சனி, 13 செப்டம்பர், 2025

மதுப்பிரியர் வெண்பா!

 


மதுப்பிரியர் 1:-

பாதையில ஒக்காந்து
பட்டப் பகலுலயே
போதையப் போட்டுப்
புளகிப்போம்; – கீதைகள
அப்புற மாக
அவுத்து உடலாம்நீ
இப்பக் குடிடா
இதை! 01
மதுப்பிரியர் 2:-
பச்சைத்தண் ணீரையே
பத்துருவா மேல்வச்சி
எச்சைப் பயலுக
ஏய்க்கிறான்; – பிச்சையெடுத்து
அன்னாடம் கோட்டருக்கே
அல்லாடும் நம்மிடமே
என்னாடா கொள்ளை
இது!? 02
மதுப்பிரியர் 1:-
தண்ணியப் போட்டாலே
த்துவம் பேசுவநீ...
புண்ணியமாப் போகும்,
புலம்பாதே! – ‘அண்ணியார்
கண்ணாலச் சேதியக்
கண்டதுஞ் சின்னவர்
புண்ணானார்’; கட்டிங்கப்
போடு! 03
மதுப்பிரியர் 2:-
எம்பது கோடியில
பேனா சிலையெடுத்து
அம்பது கோடிக்கு
மைவாங்கி – அம்பதுல
பாதிக்குக் காகித
பண்டலுமே வாங்கிருக்கான்
பேதியில போற
பெரிசு! 04
மதுப்பிரியர் 1:-
அடிச்சேன்றான்; கால
ஒடிச்சேன்றான்; கொன்னு
முடிச்சேன்றான் ‘சிந்தூர்’ல
மோடி; – வெடிச்சத்தம்
காத்துவாக் கில்வந்து
காதில் விழும்முன்ன
தீத்துவச் சேன்றானே
ட்ரம்பு! 05
மதுப்பிரியர் 2:-
பக்கத்து நாடெல்லாம்
பத்தி எரியுதே
வக்கத்த தீயிங்கே
வாராதா? – கொக்கரிக்கும்
சங்கிப் பயலுகளச்
சாவள்ளிப் போகாதா?
இங்குத் திராவிடமும்
இத்து! 06
மதுப்பிரியர் 1:-
என்னடா இந்த
இசுரேல் நெதன்யாகு
சொன்னாலும் கேட்காம
துள்ளுறான்? – இன்னிவரை
பாவத்துக் கஞ்சாம
பாலத்தீன் மக்களக்
கோவத்தில் கொன்னு
குவிச்சு! 07
மதுப்பிரியர் 2:-
கோட்டர் விலையேறக்
கூடும் டொனால்ட்ட்ரம்ப்
போட்டவரி யால்,அதுக்குப்
பொங்காம – மேட்டரை
நாடுவிட்டு நாடு
நகத்துறியே என்னடாஉன்
கேடுகெட்ட புத்தி?
கிளம்பு! 08
மதுப்பிரியர் 1:-
மரியாத இல்லாம
பேசாத மச்சான்;
புரியாம பண்ணுதா
போதை? – தெரிஞ்சிருந்தும்
கூப்பிட்டு வந்தவனைக்
கூர்பார்க்கச் சொல்லுதா
சாப்பிடத் தந்த
சரக்கு!? 09
மதுப்பிரியர் 2:-
பொத்துடா வாய
பொறம்பொக்கு; போதையிப்போ
பத்தல, வேற
பணமிருக்கா? – சுத்துற
உந்தலைய வித்தா
ஒருநூறு தேராதே;
எந்தலையும் விப்போம்
எழு! 10

வெள்ளி, 12 செப்டம்பர், 2025

 

Anbuvalli Thangavelan

ஏழென்று நீ சொன்னால் எப்படிப்பா நீயென்றும்

ஏழரையா யிற்றே இதைமறுத்து‌ - வாழ்வாரார்

உன்பாட்டுக் கீடாய் ஒருவர் உளரோயாம்

அன்புடைய ரானதத னால்!

 

யார்சீண்டினாரோ எதற்கிந்தச்சீற்றமோ

சீர் மிக்காய்சீற்றமிது தீர்!

 

அகரம் அமுதன்

தீண்டும் அளவிற்குத் தீரன் எவனுள்ளான்?

காண்டில் முதுகின்பின் கத்தலாம்; - தூண்டியது

வெண்பா வடிக்க விடலைப் பயல்படம்;

பண்பாய் உளமுரைத்தேன் பார்த்து!

 

ஏழா? எனக்கறிவு ஏழரையா? கண்டுரைத்த

தாயார் தமக்குத் கலைவணக்கம்; - பாழான

நாளில் படிக்கின்றேன் நான்பாடல்; நூற்றாண்டின்

நீளம் எனதுபெரும் நோக்கு!

 பல்ல ஒடைக்கிறேன் பார்!

கன்று!
மூக்கெனக்குக் குத்திவிட
முந்தானை போட்டிழுக்கும்
ராட்சசியே! மூக்கு
ரணமானால் – கேட்கஒரு
நாதியிருக் காஎனக்கு?
ஞாயமிருக் காஉனக்கு?
பீதிகிளப் பாமபதில்
பேசு! 01
கிழவி!
ஆணி எடுத்துவல்ல,
கோணிஊசி கொண்டுவல்ல,
வீணிலழ வேணாம்
விசனம்விடு; – சாணியிடும்
கன்னுக்குக் குண்டூசி
கண்டெடுத்து வந்திருக்கேன்
ஒன்னும் வலிக்காது
ஒனக்கு! 02
கன்று!
இப்பவே நான்பாக்க
எட்டூர் அழகாச்சே!
அப்புறமும் வேற
அழகெதுக்கு? – ஒப்புரான
சத்தியமா என்னை
சமாதானம் செய்யாமக்
குத்தினாப் போட்டுடுவேன்
கொன்று! 03
கிழவி!
தங்க எழையெடுத்துத்
தாம்புக் கயிறுபின்னி
அங்கத்தில் பூட்டி
அழகுபாக்க – இங்குவந்தா
உம்பாட்டுக் கேதோ
உளறித் திரியிறியே
கொம்புத் தலையாட்டிக்
கொண்டு! 04
கன்று!
இத்த கயிறுஅதை
ஏழுபவுன் இன்னுசொன்னா
செத்த பிணமும்
சிரிக்காதா? – குத்துறத
மூக்கோட நிப்பாட்டு,
மூளைக்கும் நீட்டாத,
ஏக்கர் கணக்கிலெனை
ஏய்ச்சு! 05
கிழவி!
வம்புப்பே சாம
வரலேன்னா இப்பவே
கம்பா லடிச்சிஉன்
காலொடைப்பேன்; – நம்பியுன்ன
புள்ளையப்போல் நான்வளர்த்தாப்
போக்கிரியா நீயிருக்கே;
பல்ல ஒடைக்கிறேன்
பார்! 06
கன்று!
நீமட்டும் திண்ணையில
நிம்மதியாத் தூங்கயில
நான்மட்டுங் கொட்டகையில்
நாறணுமா? - வாய்மட்டும்
பேசறியே எம்மேல
பாசத்தக் காட்டறியா?
ஏசமட்டஞ் செய்யிறியே
ஏன்? 07
கிழவி!
எட்டூரு மாடுகட்ட
ஏத்த தொழுவத்த
விட்டுவிட்டுக் கேக்குதா
வீடுனக்கு? – கெட்டியான
தோடுவித்த காசில்
தொழுவத்தச் சீரமைச்சும்
பாடுவது ஏன்பஞ்சப்
பாட்டு! 08
கன்று!
வெத்தலையும் சுண்ணாம்பும்
வெட்டிவெச்ச பாக்கோடு
கொத்தாகச் சீவல்
குவிச்சிவச்சி - நித்தம்
கிழவனுக்கு ஊட்டுங்
கிழவியொரு வாட்டிக்
குழவியெனக்கு ஊட்டுனியா
கூறு! 09
கிழவி!
வெத்தலை கேக்குதா
வெட்டிப் பயலுக்கு?
மத்ததெதும் வேணுமா
மாட்டுக்கு? – செத்தயிரு
மூக்கோடு சேத்துனது
நாக்குலயும் குத்துறேன்
ஆக்காட்டு வெக்கிறேன்
ஆப்பு! 10
கன்று!
நாலுகால் பாச்சலுல
நாலூரு சுத்திவந்து
மேலுகால் நோவுதுன்னு
விம்மயில, - காலுகால்
இன்னுநீ கத்தாம
எங்கால் அமுக்குறேன்னு
சொன்னாக் குறைச்சலென்ன?
சொல்! 11
கிழவி!
கொமட்டுலயே ஒன்னு
கொடுத்தாத் தெரியும்;
நமட்டுச் சிரிப்பெதுக்கு
நாயே? – குமட்டுறன்னு
பாலாக் கொடுத்துப்
பழங்கஞ்ச நாங்குடிச்சா
ஆலாப் பறக்குறநீ?
ஆங்! 12

 பையன் 1

மச்சான் இருடா!
வராப்போல் இருக்குடா!
உச்சா விடணும்
உதவுடா! - வச்சானா
குஞ்சாம் மணிபுடிச்சிக்
கூலா விடும்ஒசரம்?
என்னா பிளம்பர்
இவன்?
பையன் 2
எம்மாம்நே ரம்டா?
எனக்கு வலிக்கிதுடா!
சும்மா முதுகு
சுளுக்குதுடா! - அம்மாடி!
என்னா கனம்டாநீ?
யப்பா! பொணம்டாநீ?
சொன்னா இறங்கித்
தொலை!
பையன் 1
ஒத்த நிமிஷமும்
உள்ளம் பொறுக்காம,
கத்தி அழுது
கதறாம, – செத்தயிரு!
முந்தி வருகிற
மூத்திரம் உம்மேல
சிந்தாமப் போணும்
சிறிது!
பையன் 2
தண்டு வடமுடையும்
சத்தம்நீ கேக்கலையா?
கண்டும் பொழுதக்
கடத்துறியா? – அண்டாவில்
கொள்ளும் அளவுக்கா
கொட்டுற மூத்திரத்த?
முள்மேல்நின் னாப்போல்
முடி!
பையன் 1
ஆத்திரங் காட்டி
அதட்டுனா என்னால
மூத்திரம் போக
முடியுமா? – காத்துல
உம்மேலப் பட்டா
உசிரெடுக்க மாட்டியா?
சும்மா இருடா
சுமந்து!
பையன் 2
என்னச் சுமக்கயில
என்னென்ன பேசின?
ஒன்னுக்கு நாம்போக
உட்டியா? – கன்னத்தில்
ஓர்துளி பட்டதுக்கே
ஒப்பாரி வெச்சியே!
பார்,தெறிக்கு தெம்மேலப்
பட்டு!
பையன் 1
எம்மேலத் தப்பில்ல;
ப்ளம்பிங் சரியில்ல;
உம்மேல் குறைசொல்ல
ஒன்னுமில்ல; – சும்மாவே
ஒம்போ தடிதாண்டி
ஒன்னுக்கு நாம்விடுவோம்;
எம்ப முடியலையே
இங்கு!
பையன் 2
ஒன்னுக்கக் கொண்டுநாம்
ஓவியம் போட்டதெல்லாம்
இன்னைக்கும் நெஞ்சில்
இருக்குது; – அன்னைக்குச்
சாத்தான நாம்வரைய
சாமின்னு கும்பிட்ட
தாத்தா நினைவுவரார்
சற்று!
பையன் 1
விட்டு முடிக்கும்முன்
வீணாச் சிரிப்பேத்தித்
திட்டவும் செய்யிற
சிந்துதுன்னு; – முட்டிவர
மூத்தரத்தத் தானடக்க
என்னால் முடியாது;
ஆத்திரத்தக் கொஞ்சம்
அடக்கு!
பையன் 2
சிரிச்சிச் சிரிச்சே
வயித்து வலியில்
மறந்தேன் முதுகு
வலிய; – இறங்குடா!
வெட்டவெளி தான்நம்
விருப்பத்துக் கேத்தது;
வெஸ்டர்ன்டாய் லெட்டெல்லாம்
வேஸ்ட்!

 குழந்தை 1

அங்கப்பார் பூச்சாண்டி;
அஞ்சூர ஏச்சாண்டி;
திங்கக் குழந்தைகளத்
தேட்றான்டி; - சங்கக்
கடிப்பான்டி; ரத்தம்
குடிப்பான்டி; கைகால்
ஒடிப்பான்டி; ஓடி
ஒளி!
குழந்தை 2
நெசமாவா சொல்ற?
நிறுத்தாதேன் கொல்ற?
பசங்கன்னா கோரப்
பசியா? - அசந்தாக்க
தூக்கி அலேக்கா
தொலைதூரம் போய்க்கறிசோ(று)
ஆக்கித்தின் பானா
அவன்?
குழந்தை 1
உளிநக மாக
உலக்கைவிர லாக
அளியென்ப தில்லா
அரக்கன், - கிளிகொடுக்கும்
கையுரலத் தூக்கிக்
கடாசி நமைப்பிடிச்சு
மையிருளில் போவான்
மறஞ்சு!
குழந்தை 2
குடல்மாலை சூடிக்
குழந்தைகள் தேடிப்
படலோரம் வாரான்
பதுங்கி; - நடமாட
ஆவுறதா வீதியில?
அச்சத்தில் நெஞ்சடச்சுச்
சாவுறதா நாம
தவிச்சு!?
குழந்தை 1
ஆளில்லா நேரத்தில்
ஆம்புடும் புள்ளைகளத்
தோளுல போட்டுச்
தொலைஞ்சிடுவான்; - நாளுக்கு
நாள்இவன் தொந்தரவால்
நாற்பது ஊர்காலி;
கேள்இவனால் நம்மூர்க்கும்
கேடு!
குழந்தை 2
மூக்குக்குக் கீழ
முழநீள மீசைக்குத்
தேய்க்கத்தான் தேடிவரான்
செங்குருதி; - காக்கத்தான்
நாதியில்லா நம்மள
நல்லாப் பயமுறுத்தும்
பேதியில போறஅச்சப்
பேய்!
குழந்தை 1
மோப்பம் புடிக்கிறான்
மூச்சும் உடாதடி;
ஆப்புட்டோ முன்னா
அதோகெதி; – சாப்பிடத்
தான்டி பசியேப்பந்
தானா விடுகிறான்;
ஏன்டி! அசையாது
இரு!
குழந்தை 2
அடிமேல் அடிவெச்சு
அடுத்தஎடம் போவோம்;
முடியலயின் னாலும்
முயல்வோம்; - தடியரக்கன்
தேடி வரதுக்குள்
சிட்டாப் பறந்துடுவோம்
ஓடிவா போயிடுவோம்
ஊடு!
குழந்தை 1
ஊட்டுக்குப் போனா
உடுவான்னா நீநெனச்சே
வேட்டுவெப் பான்டி
விரல்கடையால் – மாட்டாம
கோவிலுக்குப் போயி
கொளஞ்சியப்பன் தாள்புடிப்போம்
ஆவிமொத்தம் காப்பான்
அவன்!
குழந்தை 2
போவுறதுக் குள்ள
புடிச்சிட மாட்டானா
சாவுறதுக் கேன்டி
சதிசெய்ற? – ஆவுறது
ஆவட்டும் நாம
அசஞ்சா முழுங்கிடுவான்
பாவம்பாக் காம
பசிக்கு!

திங்கள், 8 செப்டம்பர், 2025

 நக்கல் புடிச்சவன் நான்!

‘தப்பாப் புடிச்சிருக்கான்
தம்பியந்த புத்தகத்த
இப்போ’, எனயாரும்
ஏசாதீர்; – அப்படியே
கண்ணால் படமாய்க்
கருத்தில் நெறச்சிடுவேன்;
உண்மையில் அத்திறமை
உண்டு! 01
அச்சடிச்ச புத்தகத்த
அப்படியே நாம்படிச்சி
உச்சரிப்ப தோட
உடமாட்டேன்; – சச்சரவில்
சிக்கத் தலைகீழாச்
செப்புவேன்; ரொம்பவே
நக்கல் புடிச்சவன்
நான்! 02
மல்லாக்கத் தாம்படுத்து
வாசிச்சாப் பாடமிடும்
நல்லாவே மண்டைக்குள்
நங்கூரம்; – பொல்லாப்புப்
பத்திக் கவலைப்
படமாட்டேன்; என்னோட
புத்திக் கிதுசரிதான்
போ! 03
தலைகீழா நாம்படிச்சிச்
சாதிப்பேன்; எந்த
நிலையிலும் வீழாம
நிப்பேன்; – அலைக்கஞ்சி
ஆடலாம் கப்பல்,
அடிவானம் ஆடுமா?
ஊடறுப்ப தென்குணம்தான்
ஓடு! 04
சுதியோடு வாசிக்குஞ்
சூறா வளிநான்
மதிநெறய வாய்ச்ச
மழலை; – கதியில்
நகத்தாலக் கீறி
நதிவற்றச் செய்வேன்;
எகத்தாளம் ஜாஸ்தி
எனக்கு! 05
விஞ்ஞானி ஐன்ஸ்டீன
விஞ்சுகிற நுண்ணறிவ
பிஞ்சி வயசுலயே
பெற்றாலும் – நெஞ்சோரம்
தற்பெரும இல்லாத
தம்பிப் பயலெந்தன்
நற்பெரும பேசலயே
நாடு! 06
நித்தமொரு புத்தகத்த
நித்திரைக்கு முன்னால
புத்தியில ஏத்தும்
புலவன்நான் – மத்தியச்
சோறே எனக்குச்
சுவடிதான்; ஏழெனக்கு;
ஆறே பிறருக்கு
அறிவு! 07
சாஞ்சிப் படுத்துத்
தரவாப் படிப்பேன்நான்
மாஞ்சிப் படிக்கிறவன்
மத்தியில; – மூஞ்சிபுக்கில்
நேரத்தப் போக்காம
நீயும் எனைப்போலப்
பாரத்த விட்டுப்
படி! 08
கம்பனுக்கே பாடங்கள்
கத்துத் தருகின்ற
கொம்பனையார் வெல்வது
கோதாவில்? – வெம்புலி
வெண்பா எனக்கு
விளையாட்டுப் பொம்மையே
வெண்பால் நிலவெனக்கு
வீடு! 09
வலமிருந்து கூடநான்
வாசிப்பேன்; நூலத்
தலைகீழா வச்சும்
படிப்பேன்; – கலைபல
தேர்ந்தஎங் கூட
தெகிரியமாப் போட்டியிட்டுத்
தேர்வுல வென்றவனத்
தேடு! 10

ப‍ப்பு!

 பப்புஎனும் இந்தப்

பரதேசி கால்படி
உப்பும் பொறாத
உப்புமா; - எப்பொழுதும்
இந்திய தேசத்தை
எள்ளி நகையாட
அந்நியன் ஏவுகிற
அம்பு! 01
சவார்க்கருக்குப் பப்பு
சளைத்தவன் இல்லை;
அவாள்களில் பப்பும்ஓர்
ஆள்தான்; - நவாப்பழ
செந்தமிழா! இந்தத்
திருட்டுப் பயலையெல்லாம்
சிந்தையில் ஏற்பதும்
தீட்டு! 02
உள்ளூர் உதயநிதிக்கு
ஒன்றும் குறைவில்லாப்
பிள்ளைதான் பப்பிவனும்
பித்தன்தான் - அள்ளித்
தலையிலே வைத்தல்
தரித்திரம்; ஈழம்
இலையென வாக்கியதை
எண்! 03
ஓரறிவே கொண்ட
உயிரினம் தான்ராகுல்;
பேரறிவன் என்கின்ற
பேத்தல்விடு - தீர
விசாரித்துப் பார்த்தால்
விவகார மான
பிசாசுதான் பப்புஎனும்
பேய்! 04
வயதிற்குண் டான
மதியில்லா மாடு;
பயனற்று வாழும்
பகடு; - முயன்றாலும்
ஆட்சியைக் கைப்பற்ற
ஆகாத தற்குறி;
காட்சிப் பிழையிவன்
காண்! 05
கத்திக் கதறுகிற
காட்டுப் பெரும்பன்றி;
புத்தி சிறிதுமில்லாப்
பூச்சாண்டி; - மத்தியில்
மண்கவ்வ நாளும்
மமதையில் வாயாடும்
பண்பாடு பேணாப்
பயல்! 06

என்நிலமை மோசந்தான் இன்று

 என்நிலமை மோசந்தான் இன்று

பச்சக் குழந்தையென்னப்
பாத்துக்க வேலையாள்
வெச்சிட்டு போறல்ல
வேலைக்கி? - நச்சரிச்சி
நாளுநாள் நானழுதும்
நாணயந்தான் முக்கியம்னு
தோளுமேல் தோல்பை
சுமந்து! 01
தூக்கி எனைக்கொஞ்சித்
தோளுல தூங்கவெச்சிப்
பாக்குறது எல்லாம்
பணிப்பெண்தான்; - ஏக்கத்தில்
கேக்குறன் உன்மடி
கிட்டாதா நாந்தூங்க?
தூர்க்கிறதா உன்னன்பைத்
துட்டு!? 02
சந்தைக்கிப் போயித்
தவிட்டுக் கெனைவாங்கி
வந்ததுதான் உண்மை;
மறுபடியும் - சந்தையில
வித்துடுங்க நான்வேற
வீட்டுக்குப் போயிடுறேன்;
எத்தனதான் நாம்பொறுப்பேன்
இங்கு!? 03
பாலூட்டி என்னப்
படுக்கவெச்சி நாந்தூங்கத்
தாலாட்டுப் பாடித்
தனிமையில - மாலாகக்
கொஞ்சிக் கிறிங்க;
குலவிக் கிறிங்க;எனை
வஞ்சிக் கிறிங்கநல்லா
வச்சு! 04
பால்சோறு வேணாம்;
பழச்சாறும் வேணாமே;
பால்புட்டி வேணாம்
பசியில்ல; - வால்பய,ன்னு
பால்பல் மொளச்சயென்னப்
பாடாப் படுத்தறிங்க;
கால்நடையா நாம்போறேன்
காடு! 05
பத்திரமாப் பாத்துக்கப்
பாட்டியில்ல; தேடுகையில்
அத்தனில்ல; கொஞ்சவும்
அம்மையில்ல; - மொத்தத்தில்
பொம்மைக்குப் பஞ்சமில்ல;
பொய்களுக்கும் பஞ்சமில்ல;
உம்மைக்கே பஞ்சமுள்ள
ஊடு! 06
எங்கட்சி சேர,
எனக்காகப் பேச,ஒரு
தங்கச்சிப் பாப்பா
தரவில்ல? - எங்கிட்டப்
பேச்சுக் கொடுத்துவெறுப்
பேத்தநெனைக் காதிங்க
ஏச்சுக் கொடுத்தெனை
ஏய்ச்சு! 07
முத்துன்னும் தேச
முதல்வன்னும் நாம்பெத்த
சொத்துன்னும் ஏதேதோ
சொல்றீங்க; - அத்தனையும்
பொய்யாக்கி வேலைக்குப்
போறீங்க; ஏதிலிபோல்
மெய்யாகத் தேயிறன்நான்
வெந்து! 08
கூட இருந்தென்னைக்
கொஞ்சி, ஒளிஞ்சிவிளை
யாட மகிழ்ச்சி
அரும்பாதா? - வாடவிட்டு
வாரக் கடைசியில
வாரி அணைச்செடுத்து
ஆரத் தழுவுறதா
அன்பு? 09
பொம்மை இருக்கு
பொழுதும் விளையாட;
அம்மைமட்டும் தானே
அருகிலில்ல; – இம்மையில்
என்னிளமை இப்படியா
ஏக்கத்தில் தேயணும்
என்நிலமை மோசந்தான்
இன்று! 10

நம்பிப் பொறுகொஞ்ச நாள்!

 
நம்பிப் பொறுகொஞ்ச நாள்!

மொட்டு விழியோடு
முத்து மலரேநீ
சொட்டிக்கண் ணீரைச்
சொரிவதேன்? – திட்டியே
அம்மா அடித்தாளா?
அப்பா முறைத்தாரா?
இம்மாம் விசனம்
எதற்கு? 01
புன்னகை சிந்தாத
பூவுண்டா? கண்ணீர்ஏர்
கன்னம் உழுவது
தான்நன்றா? – இன்னமும்
நெஞ்சில் நிறைவேறா
நேசக் கனவுண்டா?
அஞ்சி அழலாமா
அஞ்சு!? 02
சின்ன மகராணிக்கு
என்ன பெருஞ்சோகம்?
சொன்னால் குறையும்
துயர்யாவும்; – அன்றாடம்
ஆட்டத்தில் சேர்க்காத
அண்டை மழலையரால்
வாட்டமடைந் தாயா?சொல்
வாய்! 03
ஆராரோ பாடுகையில்
அன்னை உனைப்பற்றிப்
பாராட்டிப் பாடிய
பொய்பலவும் – நேராத
சோகத்தி லாகண்ணீர்
சிந்துகிறாய்? ஏதோஒர்
வேகத்தில் சொன்னாள்;
விடு! 04
நண்டு பிடித்துனக்கு
நல்கிடவா? பூமேற்பொன்
வண்டு பிடித்து
வழங்கிடவா? – கண்டொரு
தும்பி படித்துத்
தரவா? எதைநினைந்தும்
வெம்பிப் பிடிக்காதே
வீம்பு! 05
பாடம் புரியலையா?
பள்ளி சரியிலையா?
மேடம் விரட்ட
மிரண்டாயா? – தேடரிய
பொன்னே! சிறுகரடிப்
பொம்மை தொலைத்தாயா?
என்னேஉன் ஏக்கம்
இயம்பு! 06
அத்தை அடித்தாளோ
அல்லிப்பூச் செண்டாலே;
சித்தி அடித்தாளோ
சிண்டாலே; – ஒத்தையில்
தம்பி துணைகேட்டுத்
தான்வெம்பு கின்றாயோ?
நம்பிப் பொறுகொஞ்ச
நாள்! 07