வெள்ளி, 19 நவம்பர், 2010

மாவீரர்! -உரைப்பா! (1994)

எம்மக்கள் விடுதலையே பெற்றுமதிப் பொடும்மேன்மை
இயையப் பெற்றும்
செம்மாந்து வாழ்ந்திடவே வேண்டுமெனும் குறிக்கோளைத்
தேர்ந்து பற்றித்
தம்வாழ்வை தம்முயிரைத் தந்தீகம் செய்திட்ட
தகைஞர் தம்மை
எம்நெஞ்சக் கோயிலில்வைத் தெழில்வணக்கம் செய்துய்த*
நாளாம் இந்நாள்!

எமதுவிடு தலைக்காக மதிப்பிடுதற் கொல்லாத
விலைகொ டுத்தோம்;
அமர்க்களம் ஆக்கப்பட் டெம்மண்ணில் குருதிநிறை
ஆறு பாயும்;
எமதரும் வீரரிற்றை நாளினிலும் விடுதலைக்காய்
இறப்பை ஏற்றார்;
எமதுவீ ரர்நினைவுத் தூண்களுமே விடுதலையை
வேண்டி நிற்கும்!

புதியதொரு அணுகுமுறை திட்டத்தோ டாட்சிசெயப்
போந்தார் அந்தப்
புதியவராம் சந்திரிகா அரசமைதிக் கைநீட்ட
போந்து பற்றி
எதிரிகட்கு வன்கட்டுப் பாடெதையும் விதித்திடா
தியைந்து பேச்சின்
முதற்கட்டத் தெமதீழ மக்களுறும் இடர்களுக்கே
முதன்மை தந்தோம்!

சிங்களர்தம் படையமைதி வழியிலெம் சிக்கலினைத்
தீர்க்க நத்தா*
தெங்களின்மேல் நடுவுநிலை அற்றதொரு போர்தொடுக்க
ஏகும் போக்கை
அங்கணுள சந்திரிகா அரசும்கை விட்டதுவாய்
அறிந்தோ மில்லை;
தங்க(ள்)படை நிலைக்கெதிராய்ச் செயல்படவும் விரும்பிடுவ
தாகக் காணோம்!

அரசமைதி வேண்டுவதில் அக்கறையாய் இருக்குமெனில்
அவ்வ ழித்தன்
முரசறையும் படையினையும் முடுக்கிவிடின் எளிதாகும்;
மூளும் போரை
நிறுத்துவதும், பொருள்தடையை நீக்குவதும், நீர்வழியை
நிலத்தில் சாலை
திறத்தலொடு மீள்குடிவைப் பிவையனைத்தும் படையிருப்பைப்
பொருத்த தேயாம்!

அமைதிக்குத் தடையாக அமைந்தவர்கள் நாமில்லை;
அமைதி வாசல்
தமையும்நாம் மூடவில்லை; எம்மக்கள் அன்றாடம்
சார்ந்து நிற்கும்
குமை*களைய விரும்புகிறோம்; எம்மதிப்பைப் பெறவேண்டின்
கொடுங்கோ லாளர்
அமைதியுடன் இயல்புநிலை எம்நாட்டைச் சூழ்ந்திடுமா
றமைதல் வேண்டும்!

நீண்டதொரு குருதிப்போர் கண்டுவரும் எம்மியக்கம்
நேர்ந்த போரை
யாண்டுமொரு உயர்மட்டத் தெடுத்துசெலும் தன்னாட்சிக்
கான மிக்க
நீண்டதொரு கட்டமைப்பை நிறுவியுளோம்; வலிமைமிகு
கடைக்கால் நின்றோம்;
ஈண்டெமது* கடைக்காலை இயைத்தவரைப் போச்சாவா*
திருத்தல் வேண்டும்!

ஆற்றலுடை படையாய்நாம் அமைந்ததினால் சிங்களர்தம்
அரசு பேச்சுக்
கேற்றதொரு ஆர்வத்தைக் காட்டுகிற தருந்தமிழர்
இன்னல் தீர்க்க
மாற்றமிலா அமைதிவழி தீர்வுதனை வைக்குமெனில்
மருங்கு நிற்போம்;
ஏற்றமுறு தன்னாட்சிக் கட்டமைப்பை முன்வைக்கின்
ஏற்றுக் கொள்வோம்!

சலுகைகளைப் பெறுமெளிய குழுவல்ல; விடுதலையைச்
சமைக்கு மெங்கள்
இலக்கெமது தாய்மண்ணில் மதிப்பமைதி விடுதலையும்
இயையப் பெற்றுக்
கலக்கமற வாழ்வதுவே; எம்விருப்பை நிறைவேற்றும்
கவினார் தீர்வே
நிலைக்குமொரு தீர்வாகும்; என்றுமொரு ஒப்புரவை
நிலைநி றுத்தும்!

ஒப்புரவாம் தீர்வதனை உற்றிடவே ஓரினமாய்
ஒருதே சத்தை
எப்பொழுதும் வேண்டிநெகிழ் வற்றுறுதி பூண்டவராய்
இருத்தல் வேண்டும்;
ஒப்பிலதாம் இந்நாளில் உயிரீகர் உறங்குமிடம்
ஒளியை ஏற்றி
அப்பெருமீ கர்குறிக்கோட் குப்பரிசாய் உறுதியிதை
அகத்தில் ஏற்போம்!

துய்தம் –புனிதம்; நத்தாது –விரும்பாது; குமை –துன்பம்; ஈண்டு –இவ்விடம்; பொச்சாவாது -மறவாது.

அகரம் அமுதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக