கிளர்ந்தெழும் அமைதி யோடே
அடுகளப் போருக் கும்நாம்
அணியமே;* இரண்டில் எத்தை
நெடுமனத் தேற்கின் றாயோ
நேரதை நாமேற் கின்றோம்!

எழுந்தயிப் போராட் டத்தில்
எம்பக்க நயன்மை தன்னைத்
தொழுதுநாம் பார்க்குச் சொல்லத்
தோதான வாய்ப்பை நல்கி
அழுத்தமும் மேலாண் மையும்
அடக்குமுறை கட்டுப் பாடும்
ஒழிந்தநற் பேச்சுக் கென்றால்
உரை;அணிய மாக உள்ளோம்!

போர்வெறி கொண்டோ மில்லை;
போய்இனப் பகையும் உள்ளோம்;*
பாரந்த சிங்க ளர்நம்
பகைவராய்க் கருத வில்லை;
நேரவர் நாட்டை நாங்கள்
நெஞ்சினில் ஒத்தேற் கின்றோம்;
நேரவர் பண்பாட் டைநாம்
நேசித்தோம்; இடறி யற்றோம்!

அங்கவர் வாழு தல்போல்
அழகுறும் ஈழ நாட்டில்
மங்கலம் பொங்க நாமும்
வாழவே விரும்பு கின்றோம்
இங்குதே சியயி னம்மாய்
எழுவதைப் பொருத்தி டாத
சிங்களர் ஒத்தி சைவைச்
செப்பும்நாள் அமைதி தோன்றும்!

தன்படை வலியால் எம்மின்
தாயக சிக்கல் தீர்க்க
உன்னினார்;* ஒல்லா* தென்னும்
உணர்விலார்; மேலும் மேலும்
வன்கவர் பாலெம் மண்ணை
வளைக்கவே விரும்பு கின்றார்
முன்பொரு பெரும்ப டைபோல்
முகமுடை படுவா ரன்றோ?

என்னுயிர் ஈழ மக்காள்!
இப்பெரும் செலவில்* நம்மை
நண்ணிடும் சோர்வு; நாளும்
நனிசுமை நமைய ழுத்தும்
தன்குறிக் கோளை உன்னித்
தகைவுடை உறுதி யோடு
நின்றிடின் நமையெ திர்க்க
நேரெதிர்ப் படுவார் இல்லை!

நெஞ்சினில் உறுதி பூண்டு
நேரெதிர்த் தடுக ளத்தில்
துஞ்சிய மறவர் வாழும்
தூயகல் லறையொ லிக்கும்
விஞ்சரும் விடுத லைப்பா
விளம்பிடும் உறுதி தன்னை
விஞ்சிய கருவி இல்லை
விரைந்துமனத் தேற்போ மாக!

அகரம் அமுதன்

வியாழன், 21 அக்டோபர், 2010

மாவீரர்! -உரைப்பா! (1990)

தன்னுயிர் ஈந்தும் செந்நீர்
தனையீந்தும் ஈழம் காத்துப்
பின்னவர் பின்பற் றித்தம்
பெருமறம் நாட்டு தற்கு
மன்னிய நடுகல் ஆன
மறவரைப் போற்ற நாமும்
உன்னிய நாளே இந்த
உயர்திரு நாளாங் கண்டீர்!

இறுதியை அடைந்த வீரர்
இழப்(பு)அவர் பின்ன வர்க்கே
உறுதியை ஈந்தும் வீர
உணர்வினை ஈந்தும் நெஞ்சில்
கருதிய செயல்மு டிக்கும்
கடமையை ஈந்தும் தங்கள்
இறுதியைப் பொருளு டைத்தாய்
இயற்றி‘நல் லுயிரன்’ ஆனார்!

தன்னின விடுத லைக்காய்த்
தன்னில மீட்புக் கும்மாய்
இன்னுயிர் ஈயும் வீரர்
இணையிலாக் கொள்கை யாளர்!
தன்னலம் பேணா வாழ்வும்
தமருக்காய் வாழாப் பெட்பும்
மன்னிய அவர்தஞ் சீர்க்கு
மற்றொன்றும் ஈடே இல்லை!

விடுதலை வீரர் என்றும்
விளிவதில்; நிகழும் சாவைச்
சடுதியில் சரித்தி ரம்மாய்ச்
சமைக்கிறார்; கொள்கைத் தீயாய்
அடுத்தமா மறவர் நெஞ்சில்
அமர்கிறார்; இனத்தின் மேன்மை
எடுத்துரை சின்ன மாக
எழுகிறார்; புகழ்பே றுற்றார்!

ஓரியர் படைத னையும்
உலகினிற் பெரும்ப டையாம்
ஆரியர் படைத னையும்
அடுகளத் தெதிர்த்து நின்று
வேரிறச் செய்வ கையால்
வியத்தகு வரலா றானோம்!
சீரிய எம்தி றத்தைத்
திசையெலாம் எட்டச் செய்தோம்!

சொல்லரும் இன்னல் கண்டும்
துவண்டிடா மனத்திட் பத்தால்
மெல்லரும் வலிகள் தாங்கி
விடுதலை ஒன்றே கோளாய்
வெல்லரும் படையை வெல்ல
விரைவதும் வென்று வீழ்ந்தும்
கல்லுரு வான வீரர்
கவின்சொலச் சொற்கள் உண்டோ?

என்னுயிர்த் தோழர் எம்மின்
எழிற்றள பதிகள் நெஞ்சில்
மன்னுபோ ராளி கள்தாம்
மறப்போரில் மடிதல் கண்டே
என்னுயிர் சோரும்; தம்மின்
இன்னுயிர் ஈக ரைநாம்
உன்னவே சோரும் நெஞ்சம்
உறுதியோ டுரனும் வைகும்!

உயிரினும் மேல தாய
உயிர்த்தயிந் நாட்டை யெண்ணி
செயிர்க்களம் சென்று மாண்ட
செயல்மல்லர் தம்மை ஈன்றோர்
அயிர்த்திடா தடைவீர் பெட்பை!
அவர்மரித் தாரில் லைநம்
உயர்சரித் திரமே யானார்!
உயிர்த்தெழும் விதையும் ஆனார்!

அடிமைவி ளங்கு டைத்தே
அடல்தனித் தமிழர் காணும்
மிடிமைவி ரட்டி வாழ
விடுதலை ஒன்றே ஆறாம்!
விடிதலை வேண்டும் போரில்
விளிதலும் இயற்கை யன்றோ?
மடிந்தநம் வீரர் வீழ்ந்து
மணிவிதை ஆனார் வாழ்க!

நல்லுயிரன் –சிரஞ்சீவி; மல்லர் –வீரர்; பெட்பு –பெருமை; மிடிமை –துன்பம்.

அகரம் அமுதன்

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

மாவீரர்! -உரைப்பா! (1989)

இன்றிந்நாள் தமிழீழ எழுச்சிக்காய்க் களங்கண்ட
எழிலார் வீரர்
பொன்றியதை நினைவுறுத்தும் புகழ்க்குரிய பொன்னாளாய்ப்
பொலியக் காண்பீர்
பொன்றுந்தன் மறவரினைப் போற்றுகின்ற மாமரபைப்
புவிமேல் நாமும்
பின்பற்றி இந்நாளைப் பெட்புமிகும் நன்னாளாய்ப்
பிறங்கச் செய்வோம்!

இன்றுவரை ஆயிரத்தை எட்டிவிட்டார் தம்முயிரை
ஈந்த வீரர்
என்பதனால் தனித்தனியே எழில்மறவர் நினைவுறுநாள்
எடுத்தல் நன்றோ?
அன்றுமுதன் முதலாய்த்தன் ஆருயிரைக் களப்போரில்
அளித்த சங்கர்
பொன்றியயிந் நாளினையே புகழ்மறவர் நாளாகப்
பொலியக் காண்போம்!

உயிரீகம் செய்தாருள் உயர்ந்தோர்யார்? தாழ்ந்தோர்யார்?
உரிமைப் போரில்
உயிரீகம் செய்தவரை ஒப்புரவாய்க் கண்டிடவும்
ஒருவர் செய்த
உயிரீகம் மேலதெனும் உரைதோன்றா வகையுறவும்
ஒருசார் பின்றி
உயரியயிந் நாளினையே உயிர்துறந்த மாவீரர்க்
கோர்ந்து கண்டோம்!

ஈரமிகு தமிழீழம் ஈன்றெடுக்கப் பிறந்திட்ட
சேய்கள் தம்முள்
வீரமிகு மாமறவர் விளைவதில்லை என்னுமுரை
விரிக்கும் வாய்கள்
சோரமிகப் பலமறவர் தோன்றிவிட்டார் தமிழீழம்
தோன்றும் காலம்
தூரமிலை எனப்பார்க்குச் சொல்லுமிந்த நன்னாளைத்
தொழுவோம் வாரீர்!

அகரம் அமுதன்

புதன், 22 செப்டம்பர், 2010

கரிகாலன் ஈற்றெடுப்பு! (15)


தொடரும் துயரைத் தொலைத்துத் தமிழர்
கடல்சூழ்ந்த நாட்டில் களிக்க -அடல்தனிக்
கோனே! மறவா! கொலைவாள் எடுத்து
வானே புறங்காட்ட வா! (141)

வாவந்தெம் மக்கள் வருந்தும் நிலைமாற்றித்
தாவன்று தெவ்வர் தலைகொய்து -நீவென்று
பாயும் புலிப்படையைப் பார்வியக்க நீநாட்டி
சீயம் தலைதாழச் செய்! (142)

செய்யுள்அச் சீயரின் செந்நீரைப் பாய்ச்சிநாம்
செய்வோம் விளைச்சலைச் சீர்மையுடன் -மெய்யாய்
தமிழர்க் குனைவிட்டால் தக்கதுணை இல்லை
அமிழ்கின்றார் துன்பத்தில் ஆங்கு! (143)

ஆங்குத் தவிக்கும் அருந்தமிழர்க்(கு) ஆறுதலாய்த்
தாங்கிப் பிடிக்க தலைவா!வா! –ஈங்குன்
நெடுந்தோள் நிமிர்ந்தி நெடுவான் வியக்க
அடுவெங் களத்தை அடை! (144)

அடையார்*க் கழிவை அளிக்கும் உரஞ்சேர்
படையாள் பவனே! பரிதுன்* –குடைக்கீழ்
எமையாள் பவனே! எதிரிக் கழிவை
உமையாள் மகனே! உணர்த்து! (145)

உணராப் பதர்கட்(கு) உணர்த்தல் தகுமோ?
துணவாய்* அவரைத் துணிப்பாய்* –தினவால்
திமிருமத் தீயோரைத் தீய்த்துத் தமிழர்
நிமிருமந் நாளை நினை! (146)

நின்போல் எமைக்காக்க நேரொருவன் இல்லையெமை
முன்போல் நலங்காக்க முன்னேவா! –பின்போய்ப்
பகைவர் அழிய படைதோற்று விப்பாய்;
இகல்*நீக்கும் நீயெம் இறை! (147)

இகல் –பகைவர்.


இறைஞ்சி* வருவோர்க்(கு) இனிதருளும் வேந்தே!
நிறைகெட்ட காடையரை நீக்கி –அறைமுரசுக்
கையா! எனையாள் அரசே! எழிற்கதிர்க்
கையா! கடைக்கண்ணைக் காட்டு! (148)

காட்டிக் கொடுத்த கயவன் அருளன்*
நீட்டி உறங்கிடல் ஞாயமோ? –நாட்டிலவன்
வீணாய் உலவுவதும் வேண்டாமே! கொன்றொழித்துக்
காணாப் பிணமாக்கல் காப்பு! (149)

காப்பிட்டுக் காடையரைக் காலன் இடனனுப்பக்
கூப்பிட்டோம் எங்கள் குறைதீர்ப்பாய் –கூப்பிட்டோர்க்(கு)
ஏவலாள் ஆனவனே! எல்லாளா! தாள்பணிந்தோம்
காவலாய் வந்தெம்மைக் கா! (150)

அடையார் –பகைவர்; பரிது –பெரிது; துணவு –விரைவு; துணித்தல் –வெட்டுதல்; இறைஞ்சுதல் –வணங்குதல்; அருளன் –கருணா.

அகரம் அமுதன்

சனி, 18 செப்டம்பர், 2010

கரிகாலன் ஈற்றெடுப்பு! (14)


சிரித்த பிழைப்புப் பிழைப்போர்* சிதற
விரையும் கரும்புலியர் வீச்சில் –எரியும்
அனுரா தபுரம்* அழியத் துடித்தார்
இனியாது செய்குவம் என்று! (131)

என்று முடியுமோ ஈழத் தவர்துயர்
அன்று பிறக்கும் அமைதியிதை –நன்குணராச்
சிங்களர்க்கே நானிலமும் சென்றுதவ போர்க்களத்தில்
எங்களவர்க்(கு) உற்றதுணை யார்? (132)

யாதோர் துணையுமின்றி ஆங்குநீ போர்செய்யத்
தீதோர் வடிவான சிங்களர் –சூதோர்ந்(து)
உனைக்கொன்ற தாய்ச்சொல்லி ஊருக்(கு) உரைத்தார்
நினைக்கப் பொறுக்குதில்லை நெஞ்சு! (133)

நெஞ்சில் வலியோடும் நீர்வழியும் கண்ணோடும்
எஞ்சிய எம்மவரை ஈழத்தே –கஞ்சியின்றி
முள்வேலி யுள்ளடைத்து மூடர் கொலைபுரிந்தார்
அல்லும் பகலோடும் அங்கு! (134)

அங்கெமது மக்கள் அடையும் துயர்சொன்னால்
பொங்கும் விழிநீர் புனலாறாய் -சிங்களர்
போலப்போர்க் குற்றம் புரிந்தார் எவருமில்லை
காலக் கணக்கேட்டில் காண்! (135)

காணாக் கொடுமைபல கண்முன்னே கண்டுமதைக்
காணா துலகம் கடப்பதனால் -நாணாத
நாயனைய காடையர்கள் நாளும் நடத்துகிறார்
தீய செயல்பலவுந் தேர்ந்து! (136)

தேரலரால் எம்மவர் செத்து மடிகின்றார்
நேரிழையார் கற்பிழந்து நிற்கின்றார் -சீரிழந்த
சிங்களப் பேடிகளால் செந்தமிழச் சேய்களும்
தங்கள் உயிர்விட்டார் தாழ்ந்து! (137)

தாழம் இழந்து தவிக்கும் தமிழரைச்
சூழும் இடுக்கண் சொலவொணுமோ? -ஆழம்
தெரியாமல் கால்விட்ட சிங்களர்தஞ் சென்னி
அரியா தகல்வதோ அன்று! (138)

அன்மைச் செயல்செய் தகங்குளிரும் தெவ்வரால்
புன்மை அடைந்து புழுங்குகிறார் -இன்னமும்
எத்தனை தீத்துயர் எம்மவர் காண்பதோ?
புத்தனே கொஞ்சம் புகல்! (139)

புகலிகளாய் ஓரியர் போந்தவந் நாள்தொட்டு
அகதிகளாய் எந்தமிழர் ஆங்கே -நுகர்துயரம்
கொஞ்சமோ? இந்தக் கொடுமைகளைக் காண்பார்கண்
துஞ்சுமோ கீழிமை தொட்டு! (140)

சிரித்த பிழைப்புப் பிழைப்போர் –எள்ளத்தக்க வாழ்க்கை வாழ்கின்ற சிங்களர்; அனுராத புரம் –அனுராதபுரம் வான்படைத் தளத்தைக் குறிக்கிறது.


அகரம் அமுதன்

ஆசிரியர் போற்றுதும்!


அஞ்சில் எமைவளைத்து
அமுதனைய கல்வியினை
நெஞ்சில் நிறைக்கின்ற
நேர்த்தியெலாம் கற்றவரே!

பேசரிய மாண்பெல்லாம்
பிள்ளைகள் எமைச்சேர
ஆசிரிய பணிசெய்யும்
அன்பின் தெய்வங்காள்!

பொற்போடு எமைநடத்திப்
புகழ்மணக்கும் கல்வியினைக்
கற்போடு கற்பிக்கும்
கடமையிற் பெரியோரே!

குன்றளவு கொடுத்தாலும்
குறையாத செல்வத்தை
இன்றளவும் எமக்களித்து
இன்புறும் வள்ளல்காள்!

ஈன்றோரின் மேலாக
எம்நெஞ்சில் நிறைபவரே!
சான்றோராய் எமைமாற்றும்
சாதனைகள் புரிபவரே!

எச்செல்வம் அளித்தாலும்
எச்சமின்றித் தீர்வதுண்டு
மெச்சிநீங்கள் அளித்தசெல்வம்
விளிவின்றி வளருமன்றோ!

அன்னையே தெய்வமென்றும்
அன்பே தெய்வமென்றும்
கன்னின்றோர் தெய்வமென்றும்
கதைகள்பல உண்டெனினும்
பள்ளிக் கூடமெனும்
பண்பட்ட கோயிலின்
உள்ளே எழுந்தருளும்
உயர்தெய்வம் நீங்களன்றோ!

தாய்சொல்ல முதன்முதலிற்
சேய்பேசும் அம்மொழியே
தாய்மொழியாம் என்றெவரும்
சாற்றும் மொழியினையும்
சேய்நாங்கள் தப்பின்றிச்
செப்புதற்குக் கருத்துடனே
ஆய்ந்தறிந்து ஊட்டுகின்ற
அன்னையரும் நீங்களன்றோ!

தரிசை சீர்செய்து
தக்கபடி ஏர்நடத்தி
வரிசை பிடித்துவிதை
வார்த்திடுவர் வேளாலர்
அறிவு நீர்பாய்ச்சி
அகந்தைக் களையகற்றி
செறிவுடையோ ராய்எம்மைச்
செய்உழவர் நீங்களன்றோ!

சிலையின் இறுதிநிலை
சீர்மிகு கண்திறப்பாம்
விளையும் பயிரெமக்கோ
விழிதிறப்பே முதல்நிலையாம்...
எண்ணோடு எழுத்தென்னும்
இருகண்கள் திறக்கின்ற
திண்ணிய பணிசெய்யும்
சிற்பியரும் நீங்களன்றோ!

அன்றாடம் எமைநாடி
அறிவு புகட்டுமுமை
இன்றிந்நாள் எம்நெஞ்சில்
இருத்திப் புகழ்கின்றோம்!

வாழ்நாள் முழுவதையும்
மாணவர் எமக்களித்து
வீழ்நாள் இலாக்கல்வி
விளைக்கும்நீர் வாழியவே!

அகரம் அமுதன்

சனி, 11 செப்டம்பர், 2010

மனம்போன போக்கில்…

கட்டுப்பா டொன்றில்லாக் காட்டாறாய்
        ஓடுகிறாய் கவின்நெஞ் சே!மார்
தட்டிப்போர் வீரனெனத் தாவிக்கு
        தித்தாடித் தருக்கி யேசீர்
கெட்டுப்போ எனஎன்னைச் சிலநேரம்
        தூண்டிப்பின் கிளர்ந்தெ ழுந்து
சுட்டுப்போ கின்றாயே! தொடருமுன்
        விளையாட்டால் தூக்கங் கெட்டேன்!

அகமெனும் பெயரினிலே அமர்ந்தென்னுள்
        நாளும்நீ ஆடு கின்ற
நிகழ்பட ஆட்டத்தில்* நீயியக்குப்
        பிடி*யானேன்; நினைவ கத்தில்*
தகவுடன் காட்சிகளைத் தக்கபடி
        சேமிக்கும் தரவு மாகி
நிகழ்படக் காட்சிகளாய் நிதம்காட்டும்
        ஒளிச்சுருளே!* நீதான் நானா?

மேனியெனும் வன்பொருளில்* விரும்பியிறை
        வன்நிறுவும் மென்பொ ருள்நீ
தீனியென எனைத்தின்னும் தீநுண்மி*
        ஆகின்றாய் சிலநே ரத்தில்
மேனியினைக் காக்கின்ற நச்செதிர்ப்பி*
        யாயறிவு மிளிர்ந்த போதும்
நானிதுநாள் வரையுன்றன் நல்சூதம்*
        முழுதறியேன் நவிலு வாயோ?

ஆய்ச்சியர் தம்மிருகை அன்னவறி
        வும்நீயும் அமர்ந்தி ழுக்க
தேய்புரிக் கயிறானேன்; தேரியநல்
        வழியிலெனைச் செலுத்த வேண்டி
ஆய்ந்திறை வன்னென்னுள் அமைத்திட்டான்;
        ஆனாலும் அறிவும் நீயும்
வாய்க்கிற பொழுதெல்லாம் வாய்ச்சண்டை
        புரிகின்றீர் வலியைத் தந்தீர்!

நன்னூல்கள் பலநாடி நான்கற்க
        நல்லறிவு நவின்ற போதும்
கண்ணாளன் முன்போகக் கண்ணாட்டி
        பின்செல்லும் காட்சி போல
முன்னாலே நீபோக நானுன்னைப்
        பின்தொடர்தல் முறைமை ஆமோ?
உன்னாலே என்னுயர்வு தாழ்வெல்லாம்
        என்பதனை உணர்ந்த துண்டா?

மான்போன போக்கிலிரா மன்போக,
        மனம்போன வழியில் சீதை
தான்போக நேர்ந்ததனால் நிகழ்ந்ததன்றோ!
        மாரீச தார்வேந் தென்னும்
மான்சாக இராவணன்தன் மனம்போன
        வழிபோன வகையா லன்றோ?
ஆன்போன வழிபோகும் அதன்கன்றாய்
        நானுன்பின் அலைந்தேன் கெட்டேன்!

ஓருருவம் இல்லாத உள்ளுணர்வே!
        நீயென்னுள் ஒளிந்து கொண்ட
பேருருவம் என்பேனா? பெரும்பிழைகாண்
        என்பேனா? பிழைபொ றுத்து
நீருருவம் காட்டுகிற நினைச்சரியே
        என்பேனா? நீயென் னொத்த
நேருருவம் கொண்டதனால் நெருங்கியுற
        வுறுவேனா? நீங்கு வேனா?

பொறை,காதல், மகிழ்ச்சி,யிரண் டகம்,வெகுளி,
        ஆசை,யன்பு பொருந்தப் பெற்ற
நிறைகுடமே! உன்னுள்தான் நிறைந்தவுணர்
        வுகள்பலவாம்! நின்னால் நானும்
நிறைகுடமாய் நிமிர்கின்றேன்; நேரெதிராய்ச்
        சிலநேரம் நின்னால் தானே
குறைகுடமா னேனென்னுள் குறைகுறைய
        நிறைநிறையக் குறிக்கோள் ஏற்பாய்!

நிகழ்பட ஆட்டம் –video game; இயக்குப்பிடி -jaystick; தரவு –data; ஒளிச்சுருள் –film role; வன்பொருள் –hard disk; நிறுவுதல் -install; மென்பொருள் –soft ware; தீநுண்மி –virus; நச்செதிர்ப்பி –Anti virus ; சூதம் -சூது.

அகரம் அமுதன்

சனி, 10 ஜூலை, 2010

அந்தி ஓவியம்!



கொடுத்துச் சிவந்த கொடைஞரின் கையாய்,
வெடித்துச் சிதறுமெரி வெற்பாய், –தடியால்
அடித்த இடச்சிவப்பாய் அந்தி சிவக்கும்
படிக்கு நடந்ததென் ன? (1)

நடந்து கடந்த நலிவால் கதிரும்
கிடந்து சிவந்து கிழிய –படர்குருதி
அம்மா!அவ் அந்தியென்பர்! அன்(று)!அச் சிவப்பழகு
செம்மாந்த வானின் சிரிப்பு! (2)

சிரிக்கும் சிலையின் செழிப்பொடு செம்மண்
பரப்பின் நிறமும் படர்வான் -விரிப்பழகை
அன்ன மெதுநடையார் அங்கை மருதாணி
என்னல்செவ் வந்திக் கெழில்! (3)

எழுமந்திப் போழ்தின் எழில்சொல்ல ஒல்லா(து)
அழுமென்றன் உள்ளம் அடடா! –தொழுகின்றேன்
விண்ணில் நிறங்களின் வெற்றித் திருவிழா
கண்முன் தெரிகின்றக் கால்! (4)

காலைக் கதிர்வளர்ந்து மாலை தனில்முதிரச்
சோலைப் பழச்சிவப்பாய்த் தோற்றமுறும் –ஆலைபடு
செங்கரும்பின் தீஞ்சாறாய்ச் சிந்தும் நிறப்பொழிவால்
அங்கரும்பும் அந்தி அழகு! (5)

அன்றொருத்தி பிய்த்தெறிந்த அம்கொங்கை யால்மதுரை
நின்றெரிந்த காட்சியினை நேரொக்கும் –என்றென்றும்
கீழ்வானம் பிய்த்தெறியும் செங்கதிரால் மேல்வானம்
பாழ்பட்டு வெந்தழிதல் பார்! (6)

பாராண்ட பத்துத் தலைவேந்தோ கிழ்வானம்?
சீரான் இராமன்போல் செங்கதிரைப் –போராடி
மீட்ட உடன்தீயின் மேலேற்றிப் பார்க்கிறதே!
மீட்டுவந்த மேல்வான மே! (7)

மேனி கருகாமல் மேலெழுந்த சீதையைப்போல்
வானில் கதிர்காலை வந்தொளிரும் –கானில்
கடுந்தீயை மூட்டுகின்ற காற்றெனவே மேகம்
தொடுமந்தித் தோற்றத்தில் தோய்ந்து! (8)

தோயும் குருதியுடன் தொப்பென்று வீழ்கின்ற
காயும் கதிரவனைக் கண்டவுடன் –தாயும்
கழுகதன் குஞ்சுமெனத் திங்களும் மீனும்
எழுகின்ற அந்தி எழில்! (9)

எழிலந்தி வானத்தில் ஈழத்தைக் காய்ச்சி
வழிந்தோட விட்ட வகையாய்ச் –சுழித்தோடும்
தேன்பாகின் ஆறாய்த் தெறிக்கும் நிறம்தேவர்
கோன்பாருக்(கு) ஈந்த கொடை! (10)

அகரம் அமுதன்

திங்கள், 28 ஜூன், 2010

பந்து!

பையன்கள் ஆடினர் பந்து!
பாப்பா பார்த்தனள் வந்து!
பந்தை வளைக்குள் நந்து
பாய்ச்சுமுன் பிடித்திட முந்து!

வியாழன், 24 ஜூன், 2010

புகழைத் தேடு!

தம்பி! தம்பி! ஓடிவா!
தங்கக் கம்பி ஓடிவா!
எம்பிக் குதித்து ஓடிவா!
எவரும் மெச்ச பாடிவா!

பள்ளிப் படிப்பை நாடிவா!
படித்தால் உயரலாம் ஆடிவா!
வெள்ளி நிலாவே! ஓடிவா!
விரும்பிப் புகழைத் தேடிவா!