வியாழன், 15 ஆகஸ்ட், 2013

அமுதன் குறள்! 5

தந்தை உணுமுணவைத் தட்டிப் பறித்துப்பின்
தந்து மகிழ்ந்தாடு வாய்! (31)

தவழ்ந்து தளிர்நடையிட் டோடி உலாவும்
குழந்தைக் கழகாம் குறும்பு! (32)

அடிக்க விழைவாரும் அள்ளிமுத்தம் ஈவார்
வெடிப்புச் சிரிப்பால் விழுங்கு! (33)

கன்னம் குழிவிழ கற்கண்டாய்ப் புன்னகைத்துத்
தெங்கிளநீர் அன்னமொழி தேர்! (34)

நீட்டியிரு கையால் நிலாவைப் பிடித்துவந்து
கூட்டிலடைத் தாடிடுவாய் கூத்து! (35)

தட்டான் பிடித்தல் தவறாகும் உன்விரல்
பட்டால் அழுமே அது! (36)

துன்பம் தரலாமா தும்பி தனைப்பிடித்து?
இன்பம் அதுவா இயம்பு! (37)

பொம்மை விளையாடு; பூங்கிளி யோடும்பே(சு)
அம்குயில் பாட்டும் அறி! (38)

விழுவாய் பிறந்தமண் மீது படியும்
புழுதி நறுமணப் பூச்சு! (39)

விழுந்தால் விதையாய் விரிந்தால் சிறகாய்
எழுந்தால் மரமாய் எழு! (40)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக