சனி, 18 செப்டம்பர், 2010

கரிகாலன் ஈற்றெடுப்பு! (14)


சிரித்த பிழைப்புப் பிழைப்போர்* சிதற
விரையும் கரும்புலியர் வீச்சில் –எரியும்
அனுரா தபுரம்* அழியத் துடித்தார்
இனியாது செய்குவம் என்று! (131)

என்று முடியுமோ ஈழத் தவர்துயர்
அன்று பிறக்கும் அமைதியிதை –நன்குணராச்
சிங்களர்க்கே நானிலமும் சென்றுதவ போர்க்களத்தில்
எங்களவர்க்(கு) உற்றதுணை யார்? (132)

யாதோர் துணையுமின்றி ஆங்குநீ போர்செய்யத்
தீதோர் வடிவான சிங்களர் –சூதோர்ந்(து)
உனைக்கொன்ற தாய்ச்சொல்லி ஊருக்(கு) உரைத்தார்
நினைக்கப் பொறுக்குதில்லை நெஞ்சு! (133)

நெஞ்சில் வலியோடும் நீர்வழியும் கண்ணோடும்
எஞ்சிய எம்மவரை ஈழத்தே –கஞ்சியின்றி
முள்வேலி யுள்ளடைத்து மூடர் கொலைபுரிந்தார்
அல்லும் பகலோடும் அங்கு! (134)

அங்கெமது மக்கள் அடையும் துயர்சொன்னால்
பொங்கும் விழிநீர் புனலாறாய் -சிங்களர்
போலப்போர்க் குற்றம் புரிந்தார் எவருமில்லை
காலக் கணக்கேட்டில் காண்! (135)

காணாக் கொடுமைபல கண்முன்னே கண்டுமதைக்
காணா துலகம் கடப்பதனால் -நாணாத
நாயனைய காடையர்கள் நாளும் நடத்துகிறார்
தீய செயல்பலவுந் தேர்ந்து! (136)

தேரலரால் எம்மவர் செத்து மடிகின்றார்
நேரிழையார் கற்பிழந்து நிற்கின்றார் -சீரிழந்த
சிங்களப் பேடிகளால் செந்தமிழச் சேய்களும்
தங்கள் உயிர்விட்டார் தாழ்ந்து! (137)

தாழம் இழந்து தவிக்கும் தமிழரைச்
சூழும் இடுக்கண் சொலவொணுமோ? -ஆழம்
தெரியாமல் கால்விட்ட சிங்களர்தஞ் சென்னி
அரியா தகல்வதோ அன்று! (138)

அன்மைச் செயல்செய் தகங்குளிரும் தெவ்வரால்
புன்மை அடைந்து புழுங்குகிறார் -இன்னமும்
எத்தனை தீத்துயர் எம்மவர் காண்பதோ?
புத்தனே கொஞ்சம் புகல்! (139)

புகலிகளாய் ஓரியர் போந்தவந் நாள்தொட்டு
அகதிகளாய் எந்தமிழர் ஆங்கே -நுகர்துயரம்
கொஞ்சமோ? இந்தக் கொடுமைகளைக் காண்பார்கண்
துஞ்சுமோ கீழிமை தொட்டு! (140)

சிரித்த பிழைப்புப் பிழைப்போர் –எள்ளத்தக்க வாழ்க்கை வாழ்கின்ற சிங்களர்; அனுராத புரம் –அனுராதபுரம் வான்படைத் தளத்தைக் குறிக்கிறது.


அகரம் அமுதன்

ஆசிரியர் போற்றுதும்!


அஞ்சில் எமைவளைத்து
அமுதனைய கல்வியினை
நெஞ்சில் நிறைக்கின்ற
நேர்த்தியெலாம் கற்றவரே!

பேசரிய மாண்பெல்லாம்
பிள்ளைகள் எமைச்சேர
ஆசிரிய பணிசெய்யும்
அன்பின் தெய்வங்காள்!

பொற்போடு எமைநடத்திப்
புகழ்மணக்கும் கல்வியினைக்
கற்போடு கற்பிக்கும்
கடமையிற் பெரியோரே!

குன்றளவு கொடுத்தாலும்
குறையாத செல்வத்தை
இன்றளவும் எமக்களித்து
இன்புறும் வள்ளல்காள்!

ஈன்றோரின் மேலாக
எம்நெஞ்சில் நிறைபவரே!
சான்றோராய் எமைமாற்றும்
சாதனைகள் புரிபவரே!

எச்செல்வம் அளித்தாலும்
எச்சமின்றித் தீர்வதுண்டு
மெச்சிநீங்கள் அளித்தசெல்வம்
விளிவின்றி வளருமன்றோ!

அன்னையே தெய்வமென்றும்
அன்பே தெய்வமென்றும்
கன்னின்றோர் தெய்வமென்றும்
கதைகள்பல உண்டெனினும்
பள்ளிக் கூடமெனும்
பண்பட்ட கோயிலின்
உள்ளே எழுந்தருளும்
உயர்தெய்வம் நீங்களன்றோ!

தாய்சொல்ல முதன்முதலிற்
சேய்பேசும் அம்மொழியே
தாய்மொழியாம் என்றெவரும்
சாற்றும் மொழியினையும்
சேய்நாங்கள் தப்பின்றிச்
செப்புதற்குக் கருத்துடனே
ஆய்ந்தறிந்து ஊட்டுகின்ற
அன்னையரும் நீங்களன்றோ!

தரிசை சீர்செய்து
தக்கபடி ஏர்நடத்தி
வரிசை பிடித்துவிதை
வார்த்திடுவர் வேளாலர்
அறிவு நீர்பாய்ச்சி
அகந்தைக் களையகற்றி
செறிவுடையோ ராய்எம்மைச்
செய்உழவர் நீங்களன்றோ!

சிலையின் இறுதிநிலை
சீர்மிகு கண்திறப்பாம்
விளையும் பயிரெமக்கோ
விழிதிறப்பே முதல்நிலையாம்...
எண்ணோடு எழுத்தென்னும்
இருகண்கள் திறக்கின்ற
திண்ணிய பணிசெய்யும்
சிற்பியரும் நீங்களன்றோ!

அன்றாடம் எமைநாடி
அறிவு புகட்டுமுமை
இன்றிந்நாள் எம்நெஞ்சில்
இருத்திப் புகழ்கின்றோம்!

வாழ்நாள் முழுவதையும்
மாணவர் எமக்களித்து
வீழ்நாள் இலாக்கல்வி
விளைக்கும்நீர் வாழியவே!

அகரம் அமுதன்

சனி, 11 செப்டம்பர், 2010

மனம்போன போக்கில்…

கட்டுப்பா டொன்றில்லாக் காட்டாறாய்
        ஓடுகிறாய் கவின்நெஞ் சே!மார்
தட்டிப்போர் வீரனெனத் தாவிக்கு
        தித்தாடித் தருக்கி யேசீர்
கெட்டுப்போ எனஎன்னைச் சிலநேரம்
        தூண்டிப்பின் கிளர்ந்தெ ழுந்து
சுட்டுப்போ கின்றாயே! தொடருமுன்
        விளையாட்டால் தூக்கங் கெட்டேன்!

அகமெனும் பெயரினிலே அமர்ந்தென்னுள்
        நாளும்நீ ஆடு கின்ற
நிகழ்பட ஆட்டத்தில்* நீயியக்குப்
        பிடி*யானேன்; நினைவ கத்தில்*
தகவுடன் காட்சிகளைத் தக்கபடி
        சேமிக்கும் தரவு மாகி
நிகழ்படக் காட்சிகளாய் நிதம்காட்டும்
        ஒளிச்சுருளே!* நீதான் நானா?

மேனியெனும் வன்பொருளில்* விரும்பியிறை
        வன்நிறுவும் மென்பொ ருள்நீ
தீனியென எனைத்தின்னும் தீநுண்மி*
        ஆகின்றாய் சிலநே ரத்தில்
மேனியினைக் காக்கின்ற நச்செதிர்ப்பி*
        யாயறிவு மிளிர்ந்த போதும்
நானிதுநாள் வரையுன்றன் நல்சூதம்*
        முழுதறியேன் நவிலு வாயோ?

ஆய்ச்சியர் தம்மிருகை அன்னவறி
        வும்நீயும் அமர்ந்தி ழுக்க
தேய்புரிக் கயிறானேன்; தேரியநல்
        வழியிலெனைச் செலுத்த வேண்டி
ஆய்ந்திறை வன்னென்னுள் அமைத்திட்டான்;
        ஆனாலும் அறிவும் நீயும்
வாய்க்கிற பொழுதெல்லாம் வாய்ச்சண்டை
        புரிகின்றீர் வலியைத் தந்தீர்!

நன்னூல்கள் பலநாடி நான்கற்க
        நல்லறிவு நவின்ற போதும்
கண்ணாளன் முன்போகக் கண்ணாட்டி
        பின்செல்லும் காட்சி போல
முன்னாலே நீபோக நானுன்னைப்
        பின்தொடர்தல் முறைமை ஆமோ?
உன்னாலே என்னுயர்வு தாழ்வெல்லாம்
        என்பதனை உணர்ந்த துண்டா?

மான்போன போக்கிலிரா மன்போக,
        மனம்போன வழியில் சீதை
தான்போக நேர்ந்ததனால் நிகழ்ந்ததன்றோ!
        மாரீச தார்வேந் தென்னும்
மான்சாக இராவணன்தன் மனம்போன
        வழிபோன வகையா லன்றோ?
ஆன்போன வழிபோகும் அதன்கன்றாய்
        நானுன்பின் அலைந்தேன் கெட்டேன்!

ஓருருவம் இல்லாத உள்ளுணர்வே!
        நீயென்னுள் ஒளிந்து கொண்ட
பேருருவம் என்பேனா? பெரும்பிழைகாண்
        என்பேனா? பிழைபொ றுத்து
நீருருவம் காட்டுகிற நினைச்சரியே
        என்பேனா? நீயென் னொத்த
நேருருவம் கொண்டதனால் நெருங்கியுற
        வுறுவேனா? நீங்கு வேனா?

பொறை,காதல், மகிழ்ச்சி,யிரண் டகம்,வெகுளி,
        ஆசை,யன்பு பொருந்தப் பெற்ற
நிறைகுடமே! உன்னுள்தான் நிறைந்தவுணர்
        வுகள்பலவாம்! நின்னால் நானும்
நிறைகுடமாய் நிமிர்கின்றேன்; நேரெதிராய்ச்
        சிலநேரம் நின்னால் தானே
குறைகுடமா னேனென்னுள் குறைகுறைய
        நிறைநிறையக் குறிக்கோள் ஏற்பாய்!

நிகழ்பட ஆட்டம் –video game; இயக்குப்பிடி -jaystick; தரவு –data; ஒளிச்சுருள் –film role; வன்பொருள் –hard disk; நிறுவுதல் -install; மென்பொருள் –soft ware; தீநுண்மி –virus; நச்செதிர்ப்பி –Anti virus ; சூதம் -சூது.

அகரம் அமுதன்

சனி, 10 ஜூலை, 2010

அந்தி ஓவியம்!



கொடுத்துச் சிவந்த கொடைஞரின் கையாய்,
வெடித்துச் சிதறுமெரி வெற்பாய், –தடியால்
அடித்த இடச்சிவப்பாய் அந்தி சிவக்கும்
படிக்கு நடந்ததென் ன? (1)

நடந்து கடந்த நலிவால் கதிரும்
கிடந்து சிவந்து கிழிய –படர்குருதி
அம்மா!அவ் அந்தியென்பர்! அன்(று)!அச் சிவப்பழகு
செம்மாந்த வானின் சிரிப்பு! (2)

சிரிக்கும் சிலையின் செழிப்பொடு செம்மண்
பரப்பின் நிறமும் படர்வான் -விரிப்பழகை
அன்ன மெதுநடையார் அங்கை மருதாணி
என்னல்செவ் வந்திக் கெழில்! (3)

எழுமந்திப் போழ்தின் எழில்சொல்ல ஒல்லா(து)
அழுமென்றன் உள்ளம் அடடா! –தொழுகின்றேன்
விண்ணில் நிறங்களின் வெற்றித் திருவிழா
கண்முன் தெரிகின்றக் கால்! (4)

காலைக் கதிர்வளர்ந்து மாலை தனில்முதிரச்
சோலைப் பழச்சிவப்பாய்த் தோற்றமுறும் –ஆலைபடு
செங்கரும்பின் தீஞ்சாறாய்ச் சிந்தும் நிறப்பொழிவால்
அங்கரும்பும் அந்தி அழகு! (5)

அன்றொருத்தி பிய்த்தெறிந்த அம்கொங்கை யால்மதுரை
நின்றெரிந்த காட்சியினை நேரொக்கும் –என்றென்றும்
கீழ்வானம் பிய்த்தெறியும் செங்கதிரால் மேல்வானம்
பாழ்பட்டு வெந்தழிதல் பார்! (6)

பாராண்ட பத்துத் தலைவேந்தோ கிழ்வானம்?
சீரான் இராமன்போல் செங்கதிரைப் –போராடி
மீட்ட உடன்தீயின் மேலேற்றிப் பார்க்கிறதே!
மீட்டுவந்த மேல்வான மே! (7)

மேனி கருகாமல் மேலெழுந்த சீதையைப்போல்
வானில் கதிர்காலை வந்தொளிரும் –கானில்
கடுந்தீயை மூட்டுகின்ற காற்றெனவே மேகம்
தொடுமந்தித் தோற்றத்தில் தோய்ந்து! (8)

தோயும் குருதியுடன் தொப்பென்று வீழ்கின்ற
காயும் கதிரவனைக் கண்டவுடன் –தாயும்
கழுகதன் குஞ்சுமெனத் திங்களும் மீனும்
எழுகின்ற அந்தி எழில்! (9)

எழிலந்தி வானத்தில் ஈழத்தைக் காய்ச்சி
வழிந்தோட விட்ட வகையாய்ச் –சுழித்தோடும்
தேன்பாகின் ஆறாய்த் தெறிக்கும் நிறம்தேவர்
கோன்பாருக்(கு) ஈந்த கொடை! (10)

அகரம் அமுதன்

திங்கள், 28 ஜூன், 2010

பந்து!

பையன்கள் ஆடினர் பந்து!
பாப்பா பார்த்தனள் வந்து!
பந்தை வளைக்குள் நந்து
பாய்ச்சுமுன் பிடித்திட முந்து!

வியாழன், 24 ஜூன், 2010

புகழைத் தேடு!

தம்பி! தம்பி! ஓடிவா!
தங்கக் கம்பி ஓடிவா!
எம்பிக் குதித்து ஓடிவா!
எவரும் மெச்ச பாடிவா!

பள்ளிப் படிப்பை நாடிவா!
படித்தால் உயரலாம் ஆடிவா!
வெள்ளி நிலாவே! ஓடிவா!
விரும்பிப் புகழைத் தேடிவா!

ஞாயிறு, 20 ஜூன், 2010

குறளே வெண்பாவாக! (4)

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு! -குறள்-


உண்டால் உயிர்க்கும் உவப்பன்றி உள்ளியதைக்
கண்டால் களிசெய்யா கள்ளதுவே! -கண்டிடினும்
பூமனத்தில் எண்ணிடினும் பொங்கி எழுந்தாடும்
காமத்திற் தோன்றும் களிப்பு!

அகரம் அமுதா

சனி, 12 ஜூன், 2010

கரிகாலன் ஈற்றெடுப்பு! (13)



மனத்தில் உரனும், மதியில் தெளிவும்,
நினைப்பில் நெறியின் நிறைவும், –முனைந்தே
உயரும் உழைப்பும், உதவும் குணமும்
இயல்தமிழர்க்(கு) ஊட்டினாய் இங்கு! (121)

இங்ஙனம் நாட்டை இனிதுற ஆளவும்
சிங்களர் நெஞ்சம் தியங்கினார்* –எங்ஙனம்
மாத்தமிழர் மாள வழியொன்று காண்பதெனக்
காத்திருந்தார் உள்ளம் கரந்து! (122)

தியங்குதல் –கலங்குதல்.

கரப்பில்* மனத்தனுனைக் கண்டு கலங்கித்
திறத்தில் இழிந்தோர் திகைத்தார் –உரத்தில்*
உனக்கிணை இல்லாதார் ஓர்ந்து* பிறரைத்
தனக்குத் துணைகொண்டார் தாழ்ந்து! (123)

கரப்பில் –குற்றமில்லாத; உரம் –வலிமை; ஓர்ந்து –உணர்ந்து.

தாழ்ந்தோர்க்(கு) உதவ தகையில்லாச் சீனரும்
பாழ்மன பாகிசுத் தானியரும் –சூழ்ந்தாங்(கு)
உருசிய நாடும் உகந்தவற்றைச் சீய
மிருகத்திற்(கு) ஈவும் விரைந்து! (124)

சீயம் –சிங்கம்.

விரைந்து படையணியை வீணர்க்(கு) உதவும்
திரைமறைவில் இந்திய தேயம் –புரைநெஞ்சர்*
முன்நின்று போர்புரிய முப்படைக்கும் ஆனவரை
பின்நின்(று) உதவும் பெரிது! (125)

புரைநெஞ்சர் –குற்றமுடைய நெஞ்சை உடையவர் (சிங்களரைக் குறித்தது)

பெருவான் வழியே பெரும்போர் புரிந்து
கருமா மனத்தர் களித்தார் –தரையில்
எதிர்நின்று தோற்றங்(கு) எமன்கண்ட தாலே
விதிர்த்திட்ட* தோளர் விரைந்து! (126)

விதிர்த்தல் –நடுங்குதல்.

விரையும் உலங்கூர்தி வீசிடும் குண்டால்
தரையில் தமிழர் தகர்வார் –வரைவில்*
அழிவைப் புரிந்தும் அடங்காக் கொடியர்
பொழிவார் நெடுவான் புகுந்து! (127)

வரைவில் –முடிவில்லாத.

புகலிடம் இன்றிப் புழுங்கிப் புறம்போய்
தகைசால் தமிழிர் தவிக்க –பகைவர்
நவை*யின் வழியினையே நத்தி*க் குமை*செய்(து)
உவப்பார் அவரை ஒழித்து! (128)

நவை –குற்றம்; நத்துதல் –விரும்புதல்; குமை –துன்பம்.


ஒதுங்கிடம் ஆங்கேஎம் ஒண்டமிழர்க்(கு) இல்லை
பதுங்கு குழியில் படுப்பார் –பிதுங்கிக்
குடல்சரிய சாதற்குக் குண்டள்ளி வீசும்
நெடுவானில் வானூர்தி நின்று! (129)

நின்றெதிர்த்துப் போரிடும் நெஞ்சுரம் இல்லாதார்
சென்றுவான் ஊர்திவழி சீரழித்தார் –பொன்றுவான்*
ஈழத் தமிழனதில் இன்பம் அடைந்திடுவான்
சீய*த் தலைவன் சிரித்து! (130)

பொன்றுதல் –இறத்தல், அழிதல்; சீயம் –சிங்கம்.
அகரம் அமுதா

செவ்வாய், 8 ஜூன், 2010

கள்ளிப் பாலைக் கருதிக் கொடுப்பரே!

உடலின் பசிக்காய் உறவில் திளைத்துக்
குடலிற் கருவைக் குவித்து வளர்த்துப்
பத்துத் திங்கள் பாரம் தாங்கிப்
பெற்றபின் பெற்றது பெண்மக வெனிலோ
அள்ளிப் பாலை அளிக்காது
கள்ளிப் பாலைக் கருதிக் கொடுப்பரே!

அகரம் அமுதா

வெள்ளி, 4 ஜூன், 2010

யார்சொல்லிக் கேட்டதிந்த உலகம்!

யார்சொல்லிக் கேட்டதிந்த பாரே –பெரி
யோர்சொற்கள் விழற்கிறைத்த நீரே!
யார்வழியில் நடந்ததிந்த பாரே –சிறி
யோர்போலே நடந்ததன்றி வேறே?
(யார்சொல்லிக்)
நூலறிவு வாய்த்தவர்சொல் எதையும் –கேட்டால்
நூதனமாய்ப் பார்த்தெள்ள விழையும்!
வாலறிவு வாய்த்ததுபோல் எதையும் –செய்து
வருந்திப்பின் துன்பத்தில் புதையும்!
(யார்சொல்லிக்)
மாயத்தில் மந்திரத்தில் அமிழும் –அந்த
மடமையினைச் சுட்டுவோர்மேல் உமிழும்!
தேயத்தைச் சீர்திருத்த விழையும் –எவரும்
தீண்டத்தகார் என்றுவசை பொழியும்!
(யார்சொல்லிக்)
ஆழ்கிணற்றின் தவளைகளாய் மக்கள் –இதை
அறிந்துரைப்போர் வாழ்வினிலே சிக்கல்
சூழ்ந்திழைக்கப் புகுமிவரா மக்கள்? –இல்லை
தோற்றத்தால் வளர்ச்சிபெற்ற மாக்கள்!
(யார்சொல்லிக்)
தானென்று தறுக்குவதில் நாட்டம் –என்றும்
தன்னலமே பேணிபொருள் ஈட்டும்!
மானமுள்ள பேர்களையே வாட்டும் –இந்த
வஞ்சகரின் பைந்நிறைய தேட்டம்!
(யார்சொல்லிக்)
வாய்நிறைய வாய்மையினை மொழியும் –நெஞ்சில்
வைத்துவளர் பொய்மையினால் இழியும்!
நாய்வாலாய் வல்லான்முன் குழையும் –ஏழை
நல்லாரை ஏய்த்திடவே விழையும்!
(யார்சொல்லிக்)
தன்மதமே பெரிதாமென் றார்க்கும் –பிறர்
தன்மதத்தின் வளர்ச்சிகண்டு வேர்க்கும்!
பொன்மனத்தைப் புதைகுழியாய் ஆக்கும் –இந்தப்
புல்லர்களால் தடம்புரளும் நாக்கும்!
(யார்சொல்லிக்)