செவ்வாய், 6 மே, 2008

கைவளைக்கும் இல்லை கனிவு!


காமன் வதைபட கட்டில் முறிபட
மாமன் வருவானோ மாமயிலே! -சோமனும்
சுட்டென்னைத் தீய்த்தானே! சொப்பனம்வஞ் சித்ததுவே!
சட்டெனமா மன்பிரிந்த தால்!

கூந்தல்பூ என்னை குறும்பாய்ப் பரிகசிக்கும்;
ஏந்திய கைவளைகள் எக்களிக்கும்; -மாந்தளிர்
மேனியுடை என்னை வெறுத்துப் புறம்நழுவத்
தேனினிய சொல்திக்கு தே!

மானுலவும் கண்கள் வடிவிழந்து காணும்; எண்
சாணளவு மேனி தளர்ந்துவிடும்; -தேனுலவும்
வாலெயிறு நீர்நஞ்சாய் மாறிவிடும் என்தலைவன்
தோளிரண்டில் தொத்தாதக் கால்!

வதைத்தோடும் பால்நிலா வஞ்சிக்கும் தென்றல்
எதைத்தூது நான்விட்டால் ஏற்பான்? -சதைச்சிலையாய்
ஆனேனே! அம்கனவில் கண்டு விழிக்குங்கால்
காணேனே கண்ணொடுகொண் கன்!

கற்-பனையா என்மேனி? காமன் விடுகணைகள்
கற்பனைக்கெட் டாத்துயரம் காட்டிடுதே! -நற்றலைவன்
என்னருகி ருப்பானேல் மண்ணுலக சொர்க்கத்தைக்
கண்ணருகில் காட்டானோ கண்டு?


வல்வரவைச் சொல்லி வகைமோசம் செய்தவனின்
சொல்தவறிப் போனதனால் தூக்கமின்றி -மெல்லமெல்ல
மெய்யிளைக்கும்; மென்புன்ன கையிளைக்கும்; பெய்வளையென்
கைவளைக்கும் இல்லை கனிவு!


அகரம்.அமுதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக