சனி, 8 மார்ச், 2008

விழி!


இமையென்னும் திரையூடே
இரவுகளில் கனவுகளைத்
திரையேற்றிக் காணுகின்ற சுவைஞன் -மெல்லத்
திரைவிலகத் திறன்காட்டும் நடிகன்!

நாசியென்னும் தென்னையதன்
நற்கீற்றாம் இமை,புருவம்
காய்த்தாடும் பதமான இளநீர் –மனதில்
காயமென்றால் வடித்துவிடும் துளிநீர்!

புருவமென்னும் பெட்டையதன்
பூஞ்சிறகாம் இமையிருந்து
காட்சியிரை தேடியுண்ணும் குஞ்சு –தூக்கக்
கழுகுகண்டால் சிறகொளியும் அஞ்சி!

அணங்கையிடம் பிறையளவாய்
ஆண்களிடம் முழுநிலவாய்
இமைமுகிலின் பின்தோன்றும் நிலவு –நொடியில்
இதயத்தை செய்துவிடும் களவு!

அகரம்.அமுதா

2 கருத்துகள்: