ஷீலா -
அக்கா அலமே(லு)! அறிஞ்சேன் ஒருசேதி;
நிக்காமப் போனா நியாயமா? – ஒக்காந்தால்
கூறுவேன் காதில்; குறிப்பறிந்து கொண்டாயேல்
சேருமே ஊர்காதில் சென்று!
அலமேலு
அப்படி என்னடி அந்தரங்கம்? என்னிடம்
ஒப்புவி ஊரே உனைவணங்கும்; – இப்பநான்
போய்ப்பார்க்க வேறு பொழப்பில்லை; உன்னுடைய
வாய்பார்த் திருக்கேன் வழங்கு!
ஷீலா -
கூத்தப்பன் பேரன் குமர குருவுக்கும்
காத்தாயி பேத்திக்கும் காதலாம்; – ஆத்தோரம்
நாணலாம்; ஊரார் நடமாட்டம் ஓய்ந்தபின்
காணலாம் லீலை களாம்!
அலமேலு -
சீவி மினுக்கிச் சிலுக்கு நடைநடந்து
தேவிவரும் போதே தெரியுமடி; – நாவிதமாய்ப்
பேசி எவனாச்சும் பேதலிக்க வைப்பான்னு;
போய்சிக்கிட் டாளாஅப் பொண்ணு!?
ஷீலா -
அம்புவிட்டுக் கண்ணை அலையவிட்டுப்
பெண்ணவளை
நம்பவச்சுப் பின்னால் நழுவிவிட்டான்; – நம்மஊர்
தெக்கால வீதி சிவனாண்டி சின்னமவன்
முக்காலும் சோலி முடிச்சு!
அலமேலு -
அவனுக்கு முன்னால் இவனா? இரண்டோர்
தவறுமே செய்யா தவனா? - அவள்கெட்டக்
கேட்டுக்குக் காதல் கிறுக்கல்கள் ரெண்டா?ஊர்
நாட்டுக்குள் இஃதா நடப்பு?
ஷீலா -
அறிஞ்ச வரைசொன்னான் அக்கா! அடநான்
அறியா ததையா அளந்தேன்? – நெறிமறந்தும்
காணாத ஒன்றைக் கதையாத் திரிப்பேனா?
வேணாம் நமகெதுக்கு வம்பு!
அலமேலு -
அலர்பேச நாமதான் ஆளா? அதுக்குச்
சிலருண்டே ஊரிலே ஷீலா! – குலசாமி
கும்பிட்டுப் பார்ப்போம் குடும்பத்தைப் போகையிலே
எம்புட்டுப் போறோம் எடுத்து!?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக