சனி, 3 ஜனவரி, 2009

உய்யும் தமிழினமென் றோர்!

எதிர்வரும் 2009பிப்ரவரி 9-ம் நாளுக்குள் பிரபாகரனைப் பிடித்துவிடுவோம். -ராசபக்சே


-செய்தி- 2/1/2009


ஈழமா மங்கை எழிலாள்மேற் காதலுற்ற
வேழமே! விட்டில் வெரும்படை -சூழமாத்

தீச்சுடர் நாணுமா? செய்யும் புதுக்கவியால்
வீச்சுடைப் பாமரபு வீழுமா? -மாச்சுதை*

பிள்ளைச் சிறுகைக்குப் பேர்ந்திடுமோ? பேச்செனுங்
கிள்ளையது பூசை*வரக் கீச்செனுமே! -ஒள்ளொளி*

மிக்கதோர் சூரியனை வீழ்த்திட நக்கியுண்ணுங்
குக்கலால்* ஆமென்றாற் கொள்வரோ? -பக்கலிற்*

காணுங் கனவாற் கதையாமோ? திண்ணைவாழ்
வீணர் உரையால் விளைவதென்ன? -பேணும்

பொருவிற்* றமிழ்மேற் பொருதும் வடவர்
திருவில் மொழியாய்ச் சிறியர் -பொருதிடினும்

வெற்றி உனதன்றி வீணர்க் கமையாதே!
சற்றும் எலிப்படைபார்த் தஞ்சுமா -புற்றரவு?

ஆற்றைத் தளைகொள்ள ஆகலாம் வீசுபுயற்
காற்றைத் தளைகொள்ளக் கற்றவர்யார்? -கூற்றிற்கே

நாட்குறித்தாற் கூடி நகையாரோ நானிலத்தார்?
தேட்கொடுக்கிற் கைவைக்கச் சேர்ந்தவர்யார்? -வாட்பிடியை

விட்டு நுனிவாள் விரும்பிப் பிடித்திடுவார்க்(கு)
எட்டுணையும்* வெற்றி எழுந்திடுமோ? -முட்ட

வழக்குடையான் நிற்ப வலியானைக் கூடும்
இழுக்குடையார் எங்கும் இருப்பர் -சழக்கடையாய்!*

நொச்சி*யது போய்விடினும் நோவில்லை முல்லை*யுண்டு
கச்சையது போயினுமென் கைகளுண்டே -அச்சமிலை

தெய்வம் இருக்குதெனத் தேர்ந்து வருங்காலம்
உய்யும் தமிழினமென் றோர்!

அருஞ்சொற் பொருள்:-சுதை -மின்னல்; பூசை -பூனை; ஒள்ளொளி -மிகுந்தஒளி; குக்கல் -நாய்; பக்கல் -பகல் என்பதன் நீட்டல் விகாரம்; பொருவில் -உவமையில்லாத; எட்டுணையும் -எள் துணையும் (புணர்ச்சியான் இயன்றது); சழக்கு -தளர்ச்சி; நொச்சி -கிளிநொச்சி; முல்லை -முல்லைத்தீவு .

அகரம்.அமுதா!

4 கருத்துகள்:

  1. நண்பரே சொல்ல வார்த்தை இல்லை
    வரும் செய்திகளைக் கேட்க கேட்க
    உள்ளம் உடைகிறது

    பதிலளிநீக்கு
  2. ஆம் நண்பரே! ஆம். எனக்கும் உள்ளம் பதறுகிறது. யாதுசெய்ய பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் நண்பரே!

    பதிலளிநீக்கு
  3. i think the archive you wirte is very good, but i think it will be better if you can say more..hehe,love your blog,,,

    பதிலளிநீக்கு