(திருச்சி ஸ்ரீரங்கம் திருமண மண்டபத் தீநேர்ச்சியில் வாழ்விழந்த மணப்பெண் சுபஸ்ரீயின் நிலைநின்று எழுதியது!)
திருமணம் என்னும் தேரில் ஏறுமுன்
தீக்குழி மூழ்கிய நிலவுயிவள்!
நறுமணம் வீசுமுன் நாராய்க் கிழிந்த
நிமலன் தோட்டத்து மலருமிவள்!
செண்டுகள் சூடியப் பெண்டிவள் வாழ்வும்
சதுரங்க மேடை ஆகியதே!
அன்றொடு தலைவன் தலைதகர்ந் தேகினும்
சதுரங்க ஆட்டம் தொடர்கிறதே!
விழியில் தீட்டிய மையின் அளவோ
மேக மந்தையின் ஒருபாதி!
விழிகள் ஊற்றியக் கண்ணீர் மட்டும்
சிரபுஞ்சி மழையில் சரிபாதி!
ஜதிகள் போடும் சலங்க சோகச்
சாசனம் எழுதி வாசிக்கும்!
திதியும் வைப்பதோ திருமண நாளில்
இந்நிலை வேண்டாம் வேசிக்கும்!
சதியே செய்யும் விதியே! என்னை
சந்தித்த வேளை சரிதானா?
விதியைத் தலையில் எழுதிய இறைவன்
விதிக்குத் தப்பித் திருப்பானா?
அகரம்.அமுதா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக