செவ்வாய், 24 பிப்ரவரி, 2026

ஜானகி! சங்கோ ஜமா?

ஜானகி! சங்கோ ஜமா?


உன்வாசம் வேண்டி உயிரை எடுக்கிறது

தன்வாசம் போதாத் தளிரிளம்பூ; - என்றன்

சிபாரிசை வேண்டிச் செருமிடுது; தன்னின்

அபாக்கியம் சொல்லி அழுது!


அந்திவான் கூட அடம்பிடிக்கும் உன்கன்னம்

தந்தநா ணச்சிவப்பைத் தான்பெறவே; - சொந்தமாய்

உன்குளிர்ச்சி வேண்டி ஒருகாலில் ஊதைநிற்கும்

தன்குளிர்ச்சி மொத்தம் தவிர்த்து!


'ஏழாங்கல் ஆட எடுத்துக்கொள் என்னுடைய

கூழாங்கல், மாற்றாய்க் கொலுசுகொடு' - தாழாத்

தலைதாழ்த்தி ஆறு தவம்கிடக்கும்; தண்ணீர்

அலைத்தூது விட்டே அலுத்து!

தேயா நிலாவுன்போல் தேயா திருப்பதற்கே

ஓயாமல் ஆராய்ந்தே ஓய்ந்த‍நிலா – நேயா!நீ

கேட்டால் ரகசியம் கிட்டத் தருவாள்உன்

வீட்டாள்’, எனப்புலம்பும் வீற்று!


நன்றாய் இசைபூக்கும் நாணற்புல் லின்வகையில்

ஒன்றான மூங்கிலழும் உட்கார்ந்து; - மென்குரலாள்

தன்குரலைத் தந்தால் தரிப்பேன் உயிர்இன்றேல்

இன்குரலாள் முன்னிறப்பேன்’, என்று!

வானவில் பாவம் வளைந்தே ஒடிகிறது

ஏனவள் போல்நிறத்தில் இல்லையென்று; - தேனருந்த

பூவிட்டுன் வீடு புகுந்ததே பொன்வண்டு;

ஏவியது நானா? இலை!


இருக்கின்ற கூந்தல் இருட்டினும்மேல் என்று

திருக்குறள் போலநான் செப்பக் – கருக்கலில்

தூக்கத்தை விட்டே துள்ளிக் குதித்தெழுந்து

ஏக்கத்தில் செத்த திரா!


உன்றன் மனம்குளிர ஒன்றும்நான் இப்படி

நின்று கவிதை நிகழ்த்தவில்லை; - இன்றளவும்

நான‍றிந்த வற்றைத்தான் நன்றாய் எடுத்துரைத்தேன்

ஜானகி! சங்கோ ஜமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக