திங்கள், 9 ஜூன், 2008

குறள்காத்தல் கோளாங் குறி!

இரும்புவி யாங்கும் இருமிலக்கி யத்துள்
திருக்குறள்போ லுண்டோ திரு?

விண்தேடும் வள்ளுவனார் வேய்ந்த* குறள்முடியை;
மண்தேடும் தாளின் அடி!

ஆகாப்பாழ் பண்பை அகற்றுந் திருக்குறளாம்
பாகாப்பாய் நன்கு படித்து!

திரள்*செல்வம் என்றேநம் தீங்தமிழ்க்கு வாய்த்த
குறள்காத்தல் கோளாங் குறி!

குறட்பா படித்தாய்ந் துணரின் முறையாய்த்
திரண்டு வருமே தமிழ்!

வேய்ந்த* -சூடிய, திரள்* -மிக முடுகிய நடையுடைய பாட்டு!


அகரம்.அமுதா

6 கருத்துகள்:

  1. மிகவும் நல்ல முயற்சி அகரம் அமுதா..

    ஒருசில இடங்களில் புரியவில்லை..
    மெதுவாக பதம்பிரித்து வாசித்துவிட்டு வருகிறேன்..

    பதிலளிநீக்கு
  2. தமிழில் புணர்ச்சி விகுதி என்பது இன்றியமையாத ஒன்று. புணர்ச்சிவிகுதியைத் தெரிந்துக் கொண்டால் மிக இலகுவாக எவ்வளவுக் கடினத் தமிழாக இருப்பினும் புரிந்துவிடும்!

    பதிலளிநீக்கு
  3. அமுதா,

    என் போன்றவர்களுக்கு எளிய தமிழில் புரியும்படி கொஞ்சம் இதை சொல்லித்தர முடியுமா?

    பதிலளிநீக்கு
  4. ///என் போன்றவர்களுக்கு எளிய தமிழில் புரியும்படி கொஞ்சம் இதை சொல்லித்தர முடியுமா?///

    /1-இரும்புவி யாங்கும் இருமிலக்கி யத்துள்
    திருக்குறள்போ லுண்டோ திரு?/

    உலகில் இதுவரை இயற்றப்பட்ட நூல்களுள் திருக்குறளைப்போல் மதிப்பு மிகுந்த நூலும் உண்டோ?

    /2-விண்தேடும் வள்ளுவனார் வேட்ட குறள்முடியை;
    மண்தேடும் தாளின் அடி!/


    பிரம்மனும் பெருமாலும் ஈசனின் அடிமுடியைத் தெடியலைந்த கதை தங்களுக்குத் தெரியுமல்லவா? அதுபோல் இரண்டே அடிகளைக்கொண்ட குட்டையான பாவாகத் திருக்குறட்பா இருந்தாலும் அது அடைந்த புகழின் அடிமுடியை விண்ணும் மண்ணும் தேடியலைகின்றது என்று பொருள்.

    /3-ஆகாப்பாழ் பண்பை அகற்றுந் திருக்குறளாம்
    பாகாப்பாய் நன்கு படித்து!/


    நற்பண்புகளோடு தொடர்பில்லாத தீயப்பண்புகளைத் தன்னகத்தே கொண்ட நன்னெறிகளால் அகற்றும் திருக்குறலாகிய பா தன்னை நன்குபடித்து நெஞ்சகத்தே போற்றிக்காப்பாய்.

    /4-திரள்செல்வம் என்றேநம் தீங்தமிழ்க்கு வாய்த்தக்
    குறள்காத்தல் கோளாங் குறி!/


    செம்மொழியாகிய தமிழின் மேன்மைக்குச் சான்றாக விளங்கும் திருக்குறளைப் போற்றிக் காப்பதே நம் குறிக்கோள்.

    /5-குறட்பா படித்தாய்ந் துணரின் முறையாய்த்
    திரண்டு வருமே தமிழ்!/

    இத்துணை சிறப்புகளும் வாய்க்கப்பெற்ற திருக்குறளைப் படித்துவந்தால் நம் எழுத்தில் செந்தமிழும் செம்பொருளும் திரண்டு நிற்குமே!

    விளக்கம் போதுமா அனுஜன்யா அவர்களே?

    பதிலளிநீக்கு
  5. i think the archive you wirte is very good, but i think it will be better if you can say more..hehe,love your blog,,,

    பதிலளிநீக்கு