செவ்வாய், 20 ஜனவரி, 2009

அகவற்பா!

"தருமபுரத்தில் மும்முனைகளில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது தாக்குதல்: கவச பீரங்கி ஊர்தியை களத்தில் இறக்கினர் புலிகள்: 51 படையினர் பலி; 150 பேர் காயம்"

-செய்தி- 19/1/2009

கொக்கென நின்றாற் கொத்துதற் கன்றோ
பொக்கெனச் சிரித்துப் பொருதுதல் நன்றோ
கொணர்ந்த கருவியைக் கொடுத்துப்
பிணமாய்ச் சாயும் பெருமைசிங் களர்க்கே!


பொருள்:-
ஆடாதும் அசையாதும் தூண்போல் கொக்கு நிற்பது ஓடுமீன் ஓட உருமீன் வரவுக்காக அல்லவா! கொக்கின் அத்தன்மையைச் சிரித்து வம்பளத்தல் மீன்களுக்கு நன்முடிவாக அமையுமா என்ன? இறுதியில் மீன் அழிவது உறுதியன்றோ! எதிரியை வீழ்த்த ஏந்திய போர்க்கருவியை எதிரியின் எதிர்ப்பைக் கையாள முடியாது தோற்று எதிரியின் கைகளில் போர்க்கருவியையும் அவர்காலடியில் தன் உயிர்விட்ட உடலையும் ஒப்படைக்கின்ற பெருமை இவ்வுலகில் சிங்களர்களுக்கு மட்டுமே உண்டு.

தற்காப் புணர்ந்து தானாய் அகல
முற்போய் வென்றதாய் மொழிவீர் கேள்மின்
இடுமயி ராலெழு மெழிலே
நெடுமயி ரெழிலின் நேரெனல் நகையே!


பொருள்:-தற்காத்துக் கொள்வதற்காகப் பின்வாங்கியோரை நேரெதிர்த்து வென்று இடங்களை மீட்டதாய்ச் சொல்லும் சிங்களரே! கேளுங்கள். செயற்கையாகப் பொருத்தப் பட்ட இடுமயிரால் உண்டாகும் அழகு, இயற்கையாக நீண்டு வளர்ந்த கூந்தலின் அழகிற்கு நிகரானது என்பது சிரிப்பிற்குறிய செயலாகும்.
(அத்தகைய தன்மையுடையதே தங்களது வெற்றியும் என்றதாம்.)

தீட்டுங் கருவியும் தீட்டா மதியும்
வாட்டுமென் றறியா வழுவுடைச் சிங்கள!
மாற்றான் கொடுத்த மதியால்
ஏற்றம் எட்டுணை என்பது மிலதே!


பொருள்:-
பட்டை தீட்டப்பட்ட கூர்மையான கருவியைச் செலுத்துதலும், பகுத்தாயும் பட்டறிவில்லாக் குறையறிவைப் பயன்படுத்திச் செயலில் இறங்குவதும் இரண்டுமே ஒருசேரத் துன்பம் தருவன என்பதைக் கூடப் பட்டறியும் அறிவில்லாத சிங்களரே! மூளையைப் பயன்படுத்தும் ஆற்றலில்லாதோர்க்கு வேற்று நாட்டுப்படைகள் கொடுக்கும் போர்முறையால் எள்ளளவும் முன்னேற்றம் அடைவதரிது என்பதை அறிவீராக.

புற்றீசல் போல்உம் புறப்பா டெனினும்
வெற்றீசற் கியாரே வெருளுவர் விதிர்ப்பர்
கற்றூண் அஞ்சா கரந்துறை
புற்றர வஞ்சும் புயலிடி தனக்கே!


பொருள்:-புற்றீசல் படையெடுத்தால் அஞ்சி நடுங்குவர் உளரோ? அத்தகையதே உமது படையெடுப்பு. பெருமழையினூடு பேரிடி வீழின் பாதுகாப்பு நிறைந்த புற்றில் வாழ்ந்தாலும் பாம்பு அஞ்சவே செய்யும். மாறாகப் பாதுகாப்பில்லாது தனித்துநிற்கும் கற்தூண் ஒருபோதும் அஞ்சாது.

பின்னடை வென்னும், பிதற்றும், பெரிதும்
முன்னடை வென்னும், முனையும், முனிவுறு
களிற்றின் கையுறு கதலியாய்
நளிவிழந் துழன்று நமனிடஞ் செலவே!

பொருள்:-
புலிகளுக்குப் பெரும் பின்னடைவு என்பார். அதனையே தொடர்ந்து பிதற்றவும் செய்வார். தமக்கே முன்னடை வென்பார். மேலும் முன்னேற ஊக்கங்கொள்வார். இம் முன்னகர்வு எதற்காகவெனில் சினத்தின் மிகுதியால் பெருமரத்தையே பிடுங்கும் ஆற்றல் படைத்த மதயானையிடம் அகப்பட்டு சீரழியும் வாழைமரம் போலத் தம்படையின் செறிவிழந்து, நிலைகுலைந்து, உயிர்விட்டுக் காலனிடம் செல்வதற்காகவே இத்தனை ஆரவாரமும் செய்கிறார்.

அகரம்.அமுதா

2 கருத்துகள்:

  1. உறுதியுடன் இருப்போம்
    உண்மை என்றும் வெல்லும்

    பதிலளிநீக்கு
  2. வருக திமிழ் மிளிர் அவர்களே!

    உறுதியிழப்பதற்கில்லை. தமிழினத் தலைவர் பிரபாகரன் உள்ளவரை எந்த சிக்கலையும் எதிர்த்துப் போராடும் ஆற்றல் தமிழினத்திற்கு உண்டு.

    பதிலளிநீக்கு