வியாழன், 6 மார்ச், 2008

எழுதுகோல்!

பைதன்னில் இருப்ப தாலே
பயனொன்றும் இல்லை என்றே
கைதன்னில் தொட்டெ டுத்தேன்
காகிதப் பரப்பி லெங்கும்
மைதெளிப்பாய் என்ப தாலா?
மலரேட்டில் கவிதை யென்னும்
மெய்தெளிப்பாய் என்றே யன்றோ
விழைந்துன்னை தொட்டெ டுத்தேன்!

என்னருமை எழுது கோலே!
எடுத்துன்னை திறக்கும் போதே
பொன்னருமை ஏடாம் தன்னில்
பூக்காதோ கவிதை கோடி?
பண்ணருமை உணர்ந்த தாலே
பைந்தமிழைப் போற்று தல்போல்
உன்னருமை உணர்ந்த தாலே
உளத்தருகே உன்னை வைத்தோம்!

தலைக்கனத்தால் ஆடும் யாரும்
தலைக்குனிய நேரும் என்ற
தலையாயத் தத்து வத்தை
தரணியுள்ளோர்க் குணர்த்தத் தானோ
தலைக்குனிந்தே ஆட்டம் போட்டு
தற்குறிகள் கற்கும் வன்னம்
தலைப்பணிவை ஏட்டில் செய்து
தலைநிமிர்ந்தாய் பைகள் தோறும்?

கத்தியும்கை வேலும் சூலும்
கடுங்கூரென் றுரைப்பார் கூடப்
புத்தியினால் உன்னை யன்றோ
புகழ்கின்றார் கூரே என்று!
கத்தியினை எடுத்தார் சாவும்
கத்தியினால் தானாம்; உண்மை!
கத்தியினும் கூராய்! உன்னால்
கமழ்கிறதே கற்றோர் வாழ்வு!

அகரம்.அமுதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக