ஜானகி! சங்கோ ஜமா?
உன்வாசம் வேண்டி உயிரை எடுக்கிறது
தன்வாசம் போதாத் தளிரிளம்பூ; - என்றன்
சிபாரிசை வேண்டிச் செருமிடுது; தன்னின்
அபாக்கியம் சொல்லி அழுது!
அந்திவான் கூட அடம்பிடிக்கும் உன்கன்னம்
தந்தநா ணச்சிவப்பைத் தான்பெறவே; - சொந்தமாய்
உன்குளிர்ச்சி வேண்டி ஒருகாலில் ஊதைநிற்கும்
தன்குளிர்ச்சி மொத்தம் தவிர்த்து!
'ஏழாங்கல் ஆட எடுத்துக்கொள் என்னுடைய
கூழாங்கல், மாற்றாய்க் கொலுசுகொடு' - தாழாத்
தலைதாழ்த்தி ஆறு தவம்கிடக்கும்; தண்ணீர்
அலைத்தூது விட்டே அலுத்து!
தேயா நிலாவுன்போல் தேயா திருப்பதற்கே
ஓயாமல் ஆராய்ந்தே ஓய்ந்தநிலா – ‘நேயா!நீ
கேட்டால் ரகசியம் கிட்டத் தருவாள்உன்
வீட்டாள்’, எனப்புலம்பும் வீற்று!
நன்றாய் இசைபூக்கும் நாணற்புல் லின்வகையில்
ஒன்றான மூங்கிலழும் உட்கார்ந்து; - ‘மென்குரலாள்
தன்குரலைத் தந்தால் தரிப்பேன் உயிர்இன்றேல்
இன்குரலாள் முன்னிறப்பேன்’, என்று!
வானவில் பாவம் வளைந்தே ஒடிகிறது
ஏனவள் போல்நிறத்தில் இல்லையென்று; - தேனருந்த
பூவிட்டுன் வீடு புகுந்ததே பொன்வண்டு;
ஏவியது நானா? இலை!
இருக்கின்ற கூந்தல் இருட்டினும்மேல் என்று
திருக்குறள் போலநான் செப்பக் – கருக்கலில்
தூக்கத்தை விட்டே துள்ளிக் குதித்தெழுந்து
ஏக்கத்தில் செத்த திரா!
உன்றன் மனம்குளிர ஒன்றும்நான் இப்படி
நின்று கவிதை நிகழ்த்தவில்லை; - இன்றளவும்
நானறிந்த வற்றைத்தான் நன்றாய் எடுத்துரைத்தேன்
ஜானகி! சங்கோ ஜமா?
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக