ஞாயிறு, 6 ஏப்ரல், 2008

பம்பரம்!

ஒற்றைக் காலில் நின்றபடி
உன்னை என்னை பார்த்தபடி
சற்றே காற்றைக் கிழித்தபடி
சுற்றும் பம்பரம் சொல்வதென்ன?

நிலையே இல்லா இவ்வாழ்வில்
நிலைத்து வாழ வேண்டுமெனில்
நில்லா துழைத்தல் வேண்டுமென்று
நிற்கும் பம்பரம் சொல்கிறது!

ஊனம் உடலில் இல்லையென்றும்
உளத்தில் தானது உள்ளதென்றும்
காணும் பேரைக் கூப்பிட்டுக்
கனிவுடன் பம்பரம் சொல்கிறது!

வட்டத் துள்ளதை சிறைவிடுத்து
வாழ்வ ளித்திடும் தன்னைப்போல்
இட்ட முடனே எல்லோர்க்கும்
இயன்றது செய்திட இயம்பிடுது!

தலைக்கனம் கொண்டே ஆடுவதால்
தாழ்வே வந்து சேருமென்று
தலையை ஆட்டித் தக்கபடி
தண்மையாய்ப் பம்பரம் சொல்கிறது!

தன்னைச் சுற்றும் சாட்டைக்கே
தன்னை வழங்கும் பம்பரம்போல்
உன்னை சார்ந்த உறவுக்கும்
உன்னை ஈந்திடு என்கிறது!

சொந்தக் காலில் நிற்பதுதான்
சுகத்திற் சிறந்த சுகமென்றும்
அந்தப் பம்பரம் சொல்கிறதே!
அழகாய் நிமிர்ந்து நிற்கிறதே!

அகரம். அமுதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக