காடு ஒருவருசம் ஆடு ஒருவருசம்
தேடு பொருளையெல்லாம் தேச்சதுன்னா –
பாடுபட்டு
என்னத்தைச் செய்ய? செவனேன்னு இருக்கவும்
என்னால ஆகலையே இங்கு! 01
விதைச்ச வயலில் விளைச்சலில்லை; கொன்னு
புதைச்சஇடம் போல்முளைக்கும் புல்லே! – விதைச்சதெல்லாம்
நெல்விளையத் தானே; நெடுவயல் எங்கும்நீ;
சொல்!என்ன தானுனது சோக்கு!? 02
மண்பாத்து நிக்கும் மணிக்கத் தரியிடையே
விண்பாத்து நிக்கின்ற வெண்டைபோல் – மண்பாத்து
நாணும் பயிருக்கு நட்ட நடுவிலே
காணுமிட மெல்லாம் களை! 03
மாடா உழைச்சி மணிக்கணக்கா வேர்வைசிந்தி
ஓடா இளைச்சமிச்சம் ஒன்னுமில்லை; – காடாவுங்
காடில்லை; ஆடாவும் ஆடில்லை; வீடாவும்
வீடில்லை என்னசெய் வேன்? 04
போட்டஉரத் துக்குப் பொசபொசன்னு
வாரதெல்லாம்
காட்டைச் செதைக்குங் களையேதான் – ஆட்டைவிட்டு
மேச்சிடலா முன்னா விதைச்சதில் ஒன்னுரெண்டு
காச்சிச் சிமிட்டுதே கண்! 05
வெள்ளாடு போட்ட வெடக்குட்டி நோய்ப்பட்டுத்
தள்ளாடிப் போச்சு தலைதொங்கி – வெள்ளணையத்
தூக்கிப் புதைச்சதுல தாயோடு எடுக்கவில்லை
ஏக்கத்தில் நானும் இரை! 06
நாலாட்டை வெச்சி நலமாக வாழலான்னா
காலாடாய் மாறிக் கதைமுடிக்கும்; – ஏலாப்
பரீகத்தில் வீழ்ந்துநான் பட்டது போகச்
சரீரத்தில் கோவணம்மிச் சம்! 07
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக