சனி, 28 பிப்ரவரி, 2026

வேணாம் நமக்கெதுக்கு வம்பு!

 

ஷீலா -

 

அக்கா அலமே(லு)! அறிஞ்சேன் ஒருசேதி;

நிக்காம‍ப் போனா நியாயமா? – ஒக்காந்தால்

கூறுவேன் காதில்; குறிப்பறிந்து கொண்டாயேல்

சேருமே ஊர்காதில் சென்று!

 

அலமேலு

 

அப்படி என்னடி அந்தரங்கம்? என்னிடம்

ஒப்புவி ஊரே உனைவணங்கும்; – இப்பநான்

போய்ப்பார்க்க வேறு பொழப்பில்லை; உன்னுடைய

வாய்பார்த் திருக்கேன் வழங்கு!

 

ஷீலா -

 

கூத்தப்பன் பேரன் குமர குருவுக்கும்

காத்தாயி பேத்திக்கும் காதலாம்; – ஆத்தோரம்

நாணலாம்; ஊரார் நடமாட்டம் ஓய்ந்தபின்

காணலாம் லீலை களாம்!

 

அலமேலு -

 

சீவி மினுக்கிச் சிலுக்கு நடைநடந்து

தேவிவரும் போதே தெரியுமடி; – நாவிதமாய்ப்

பேசி எவனாச்சும் பேதலிக்க வைப்பான்னு;

போய்சிக்கிட் டாளாஅப் பொண்ணு!?

 

ஷீலா -

 

அம்புவிட்டுக் கண்ணை அலையவிட்டுப் பெண்ணவளை

நம்பவச்சுப் பின்னால் நழுவிவிட்டான்; – நம்ம‍ஊர்

தெக்கால வீதி சிவனாண்டி சின்னமவன்

முக்காலும் சோலி முடிச்சு!

 

அலமேலு -

 

அவனுக்கு முன்னால் இவனா? இரண்டோர்

தவறுமே செய்யா தவனா? -  அவள்கெட்டக்

கேட்டுக்குக் காதல் கிறுக்கல்கள் ரெண்டா?ஊர்

நாட்டுக்குள் இஃதா நடப்பு?

 

ஷீலா -

 

அறிஞ்ச வரைசொன்னான் அக்கா! அடநான்

அறியா ததையா அளந்தேன்? – நெறிமறந்தும்

காணாத ஒன்றைக் கதையாத் திரிப்பேனா?

வேணாம் நமகெதுக்கு வம்பு!

 

அலமேலு -

 

அலர்பேச நாமதான் ஆளா? அதுக்குச்

சிலருண்டே ஊரிலே ஷீலா! – குலசாமி

கும்பிட்டுப் பார்ப்போம் குடும்பத்தைப் போகையிலே

எம்புட்டுப் போறோம் எடுத்து!?




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக