சனி, 3 மே, 2008

பேற்றேனே துன்பம் பெரிது!


ஸ்திரியாவில் தான் பெற்ற மகள் எலிசபெத்தை 24 ஆண்டுகள் வீட்டின் பாதாளச் சிறையில் வைத்து அவள் ஏழு குழந்தைகளுக்குத் தாயாகக் காரணமானான் ஜோசப் ஃபிரிட்சல்!

-செய்தி-

(எலிசபெத்தின் நிலையிலிருந்து எழுதப்பட்டது!)

காமக் கயவனவன் கைக்குள் சிறைப்பட்டுச்
சாமப் பொழுதுகளில் சீரழிந்(து) –ஊமையாய்
இன்றுவரை வாழ்வில் இடர்பட்டேன் வேறுண்டோ
என்போல் உழந்தார் இடர்?

தொட்டில் உறவைத் துளிர்த்துவரும் காமத்தால்
கட்டிலுற வாக்கிக் களித்திட்டான் -இட்டமில்லாத்
தன்மனையைக் கூடத் தழுவத் தடையிருந்தும்
என்றனுக் கிந்தநிலை ஏன்?

கட்டிப் பிடித்தான் கனியிதழை மென்றிட்டான்
தொட்டுச் சுவைத்தான் துடியிடையை -எட்டிப்
படுத்தாலும் பாழ்செய்தான் பக்கமிருந் தின்பம்
கொடுத்தாலும் செய்தான் கொலை!

அழுது புலம்பி அவனிருதாள் பற்றித்
தொழுது துவண்டுத் துடித்தேன் -உழன்றேன்
இனிப்புத்தான் என்மேனி என்றெறும்பாய் மொய்த்தான்
நினைக்கத்தான் கூசுதென் நெஞ்சு!

அன்னைக்குத் தன்மகளே ஆனாள் சகக்கழுத்தி
என்னுமிழுக் கேற்பட்ட தென்னாலே! -என்விதி
ஏட்டிலே காணா எழுத்தாச்சே! என்கதை
நாட்டிலே காணா நடப்பு!

வெங்கானம் தானேகி வெந்து தணிந்தாலும்
மங்கைநான் முன்புற்ற மாசறுமோ? -பங்கமெல்லாம்
உற்றும் உயிர்வாழக் கற்றேனே! பெற்றவனால்
பெற்றேனே துன்பம் பெரிது!

அன்பைப் பொழிந்துநாளும் அன்னையவள் மஞ்சத்தில்
தன்னை வருத்தித் தவம்கிடந்து -முன்னம்
கொடுத்தான் உயிரைக் கொடுத்தவன்பின் கற்பைக்
கெடுத்தான் அருகில் கிடந்து!

தான்பெற்ற பெண்ணென்னை தாரமென் றெண்ணியென்
ஊன்மீது மோகவெறி உற்றவனை -யான்பெற்ற
சேய்களெல்லாம் தந்தையெனச் செப்ப விழைந்திடுமே!
தாய்வழிப் பாட்டனைத் தான்!

அப்பனை ஆசையால் ஆளன் எனஅழைக்க
எப்படியென் நெஞ்சம் இடம்கொடுக்கும் -அப்படியே
கற்பனையும் காணக் கடவுவதோ? அய்யோநான்
முற்பிறப்பில் செய்தவினை யோ?


அகரம்.அமுதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக