ஞாயிறு, 2 மார்ச், 2008

என்னைப் பற்றி!

நான்:-
கற்றும் தெளியாமல் கற்றோர்பின் போகாமல்
நற்றமிழ்ப் பாப்புனையும் நாட்டமுற்றேன் -சற்றே
கருத்தவுடல்; நேர்வழியில் சிந்தனைகள்; காளைப்
பருவமியற் பேர்சுதாகர் பார்!

ஊர்:-
கெடுப்பதற் கோர்கூட்டம்; கெட்டாரைச் சார்ந்து
கொடுப்பதற் கோர்கூட்டம் என்றே -குடிசை
மிகக்கொண்ட குக்கிராம மேநான் பிறந்த
அகரம்சீ கூர்என்ப தாம்!

தாய்:-
சோறெனக்(கு) ஊட்டி பசிபொறுப்பாள்; தூங்கையிலும்
ஊறெனக் கென்றால் உயிர்துடிப்பாள்; -கூறுலகில்
பூமியி னும்பொறுமை போற்றிடுவாள்; என்றனுக்குச்
சாமியவள் பேர்அஞ் சலம்!

தந்தை:-
கற்கழனி போந்துக் கடிதுழைத்துச் சேறடித்து
நெற்கழனி யாக்கிவிடும் நேர்த்தியினார் -சொற்கழனி
நானுழ வேண்டியென்னை நட்டார்;பேர் முத்துசாமி;
ஊனெடுத்த தேவன் உரு!

பெயர்க்காரணம்:-தாய்தந்தைப் பேர்முன் எழுத்துமென் பேரிடை
வாய்த்த நெடிலுமே யாம்அமுதா -ஆய்ந்ததன்முன்
தொக்கியே நிற்பதெல்லாம் தோன்றியஊர்ப் பேர்பாதி
அக்கறையாய்ச் சேர்த்த தறி!

அகரம்.அமுதா

6 கருத்துகள்:

  1. அன்பின் சகோதரி அமுதா.. அன்புடனில் உங்களின் எழுத்துக்களை கண்டேன் நினைத்தும் நீங்கள் அன்புடனுக்கு புதியவராக இருக்கவேண்டுமென்று அந்த கவிமின்னஞ்சல் கடலில் தேடி தேடி கலைத்துப்போனதுதான் மிச்சம் உங்களின் அறிமுகப்பலகையை கண்டெடுக்க முடியாமையால் உங்களின் வலைப்பூவிலேயே வரவேற்கிறேன் அருமையான அறிமுகம் சகோதரி.. வாழ்த்துக்கள் உங்களின் தமிழார்வம் மேலும் தழைத்தோங்க

    அன்புடன்

    தஞ்சை M. ராஜா
    http://thanjavur-raja.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. பெயர்க் காரணம் படித்த பின் தான் புரிந்து கொண்டேன் .தாய் தந்தையரின் பெயரின் எழுத்தும் ஊர் பெயரும் இணைந்து அமைந்த பெயரில் தங்கள் இலக்கியத் தொண்டு பல கிளை விட்டு வளர வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி கோமா அவர்களே! இனிமேலாவது அமுதா என்றழைப்பீர்களா? அல்லது ரம்தா என்றுதான் அழைப்பீர்களா?

    பதிலளிநீக்கு
  4. வெண்பாவில் விளையாடும் உங்களையே
    வியப்போடு பார்க்கின்றேன் நலமே சேர்க
    கண் போல தமிழ் உங்கள் துணையிருக்க
    கணக்காக வெண்பாவில் ஆடுகின்றீர்
    பெண்ணாரே வெற்றியெல்லாம் உங்களுக்கு
    பிறை நுதலான் தந்து நிற்பான் வெல்க நீரே
    பண்பாரே போற்றுகின்றேன் உம்மை எந்தன் பைந்தமிழால் புகழேந்தி போல வெல்க
    அன்புடன் நெல்லைக்கண்ணன்

    பதிலளிநீக்கு
  5. வெண்பாவில் விளையாடும் உங்களையே
    வியப்போடு பார்க்கின்றேன் நலமே சேர்க
    கண் போல தமிழ் உங்கள் துணையிருக்க
    கணக்காக வெண்பாவில் ஆடுகின்றீர்
    பெண்ணாரே வெற்றியெல்லாம் உங்களுக்கு
    பிறை நுதலான் தந்து நிற்பான் வெல்க நீரே
    பண்பாரே போற்றுகின்றேன் உம்மை எந்தன் பைந்தமிழால் புகழேந்தி போல வெல்க
    அன்புடன் நெல்லைக்கண்ணன்

    பதிலளிநீக்கு
  6. வழக்கம்போல் வந்து மடிக்கணினி ஏந்தித்
    தயக்கமாய்ப் பின்னூட்டம் தான்பார்த்தேன்; ஆ!ஆ!ஆ!
    என்ன வியப்பிதுவோ? என்கண்பொய் சொல்லியதோ?
    சின்னவன் கூட்டிற்கு மன்னவனா வந்து
    மலர்தூவி வாழ்த்தியது!? மாலைப் பொழுதா
    அலரா முகையை அணைத்துப்பா ராட்டியது!?
    மேகமா கானலை மெத்தப் புகழ்ந்தது!?
    காகமாம் என்னைக் கருதியதோ பூவை!?
    பழுத்தப் பழமா படுபிஞ்சை நாடி
    வழுத்தி விருத்த வகைசெய் துவந்தது!?
    நெல்லைக் கடலிந்த நெத்திலியை வாழ்த்தியதை;
    வெள்ளி உவந்தெழுத்து விட்டிலை ஏற்றியதை;
    கூரை ஒழுக்கைக் குலவருவி கொஞ்சியதை;
    ஊரை எழுப்பியுரைத் தாலும்ஊர் நம்பாதே!
    ஆகா! பயன்செய்தேன் ஆர்க்கும் தமிழ்க்கடலே
    பாகாய் உவந்துருகிப் பாராட்டும் போழ்தினிலே!
    மானென்றே எண்ணி மறுமொழி இட்டிருந்தீர்
    ஆணென்பேன் என்னை அகவையொரு முப்பதின்கீழ்!
    முன்னம் பழகாத மோகினியின் முன்னிரண்டு
    தென்னங்காய் கண்டால் திறமழியும் காளையர்போல்
    மன்னவனே உன்னெழுத்தை மாந்திக் களிகொள்ளும்
    பொன்னளி நான்என்பேன் பொய்யில்லை உண்மையிது!
    நாட்டிற்கே ஏற்றதொரு நற்கருத்தைக் கூறுபழம்
    பாட்டிற்குப் பாட்டால் பகருகிறீர் பாகுரைகள்!
    பாக்கள் படைத்திடலாம் பாருள்ள பாவலர்கள்;
    பாக்-கள் பிழிந்தருளும் பாங்கறிந்த பாவலன்நீ!
    முன்னம் சிறுவயதில் முன்மாலைப் பொழுதினில்
    சின்னத் திரையில்இச் சின்னவன் உன்பேச்சைக்
    கண்ணிமையா நின்றுக் கருத்தூன்றிக் கேட்டதெல்லாம்
    எண்ணுகையில் என்நெஞ்சம் ஏந்திசையில் பண்பாடும்!
    அப்போதே உன்சுவைஞன் ஆகினேன்; என்பேச்சில்
    எப்போதும் ஏற்ற இடம்பிடிக்கும் நாயகன்நீ!
    உற்ற வலைநிறுவி ஒப்பில்லாப் பாப்புனைந்து
    கற்ற வரைக்கவரும் கல்விக் கடல்உன்
    எழுத்தெண்ணி வாசித் தெழுமின்பத் தாலே
    கொழுத்தநற் சேவலைப்போல் கொக்கரித்தேன்; கொக்கரித்து
    முன்னூட்டம் தன்னை முழுதாய்ப் படித்தாலும்
    பின்னூட்டம் போடப் பெரிதாற்றல் இல்லையெனும்
    தாழ்வு மனப்பான்மை தாக்கியதால் அய்ய!உனை
    வாழ்க! எனவாழ்த்த வாயின்றி நின்றேன்;
    தருவே! தகையே! தமிழே!என் பாட்டின்
    கருவே! கனியே! கருத்தே! உனைப்புகழ
    நேரமின் மையாய் நினைக்கவில்லை; முற்றுரைக்கும்
    தீரமின் மையால் தெரிந்து!

    அகரம்.அமுதா

    பதிலளிநீக்கு