ஏட்டைய்யா! என்னைய ஏங்கைது பண்ணுறிக?
சேட்டை எதுனாச்சும் செஞ்சேனா? – வீட்டுக்குப்
போவணும் விட்டுடுங்க; போவாட்டி எங்கம்மா
கோவத்தில் வெப்பாங்க குட்டு! 01
போட்ட சிறுவேசம் போட்டிக்கே தானன்றி
ஓட்டப் பிரிச்சிவெண்ணை உண்ணஅல்ல; - ஆட்டயப்
போட்டதும் இல்ல;ஒரு பொய்சொன்
னதுமில்ல;
வீட்டுக்குப் போக விடு! 02
ஆத்துல சேலைகள அள்ளி ஒளிச்சது
நேத்துநான் இல்ல நெசமாக; – வேத்தாளப்
பாத்துட்டு வந்தென்னப் பத்துறிக; இல்லயில்ல
ஆத்தாடி! நானந்த ஆள்! 03
‘வாயில என்னடா வச்சிருக்கே? ஆக்காட்டு
வா’யின்னு வெக்கிறிங்க வாய்திறக்க; – வாயிலபால்
பல்லத் தவிரவையம் பாக்கக் கிடைக்காது;
சொல்லத் தெரியாது சூது! 04
யார்வீட்டு உரலை எவனோ ஒடச்சதுக்குப்
பேர்போட்டு எனையே பிடிப்பதா? – மார்மேல
போட்ட நகையெல்லாம் பொன்னல்ல; வாடகைக்குக்
கேட்டணிந்து வந்ததுதான் கேடு! 05
கோபியருக் கெம்மேல கோபமா? யாருக்கு
லாபமுன்னு கட்டுறிங்க லாடமா; – கொபியர்
யாருன்னே நானறியேன்; ஆனாலும்
சொல்லுறேன்
சாரிஎன்னை விட்டுடுங்க சார்! 06
மாடு திருடவில்ல மாமலையப் பேக்கவில்ல
கூடுவிட்டுக் கூடுபாயுங் கொம்பனில்ல; – ஏடுதொட்டுப்
பள்ளி யிலப்படிக்கும் பாலகன்நான்; போடுவதேன்
விள்ளுவதக் கேட்டும் விலங்கு!? 07
ராதையா? யாரது? ராகம்நான் பாடினா
போதையா ஏறுது? பொய்யது; – ‘ஏதைய்யா
தோதாய்க் குழல்?’என்றால் சொல்வேன்
அடுக்களையின்
ஊதாங் குழல்தான் அது! 08
மண்ணள்ளி நாந்திங்க மாட்டேனே எந்தவூர்
மண்ணுக்கு நிக்கிறிங்க மல்லுக்கு? – பொண்ணுகள
ஏமாத்தக் கூடியதா என்வயசு? ஏதேது
காமாலை கொண்டதா கண்? 09
வேணாம் எனக்கிந்த வேசம் இதனால
காணாத தும்பமெல்லாங் காணுறேன் – வீணான
வம்பு வருதே வழக்கு விரட்டுதே
நம்பிஇட்ட தால்ஒடஞ்சேன் நான்! 10
19-08-205
அத்தனை பாக்களும் அற்புதம் வித்தகரே!
எத்தனைப் நீங்கள் எழுதிடினும்-- சத்தான
நற்பொருளை வைக்கின்றீர்! நானென்(று)
எழுதுவனோ?
அற்பனுக்குக் கிட்டா(து) அமிழ்து
அப்படி இல்லையம்மா! ஆகும் எனமுயன்றால்
எப்படிக் கைவராமல் ஏமாற்றும் – செப்புவது
எல்லாமும் வெண்பா எனவானால் வாய்புகழ்ந்து
சொல்லாரும் சொல்வர் சுவைத்து!
கண்ணன் கதையெல்லாம் கண்முன்னே காட்டுகின்ற
வண்ணம் வகைசேர்ந்த வெண்பாக்கள் -
எண்ணமெலாம்
தன்வசம் ஈர்க்கும் தளிர்போல்உன்
பாச்சுவையில்
என்வசம் நானில்லை ஈண்டு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக