குழந்தை 1
அங்கப்பார் பூச்சாண்டி; 
திங்கக் குழந்தைகளத் 
   தேட்றான்டி; - சங்கக்
கடிப்பான்டி; ரத்தம் 
   குடிப்பான்டி; கைகால்
ஒடிப்பான்டி; ஓடி 
   ஒளி!
குழந்தை 2
நெசமாவா சொல்ற? 
   நிறுத்தாதேன் கொல்ற?
பசங்கன்னா கோரப் 
   பசியா? - அசந்தாக்க
தூக்கி அலேக்கா 
   தொலைதூரம் போய்க்கறிசோ(று)
ஆக்கித்தின் பானா 
   அவன்?
குழந்தை 1
உளிநக மாக 
   உலக்கைவிர லாக
அளியென்ப தில்லா 
   அரக்கன், - கிளிகொடுக்கும்
கையுரலத் தூக்கிக் 
   கடாசி நமைப்பிடிச்சு
மையிருளில் போவான் 
   மறஞ்சு!
குழந்தை 2
குடல்மாலை சூடிக் 
   குழந்தைகள் தேடிப்
படலோரம் வாரான் 
   பதுங்கி; - நடமாட
ஆவுறதா வீதியில? 
  அச்சத்தில் நெஞ்சடச்சுச்
சாவுறதா நாம 
  தவிச்சு!?
குழந்தை 1
ஆளில்லா நேரத்தில் 
   ஆம்புடும் புள்ளைகளத்
தோளுல போட்டுச் 
   தொலைஞ்சிடுவான்; - நாளுக்கு
நாள்இவன் தொந்தரவால் 
   நாற்பது ஊர்காலி;
கேள்இவனால் நம்மூர்க்கும் 
   கேடு!
குழந்தை 2
மூக்குக்குக் கீழ  
   முழநீள மீசைக்குத்
தேய்க்கத்தான் தேடிவரான்  
   செங்குருதி; - காக்கத்தான்
நாதியில்லா நம்மள  
   நல்லாப் பயமுறுத்தும்
பேதியில போறஅச்சப்  
   பேய்!
குழந்தை 1
மோப்பம் புடிக்கிறான் 
   மூச்சும் உடாதடி;
ஆப்புட்டோ முன்னா 
   அதோகெதி; – சாப்பிடத்
தான்டி பசியேப்பந் 
   தானா விடுகிறான்;
ஏன்டி! அசையாது 
   இரு!
குழந்தை 2
அடிமேல் அடிவெச்சு 
   அடுத்தஎடம் போவோம்;
முடியலயின் னாலும் 
   முயல்வோம்; - தடியரக்கன்
தேடி வரதுக்குள் 
   சிட்டாப் பறந்துடுவோம்
ஓடிவா போயிடுவோம் 
   ஊடு!
குழந்தை 1
ஊட்டுக்குப் போனா 
   உடுவான்னா நீநெனச்சே
வேட்டுவெப் பான்டி 
   விரல்கடையால் – மாட்டாம
கோவிலுக்குப் போயி 
   கொளஞ்சியப்பன் தாள்புடிப்போம்
ஆவிமொத்தம் காப்பான் 
   அவன்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக