புதன், 30 ஏப்ரல், 2008

தொழிலாளர் நாள்!



உழைக்கின்ற மக்க ளால்தான்
      உலகினுக் குயர்வாம் என்று
விழைந்திங்கே ஓடி வந்து
      விளம்பிடும் அருமை நாளே!

பிழைப்புக்கு வியர்வை சிந்தும்
      பேராளர் பெருமை பேச
அழைக்காமல் ஓடி வந்த
      ஆனந்தத் திருமே நாளே!

மண்ணிலே சேற டித்து
      மணிக்கதிர் விளைத்துக் காட்டி
விண்வரைப் போர்கு விக்கும்
      விவசாயி ஓர்தொழி லாளி...

இரும்புவடம் நாற்றாய் மாற
      எழும்சுவரே போத்தாய் வளர
வரும்கட் டடமே மரமாய்
      வளர்ப்பவனும் ஓர்தொழி லாளி...

மலமென்றும் சலமே என்றும்;
      வகைப்படுத்தி மருண்டி டாமல்
கலங்காமல் இறங்கி அதிலே
      கழிவகற்றும் ஓர்தொழி லாளி...

கட்டுமரம் கட்டி விட்டுக்
      காசினியில் கடல்கி ழித்து
முட்டப்புகழ் அடைய நாளும்
      முனைபவனும் ஓர்தொழி லாளி...

அழுக்கினை அடித்துப் போக்கி
      அரும்புமுல் லைபோல் தருவேன்
இழுக்கிலை இதிலே என்றே
      இயம்பும்சல வைத்தொழி லாளி...

மழித்தலை தொழிலாய்க் கொண்டு
      மக்களின் புறத்தோற் றத்தை
அழகுடைத் தாக்கிக் காட்டும்
      அவனும்இங் கோர்தொழி லாளி...

மரத்திற்குக் கிளைகள் வெட்டி
      வளர்ந்தபுட் புதரை வெட்டிச்
சிறப்புறத் தோன்றும் வண்ணம்
      செய்பவனும் ஓர்தொழி லாளி...

அலைகளில் வலையை வீசி
      வகைவகை மீன்பி டித்து
விலைபேசி விற்றுத் தீர்க்க
      விழைபவனும் ஓர்தொழி லாளி...

கருவறைக் குள்ளே வாழும்
      கடவுட்குப் பூசை செய்யும்
திருவுடைப் பணியே கோளாய்ச்
      செய்பவனும் ஓர்தொழி லாளி...

ஏட்டிலே கோல்பொ ருத்தி
     இசைமிகு கற்ப னைகள்
பாட்டிலே வடிப்பான் தானும்
     பண்பட்ட ஓர்தொழி லாளி...

எங்கெங்கு காணும் போதும்
      அங்கங்கு தொழிலா ளர்தம்
பங்குண்டாம் என்ப தாலே
      பார்முழுது மேதொழி லாளி...

இதனையே உணர்த்து தற்கே
      இற்றைநாள் அவத ரித்த
விதத்தினால் மேமுதல் நாளே
      நீயும்இங் கோர்தொழி லாளி...

பார்முழுதும் பார்ப்ப தென்றால்
      பற்பலவாய் நாட்கள் உண்டு
சீர்தூக்கிப் பார்க்க வென்றால்
      சிறப்பதெல்லாம் மேநாள் தாமே!

உழைக்கின்ற மக்க ளேதான்
      உலகத்தின் மூச்சு; அவர்தம்
அழைப்பினை ஏற்று வந்தாய்
      ஆனந்தம் பொங்க லாச்சு...

நாளெல்லாம் உழைக்கும் மக்கள்
      நலம்பாடிக் கூவும் குயில்நீ...
கோளென்றே உழைப்பைக் கொண்டோர்
      குலம்வாழ ஆடும் மயில்நீ...

பாருக்குள் சிங்கைத் தாயின்
      பண்பட்டப் புகழை நாட்டும்
வேருக்கு விழுதாய் வந்தாய்
      வெல்க!தொழி லாளர் நாளே!

அகரம்.அமுதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக