புதன், 29 அக்டோபர், 2025

 பசும்புல்!

கவிஞன்:-
புல்லே! பசுபுல்லே!
பொன்மேனி நோகாதா?
தொல்லை சுமையாகத்
தோன்றாதா? - அல்லெல்லாம்
தேக்கிப் பனித்துளியைச்
சேய்போல் இடைசுமக்கும்
போக்குச் சரியில்லை
போ! 01
புல்:-
கும்மிருட்டு ஈன்ற
குழந்தையிது என்மடியில்
சம்மணம் இட்டுச்
சரிந்தது; - கம்மென,
அங்கம் சொலிக்க
அழகாய் உறங்குகிற
தங்கமிது ரொம்பச்
சமத்து! 02
கவிஞன்:-
ஆர்பெற்ற பிள்ளையோ
அள்ளிநீ கொஞ்சுவதை
ஊர்பார்த்தால் நாறிடுமே
உன்பெருமை; - தீர்விதற்குத்
தள்ளித் தரைவிட்டுத்
தாவணி போடுனக்கேன்
பிள்ளையென மார்பூட்டும்
பித்து!? 03
புல்:-
பூந்திரவப் பிள்ளையிதன்
பொன்முகத்தில் வெண்ணிலவு
நீந்துவது ஆச்சரியம்
நீயேபார்; - தீந்தளிர்
நத்தை;அதன் கூடுபோல்
ன்னீர்த் துளியுளதே
இத்தைக் கவிபாட
எண்! 04
கவிஞன்:-
முத்துமுத்தாய் வேர்த்தஎன்
முந்தாணை பெண்முகத்தை
ஒத்துள்ளாய் நானுமதை
ஒப்புகிறேன்; – முத்துநகை
மூக்குத்தி இட்டு
முழுஅழகைக் காட்டுகிறாய்
ஏக்கத்தைப் பெண்களுக்கே
ஈந்து! 05
புல்:-
அன்பொழுகப் பேசி
அருகில் வராதேஎன்
பொன்மகவின் மென்தூக்கம்
போய்விடும்; – உன்னுடைய
பாராட்டைக் கேட்கவா
பாதையில் நிற்கின்றேன்?
சீராட்டை வேறெங்கும்
செப்பு! 06
கவிஞன்:-
ஆடை அணியின்றி
ஆரும் துணையின்றிப்
பீடைபோல் வாழ்ந்தாய்
பெரும்பகலில்; – வாடை
வரவிரவில் வாழ்வுற்று
வாயாட லெல்லாம்
திரவப்பூ பூத்த
திமிர்! 07
புல்:-
வெளிச்சப்பூ வானில்
விரிகிறது நீபல்
இளித்தவரை போகும்
இடம்செல்! – துளிமகவு
கண்ணிமைக்கும் நேரத்தில்
காணாமல் போனதே
கண்முன்செய் தாயே
களவு!? 08
கவிஞன்:-
வார்த்தை கொடுத்து
வழிப்பறி செய்ததாய்
யார்மீது குற்றம்
அடுக்குகிறாய்? – பார்நானும்
உன்போல் பனிநீர்
ஒழிந்த வகையறியேன்
என்மேல் பழிபோடாய்
இங்கு! 09
புல்:-
என்னை உனையன்றி
இங்காரும் இல்லைபின்
என்பொருளை ஆர்தான்
எடுத்திருப்பார்? – மென்பனிக்கு
இன்னோர் இரவுவரை
எவ்வாறு காத்திருப்பேன்?
பொன்கதிரோன் உண்டிருப்பான்
போந்து! 10

 உழவன்

பாட்டில் நனைந்தால்
பரவா யிலைஎன்நெல்
மூட்டை நனைந்தால்
முளைகட்டும்; – கோட்டையில்வாழ்
ஓங்கோல் முதல்வரே!
உம்குடையால் எங்களையும்
தீங்கின்றிக் காப்பாற்றச்
செய்!
முதல்வன்
வரும்படி தாரா
வயல்காட்டு நெல்லை
இருங்குடை காப்பதாய்
இல்லை; – ஒருதுளிநீர்
பட்டாலும் சாராயம்
பாழாகும்; நெல்மூடை
கெட்டாலும் கேடில்லை
கேள்!
உழவன்
வடிக்கும் உணவால்
வயிறு நிறையும்
குடியால் கெடுமே
குடும்பம்; – மடிநிறையப்
பொன்சேர்த்து வைத்தாலே
போதுமா? சாப்பாட்டுக்கு
என்செய்வீர் ஐயா
இயம்பு!
முதல்வன்
அதிகம்நீ பேசுகிறாய்;
அள்ளியென்மேல் சேற்றை
மதியின்றி வீசுகிறாய்
வாயால்; – பதிபோற்றும்
மாடல் அரசின்
மதுவுண்ணா மல்வார்த்தை
ஆடத் துணிந்தநீ
ஆர்?
உழவன்
வாக்கைச் செலுத்திவிட்டு
வாழ்க்கை இழந்தவனை
நாக்கைத் துருத்தி
நகைக்கின்றீர் – தூக்கமில்லா
ஏழைக்குத் தோள்தாரா
இந்த அரசாங்கம்
நாளைக்குள் மண்கவ்வல்
நன்று!



 உழத்தியின் கூற்று:-

தெய்வம் இருக்குதா?
செத்துத்தான் போச்சுதா?
உய்ய வழியொன்னு
உரைக்குதா? – செய்விளஞ்ச
நெல்மணி எல்லாம்
நெனஞ்சி மொளைச்சதே
வல்லடியாப் பேஞ்ச
மழைக்கு! 1
மாடா ஒழைச்சு
மணிமணியா நெல்விளைச்சு
மேடாக் குவிச்சியிங்க
விக்கவந்தா – மூடாம
விட்டுப் புடுச்சே
விடியலர(சு) இத்துடுச்சே
வட்டிக் குழைச்சேஎம்
வாழ்வு! 2
கிடங்கொன்னு கட்டிவிடாக்
கேடுகெட்ட ஆட்சி
எடந்தெரி யாமப்போ
வாதா? – மடப்பயலை
காத்தாளச் சொல்லிக்
கவர்மெண்டில் வச்சாஎன்
சோத்துல வச்சானே
சூடு! 3
சோமபா னத்துக்கு
சோக்கான கோடோனு;
நாமசா கத்தான்
நடுத்தெருவு; – பூமரங்கிள்
ஆளும் அசிங்கத்தை
ஆராச்சும் பேசினா
நீளுதே கைது
நிதம்! 4
உசுரைப்போல் எண்ணி
உழைச்சுவந்த நெல்லைக்
கொசுரைப்போல் எண்ணிவிட்ட
கோனே! – பசிவந்தா
சோத்தத்தான் தின்பாயோ?
சோமபானம் உண்பாயோ?
பீத்துறத விட்டுவிட்டுப்
பேசு! 5
ஆட்சி சரியில்லை
ஆளும் சரியில்லை
காட்சியில் மாற்றம்
கடுகுமில்லை – பேச்சமட்டும்
நல்லா அளந்துவிட்டு
நாட்டைச் சுரண்டுறநீ
எல்லையில்லாத் துன்பம்
இழைச்சு! 6
தில்லாநீ பேச
திமிரா மவன்பேசும்
பொல்லாத காலம்
பொடிபடவே – நல்லாச்
சுழட்டி அடிச்சுவெகு
தூரத்தில் வீசும்
உழத்தி எனக்கிருக்கும்
ஓட்டு! 7
சாராய கோடோனே!
சாராய கோடோனே!
வாராயோ எங்க
வயப்பக்கம்? – பூராவும்
நல்லா மழைநனைஞ்சு
நாசமாப் போயிடுச்சே!
கல்லா மனசுனக்குக்
காட்டு!?




 இயற்கைக்கு முரணாக சில நிகழ்வுகள் நிகழ்ந்துவிடுவது உண்டு. நான்முகன் தொடங்கிவைக்க ஆதாம் அடியொற்றிப் பயணித்த பாதை. அவை சம்மதத்தோடு நிகழ்ந்தவை. கீழுள்ள செய்தியில் நிகழ்ந்திருப்பது வன்முறை. அடுத்தவர் எதிர்ப்பை அசட்டை செய்து நிகழ்த்துவது. தாய்க்கு மகனாலும் மகளுக்குத் தந்தையாலும் சகோதரிக்குச் சகோதரனாலும் நிகழ்ந்து விடுகின்ற முரண்தொடை. பாதிப்பென்னவோ பாவைக்குத்தான்.

பெற்றேனே துன்பம் பெரிது!
ஆஸ்திரியாவில் தான்பெற்ற மகள் எலிசபெத்தை 24 ஆண்டுகள் வீட்டின்
பாதாள சிறையில் வைத்து அவள் ‘7’ குழந்தைகளுக்குத் தாயாகக் காரணமானான்
ஜோசப் ஃபிரிட்சல்.
- செய்தி – (2007ம் 8ம் ஆண்டாக இருக்கலாம்)
காமக் கயவனவன்
கைக்குள் சிறைப்பட்டு
சாமப் பொழுதுகளில்
சீரழிந்து - ஊமையாய்
இன்றளவும் வாழ்வில்
இடர்பட்டேன் வேறுண்டோ
என்போல் உழந்தார்
இடர்? 01
தொட்டில் உறவைத்
துளிர்த்துவரும் காமத்தால்
கட்டிலுற(வு) ஆக்கிக்
களித்திட்டான் - இட்டமில்லாத்
தன்மனையைக் கூட
தழுவத் தடையிருந்தும்
என்றனுக்கு இந்தநிலை
ஏன்? 02
கட்டிப் பிடித்தான்;
கனியிதழை மென்றிட்டான்;
தொட்டுக் களித்தான்
துடியிடையை; - எட்டிப்
படுத்தாலும் பாழ்செய்தான்;
பக்கமிருந்(து) இன்பம்
கொடுத்தாலும் செய்தான்
கொலை! 03
அழுது புலம்பி
அவனிருதாள் பற்றித்
தொழுது துவண்டு
துடித்தேன்; - உழன்றேன்;
இனிப்புத்தான் என்மேனி
என்றெறும்பாய் மொய்த்தான்
நினைக்கத்தான் கூசுதென்
நெஞ்சு! 04
சொட்டுத்தேன் என்னைச்
சுவைத்து முடித்ததுகாண்
கொட்டுந்தேள் ரொம்பக்
கொடுமையிது; - கட்டிப்பொன்
தீக்கிடையில் வீழின்
திருநகையாம்; உண்டோசொல்
சாக்கடையில் வீழின்
தகவு? 05
அன்னைக்குத் தன்மகளே
ஆனாள் சகக்கிழத்தி
என்னுமிழுக்(கு) ஏற்பட்ட(து)
என்னாலே; - என்விதி
ஏட்டிலே காணா
எழுத்தாச்சே! என்கதை
நாட்டிலே காணா
நடப்பு! 06
வெங்கானம் தானேகி
வெந்து தணிந்தாலும்
மங்கைநான் முன்புற்ற
மாசறுமோ?- பங்கமெல்லாம்
உற்றும் உயிர்வாழக்
கற்றேனே; பெற்றவனால்
பெற்றேனே துன்பம்
பெரிது! 07
அன்பைப் பொழிந்துநிதம்
அன்னையவள் மஞ்சத்தில்
தன்னை வருத்தித்
தவங்கிடந்து - முன்னம்
கொடுத்தான் உயிரைக்
கொடுத்தவனே கற்பைக்
கெடுத்தான் அருகில்
கிடந்து! 08
தான்பெற்ற பெண்ணென்னைத்
தாரமென்று எண்ணி,என்
ஊன்மீது மோகவெறி
உற்றவனை - யான்பெற்ற
சேய்களெல்லாம் தந்தையெனச்
செப்ப விழைந்திடுமே
தாய்வழிப் பாட்டனைத்
தான்! 09
அப்பனை ஆசையால்
ஆளன் எனவழைக்க
எப்படியென் நெஞ்சம்
இடங்கொடுக்கும்? - அப்படியே
கற்பனையும் காணக்
கடவுவதோ? அய்யோநான்
முற்பிறப்பிற் செய்தவினை
யோ? 10
உறவை மறந்தான்;
உறுப்பரிப்பு உற்றான்;
இரவெல்லாம் என்னோ(டு)
இருந்தான்; - இறைவா!சொல்!
பூமெத்தை மீது
புணர்ந்து சுகங்காணும்
காமத்தை ஏன்வைத்தாய்
கண்டு? 11
கூன்படைத்த நெஞ்சக்
கொடியோன் குடிசையிலே
ஏன்படைத்தாய் என்னை?
இடர்படவா? - ஊன்படைத்த
பெண்ணாய்ப் பிறப்பதினும்
பேயாய்ப் பிறப்பதுமேல்
மண்ணாய் மிதிபடினும்
மாண்பு! 12

 பழைய கவிதைதான். உணர்வில் என்ன பழையது புதியது? இல்லறம் என்றொன்று இருக்கின்றவரை, கற்பென்ற ஒன்று காப்பாற்றப் படும்வரை, ஆண் பெண்ணை வஞ்சிக்கும் வரை இந்தக் கவிதைக்கு 'என்டே' கிடையாது...

நெஞ்சோடு புலம்பல்!
(பெயர் ஊர் தவிர்க்கப் பட்டது) முதலிரவில் உடலுறவைக் காணலைக் காட்சியாக மாப்பிள்ளையும், மாப்பிள்ளையின் தாய்மாமனும்எடுத்துள்ளனர். மணப்பெண் காவல்நிலையத்தில் புகார்.
-செய்தி- (2007 ஆக இருக்கலாம்)
கல்லான கடவுள்களா!
இல்லாம போனீகளா?
கொல்லாம எனைக்கொல்லும்
கொடுமையைக் கேட்டீகளா?
சிறுக்கிக்குப் பிறந்தமகன்
சீமைக்குப்போய் வந்தமகன்
படுத்தென்னைப் படமெடுக்கப்
பழிநேரப் பார்த்தீகளா?
மானத்தைக் காப்பவனே
மானத்தைப் பறிச்சாக்கா
மூன்று முடிச்செதற்கு?
முறையான உறவெதற்கு?
நாலு சுவரெதற்கு?
நள்ளிரவுந் தானெதற்கு?
நாலுசனம் பார்க்குதுன்னு
நாணமுண்டா நாய்களுக்கு?
தாய்காணா இடமெல்லாம்
நாய்காண விட்டேனே...
வேசிக்குப் பிறந்தமகன்
மோசத்தைச் செஞ்சானே!
எட்டி இதழ்கடிச்சிக்
கொத்திக் கனிபறிச்சி
முட்டி உயிர்நெரிச்சி
மூனுமுறை ஆனபின்னே...
நான்குகண்கள் தூங்கையிலே
நள்ளிரவும் போகயிலை
மூன்றுகண்கள் விழித்திருக்க
முதல்முதலாப் பார்த்தேனே!
காற்றும் தீண்டாத
கட்டழகு பாகமெல்லாம்
‘காமரா’ மொய்த்ததென்ன?
கண்சிமிட்டிப் பார்த்ததென்ன?
விசுக்குன்னு எழுந்தென்ன?
மேலாடை அணிந்தென்ன?
பொசுக்குன்னு போனவுயிர்
போனவழி மீளலையே!
கத்தி அழுதேனே!
கதவுடைத்துப் பார்த்தேனே!
பொத்தி அழுதேனே!
புலம்பித் தீர்த்தேனே!
உதவிக்கு ஊர்சனம்
ஓடிவரக் கூடலையே!
கதறி அழுதாலும்
‘காமரா’கண் மூடலையே!
தாயைப்படம் பிடித்தபின்னே
தாரமென்னைப் பிடித்தானோ?
தாய்க்குப்பின் தாரமென்று
தாய்த்தமிழில் சொல்கிறோமே!
முக்கோடி தேவர்களே!
மூட்டிய அக்கினியே!
உங்களை சாட்சிவச்சி
மங்கல கயிறுகொண்டேன்...
தாலியே பாசக்
கயிறாச்சே நியாயமா?
வேலியே பயிரை
மேஞ்சிருச்சே சம்மதமா?
தலையெழுத்தே! எனைக்கொன்ற
கொலையெழுத்தே! மாற்றமில்லா
நிலையெழுத்தே! இப்போது
நிம்மதியா சொல்உனக்கு?
ஒசந்துநிற்கும் கோயில்களின்
உள்ளிருக்குஞ் சாமிகளே!
வேளை பார்த்தும்மை
விதிவந்து வளைக்காதா?
சதியே செய்திந்தக்
கதிக்காளாய் எனைச்செய்த
விதிக்கே விதியெழுத
விரலொன்று முளைக்காதா?
அருந்ததி பார்த்தேனே
வருந்துயரம் பார்த்தேனா?
அம்மி மிதித்தேனே
அசிங்கத்தைக் கண்டேனா?
கால்விழுந்து வணங்கையிலே
கள்ளப்புத்தி உணர்ந்தேனா?
மேல்விழுந்து ஆடயிலே
விபரீதம் உணர்ந்தேனா?
படுக்கை எனக்குத்தேள்
கொடுக்கைப்போல் கொட்டியதே...
தேனிலவு எனக்குத்
தீநிலவு ஆகியதே...
எருமை கெடாவேறும்
எமன்வந்து வாய்த்தபின்னும்
அருமை சாவென்னை
அள்ளிக்கொண்டு ஓடலையே...
கருவோடு இருக்கையிலே
கள்ளிப்பால் கொடுக்காம
தொட்டிலிலே கிடக்கையிலே
தொண்டைக்குழி நெரிக்காம
விட்டவளைச் சொல்லோணும்
விடங்கொடுத்துக் கொல்லோணும்
வட்டியொடு முதலாக
வாய்க்கரிசி போடோணும்
கட்டிலிலே சாஞ்சவனே!
கட்டையிலே போறவனே!
பொத்திவச்ச அழகையெல்லாம்
ப்ளூஃபிலிம்மா எடுத்தவனே!
நேரடி ஒளிபரப்பா?
நகலெடுத்த ஒளிபரப்பா?
சின்னத் திரையினிலா?
சினிமா தியேட்டரிலா?
சண்டாளி எம்மானம்
தவணையில் போய்விடுமா?
‘சயனைடு’தின்ற உயிராட்டம்
சட்டுன்னு போய்விடுமா?
நாளைக்கு விடிந்தால்
நாலுசனம் கூடிடுமே...
நாலுசுவர் நடந்தகதை
நான்சொல்ல நேர்ந்திடுமே...
சாயாத கதிராட்டம்
தலைநிமிர்ந்து ஊர்பார்க்க
செய்யாத பிழைக்காக
சிரம்தாழ்த்தி நிற்கணுமே...
உள்ளதை உள்ளபடி
ஒப்பாரி வைப்பேனா?
ஒளிச்சி அதைமறைச்சி
ஒருவாறு சகிப்பேனா?
எமனைப் பெத்துவிட்டு
எம்மேலே ஏவிவிட்டு
சிவனேன்னு மூலையிலே
சாய்ந்துவிட்ட சண்டாளி!
உனக்கொரு மகளிருந்து
உம்மகளைப் படமெடுத்தால்
எனக்கென்ன என்பதுபோல்
ஏக்கெறிஞ்சா கிடப்பாய்?
மஞ்சள் கயிறே
தூக்குக் கயிறாச்சே...
பந்தல் கால்குழியே
பிணக்குழியா மாறிடிச்சே...
இமைவாளி கொண்டிறைத்தும்
விழிக்கிணறு வற்றலையே...
நெஞ்சு இற்றிடுச்சு -அதில்
நெறஞ்சசுமை குறையலையே...
உயிரோட எம்மானம்
உயரத்தில் பறக்கையிலே
பழுதும் கிடைக்கலையே
பரணிட்டு நான்தொங்க!

 ஒட்டியே பக்கத்தில்

ஒக்கார் எளங்கொரங்குக்
குட்டியே! எந்தன்
கொறயக்கேள் – பட்டினி
போட்டுட்டான் புள்ள
பொறத்தே தொறத்திட்டான்
ஊட்டுக் கதவடச்சி
உட்டு! 01
பாக்கப் பரிதாபம்
பாட்டா!உன் சோகத்தத்
தீக்க வழியே
தெரியலயே; – ஆக்கித்தான்
ஊட்டமா சோறள்ளி
ஊட்டி உடுவதுக்கு
ஊட்டம்மா இல்ல
ஒனக்கு? 02
அவசெத்து மாசங்க
அஞ்சா யிடுச்சு
தவமிருந்து வாங்கிவந்த
தாரம் – கவனமாப்
பாக்கயிலும் காலன்
பறிச்சிட்டுப் போயிட்டான்
கேக்கநாதி யத்தேன்
கிழம்! 03
வருத்தப் படாத
மனச உடாத
அருத்தமில் லாம
அழாத – கருத்துலவை
நானிருக்கேன் ஒங்கூட
வானிருக்கே நம்கூட
ஏனிடிஞ்சிப் போற
எளச்சு? 04
கையெடுத்துக் கும்பிட்டும்
காசு விழவில்ல
பையிலயுங் காசு
பணமில்ல – செய்யிறதுக்(கு)
ஆருமே வேல
அளிக்கவில்ல இந்நிலையில்
தீருமா எங்கவல
தேங்? 05
ஓடா எளச்சி
உருக்குலஞ்சிப் போயிட்ட
மாடா ஒழச்ச
மவராசா! – ரோடாண்ட
குந்தி விசனிச்சாக்
கூடிசனம் பாக்காதா?
எந்திரி போவோம்
எழுந்து! 06
பத்துநா ஆச்சு
பருக்கைய நானறிஞ்சு
செத்துடுச்சு கண்ணு
திரைவிழுந்து – எத்தனநா
இப்படியே போவும்
எனக்குத் தெரியலயே
எப்பத்தான் போவேன்
எறந்து!? 07
நூறு வயசுக்கு
நோய்நொடி இல்லாம
மாறும் ஒலகத்தில்
மாறாம – வீறுகொண்டு
வைராக் கியத்தோட
வாழ்வே; எதுக்கும்ஒங்
கைரேக பாக்குறேன்
காட்டு! 08
ஆறுதலா வார்த்தைகள
அள்ளித் தெளிக்கும்நீ
கூறுவதக் கேட்டுக்
குடல்நெறஞ்சேன் – மாறுதல்
ஏற்படும்னு தோனல
ஏனோ இறைவனும்
ஆற்றவில்ல எந்தொயரம்
ஆஞ்சு! 09
கூரையில்லா வீடாக்
கொழுந்து மரமிருக்கு
ஊரைவிட்டுத் தூரம்
ஒசந்திருக்கு – நீரையொட்டி
நிம்மதியா வாழ
நெழலிருக்கு எங்கூட
சம்மதிச்சி வந்துடுதாத்
தா! 10





ஞாயிறு, 26 அக்டோபர், 2025

இன்பத்தேன் வெண்பா!


பெண்கூற்று
மாலை நிலாப்பொழுது;
மங்கை உனதருகில்;
காலை வரையில்நாம்
கண்விழிப்போம்; - சேலைக்குள்
இன்பத்தேள் கொட்டும்
எழிலை எனக்குரைத்து
இன்பத்தேன் வெண்பா
எழுது!
நெஞ்சுப் பொதிகள்;
நெளியும் இடைசுமக்கும்
பஞ்சுப் பொதிகள்;
படர்ந்தவைமேல் – கொஞ்சித்
துயிலக் கொடுத்துவைத்தோய்!
துய்த்துக் களைவாய்
மயிலின் மனத்து
மயல்!
கன்னம் கடித்துக்
கனியிதழ்த் தேன்குடித்துப்
பின்னும் இளநீர்
பெரிதுண்க; - முன்னம்
அசலைப் பருகி
அனுதினமும் ஆங்கே
பசலை வளர்ந்த
படி!
கடைக்கண் வழியும்
கவினைப் பருகி
உடைக்கண் எனைநான்
ஒளிக்க; - இடைக்கண்
அடைக்கலம் தேடியுன்
ஐவிரல் தாவும்
படைக்கலம் போலும்
பறந்து!
நோகும் எனவெண்ணி
நோகாமல் சிற்றிடை
தாகம் தணிக்கத்
தலைப்படாது - ஆகம்
நொறுக்கி எடுத்துமயல்
நோய்தீர்த்து மீண்டும்
பொறுக்கித் தொடுத்துப்
புதுக்கு!
வள்ளல்நான் வந்து
வழங்கும் பொழுதும்நீ
கொள்ளல் விடுத்துக்
குறிவைத்துக் – கொள்ளை
அடிக்கத் துடிக்கும்
அழகை வியந்து
நடித்துச் சிவக்கும்
நகில்!



காய்ச்சல் வெண்பா

 காய்ச்சல் அடித்திடுது

கால்கை கடுத்திடுது
ஓய்ச்சலின்றி நாசி
ஒழுகிடுது - போய்முந்தா
நாள்மாலை பச்சைத்தண்
ணீர்க்குளியல் போட்டதில்
ஆள்கொல்லு கின்ற(து)
அனல்! 01
கணகணக் கின்றது
காயம்; வறண்டு
தொணதொணக் கின்றது
தொண்டை; – சணல்திரிபோல்
மீசை முடியும்
மிகவே பொசுங்கிடுது
நாசிவிடும் சூட்டில்
நசிந்து! 02
காதடைக் கின்றதுடல்
காளவாய் ஆகிறது;
சாதம் சமைத்துத்
தருகிறது – ஆதரவாய்க்
கால்லிட்டர் தண்ணீரைக்
காயத்தின் மேல்வைத்தால்
கால்நொடியில் வெந்நீராய்க்
காய்ந்து! 03
ரம்பத்தால் என்மூக்கை
ராவுவது யார்?தடித்த
கம்பத்தை விட்டுக்
கடைவதுயார்? - தெம்பையெலாம்
மூக்குச் சலியாக்கி
முன்வழியச் செய்வதுயார்?
நாக்கில் சுவையார்
நகி! 04
அடுப்புக்கு மேலே
அமர்ந்ததைப் போலே
இடுப்புக்கு மேலே
எரியப் - படுத்தாலோ
பாய்கருகும் வாசனை
பக்கத்து வீடுவரை
போய்விடுவ தாகப்
புகார்! 05
வடிகால்போல் மூக்கு
வடியும், அதனை
வெடித்தவயற் பாசனமாய்
விட்டால் - விடிவதற்குள்
முப்போகம் காணலாம்;
முன்வருமா நம்விடியல்
அப்பாஆள் கின்ற
அரசு!? 06
எய்தாமல் அம்பை
இருந்த இடம்வைக்கச்
செய்த அனங்கனும்
சென்றுவிட்டான்; – நெய்யூற்றி
மென்மேலும் தீவளர்க்க
வேண்டாம் எனமனதில்
என்மேல் இரக்கம்
எழுந்து! 07
ஈரத் துணியை
எனதுநெற்றி இட்டாலோ
நேரத்தில் காயும்
நிலைகண்டேன்; – பாரத்தை
மாத்திரைமேல் போட
மனமில்லை; ஊசியெனில்
காத்திழந்த பந்தாவேன்
கண்டு! 08
கஞ்சியும் கூடக்
கசக்கிறது; வாய்க்கசப்பு
கொஞ்சமா அச்சம்
கொடுக்கிறது? – நெஞ்சையே
நோகடிக்கும் காய்ச்சலெனும்
நோயை விடஇரைந்தே
சாகடிக்கும் லப்டப்
சவுண்டு! 09
சோக்கரின் மூக்கில்
சொலிக்கின்ற செவ்வுருண்டை
பார்க்க நகைப்பைப்
பரப்புதல்போல் – வீக்கத்தில்
பூச்சியம் போலே
புடைத்ததே வெஞ்சூட்டு
மூச்சில் சிவந்தஎன்
மூக்கு! 10
பத்தியச் சாப்பாடும்
பாயிலே கூப்பாடும்
எத்தனைநாள் இன்னும்
எனவறியேன்; – நித்திரை
வந்தபா டில்லை;
வருங்கனவும் நிம்மதி
தந்தபா டில்லை
தணற்கு! 11
காய்ச்சலென்று டாக்டரிடம்
காட்டினால் கண்டகண்ட
ஆய்வுக்கு நம்மை
அனுப்புவான் – வாய்ப்பமைந்தால்
பையைத் துடைத்துப்
பரதேசி ஆக்கிடுவான்
கையைப் பிடித்தாலே
காசு! 12