வியாழன், 4 நவம்பர், 2010

மாவீரர்! -உரைப்பா! (1992)

இன்றுமா வீரர் நாளாம்;
இத்தரை வரலாற் றில்நேர்
ஒன்றிலாப் பாவி யம்மாய்
உயர்ந்துநம் விடுத லைப்போர்
நின்றிடச் செய்த வீரர்
நெடுதுயில் கொள்வ தெண்ணி
நன்றுநாம் நெஞ்சில் வைத்து
நற்றொழு கைசெய் நாளே!

தன்னின மீட்சி ஒன்றே
தன்குறிக் கோளாய்க் கொண்டு
தன்னுயிர் மேல தாக
தழுவிய குறிக்கோ ளுக்காய்
இன்னுயிர் ஈந்தார் கொள்கை
இளவல்கள்; விடுத லையே
மன்னுநற் பேறாம்; மாந்த
வளர்ச்சியும் பொருளும் அஃதே!

இத்தரை பிறந்த நாளாய்
எழுந்தபோர் புரட்சி யெல்லாம்
தத்தமை அடிமை கொண்ட
தளைகளை உடைக்க வன்றோ!
வைத்தழி செய்தும், தாழ்த்தி,
வகையுற சுரண்டி வாழ்ந்தும்
மெத்தவே எதிரி யாகி
மனிதனை மனிதன் தின்றான்!

விரிந்தயிப் பார்மி சைத்தன்
விடுதலை அற்று வாழ்வோர்
இருக்கிற நாள்வ ரைக்கும்
இருந்திடும் விடுத லைப்போர்;
ஒருவரின் விடுத லையை
ஒழித்திட ஒருவர் ஏகின்
அறங்கெடும்; இனம்கு லங்கள்
அரும்பிடும்; மோதல் மூளும்!

தன்னுரி மையி ழந்து
தரணியில் தவிக்கும் மக்கள்
தன்னிலோர் பிரிவாம் நாமும்
தகைந்து*போ ராடு கின்றோம்!
இன்றுபோ ராடு கின்ற
ஏனையோர் போரின் மேலாய்
ஒன்றிநம் போர்க்கு ரல்பா
ரொலித்திடல் கண்டு கொள்வீர்!

எங்கணும் காண ஒல்லா
ஈகமும் ஈவும் செய்த
எங்களின் வீரர்க் கீடாய்
இங்காரு மில்லை; வீரம்
பொங்கிடும் பாவி யத்தைப்
புரிந்தனர்; ஒடுக்கப் பட்டோர்க்
கெங்களின் போராட் டம்மே
ஈடுகாட் டான தன்றே!

இறப்பினுக் கஞ்சி டாத
எழில்மிகும் உறுதிப் பாடும்
மறவ(ர்)தம் வலியும் எங்கள்
மற்போர்க்கு வளமை சேர்க்கும்
உறப்பிலாப் பகைவர் போல
உதவிகேட் டலையாப் போக்கால்
அறக்கழி வாளர் கூடி
அடக்கியும் நிமிர்ந்து நின்றோம்!

எமைநெருக் கடிகள் சூழ
எம்விடு தலைப்போர் மிக்க
அமைவுறும் இக்கட் டுக்கள்
அடைந்தெதிர் நோக்கி நிற்கும்;
அமைதியின் கதவ டைத்தே
அடுகளத் தேகும் மாணார்
தமிழினத் துன்பம் தீர்க்கத்
தகவுடன் தீர்வு காணார்!

என்றுமில் லாத போரை
எடுத்தனர்; உக்கப் போரை
நன்றுநாம் எதிர்கொண் டாடி
நலித்தனம்; பேரி ழப்பை
என்றுமில் லாவ கையில்
எதிரிகண் டானெம் மண்ணில்
என்றுமே வன்க வர்புக்
கிடமிலை உணர்த்தி விட்டோம்!

போரினால் பொருளி ழந்தும்
பெரும்நெருக் கடிக ளுற்றும்
நேரிலாப் புலிப்ப டைமுன்
நின்றிட ஒல்லாப் போழ்தும்
சீரிலாப் படைந டத்தித்
திருவிலா வன்க வர்பே
தீர்வெனச் சிங்க ளர்கள்
தீவிரம் காட்டு கின்றார்!

கருவிகொண் டெமைய டக்கக்
கருதிடும் பகைவர் போக்கில்
ஒருசிறு மாற்ற மில்லை;
உணர்ந்தினப் பகையாம் சேற்றில்
இருந்திடும் அவரால் எம்மின்
இச்சையை நிறைவு செய்ய
ஒருதீர்வுந் தோன்றா தென்ற
உண்மைநாம் உணர்தல் வேண்டும்!

நாற்பதாண் டிற்கும் மேலாய்
நடக்குமெம் விடுத லைப்போர்
ஏற்புறும் அமைதிப் போராய்
எழுந்துபின் ஆய்தப் போராய்
மாற்றமுற் றெத்த னையோ
வழிதனில் நயன்மை கேட்டும்
மாற்றலர்க் கெம்கு ரல்தம்
மனந்தொட்ட தாகக் காணோம்!

காலமும் எமது மக்கள்
கண்டபே ரவலத் தொடு
மாளவும் அழிவு மாக
வருத்ததின் சுமையால் மக்கள்
சாலமும் குருதி சிந்திச்
சாகிறார்; இவையெல் லாமும்
ஆளுமச் சிங்க ளர்தம்
அகந்தொட்ட தாகக் காணோம்!

ஈவிரக் கமிலான்; போரை
ஏற்பவன்; எமது நாட்டின்
ஆவியைப் பறித்து மக்கள்
அழிவினைக் குறிக்கோ ளாக்கிக்
கூவிடும் பகைவர் நெஞ்சம்
குறைகளைந் தெமக்கு நீதி
மேவிடக் காண்பா ரென்று
மிழற்றிட ஒல்லா தன்றே!

இந்நிலை யில்நாம் போரை
ஏற்பதைத் தவிற வேறு
நன்னிலை கண்டோ மில்லை;
நடைபெறும் போரின் போதும்
திண்ணிய அமைதி வாசல்
திறக்கிறோம்; அமைதி தன்னை
உன்னியே எதிரி வந்தால்
உறவுற அணிய மாவோம்!

வன்முறை மீது காதல்
வளர்த்தனர் எதிரி; என்றும்
நன்முறை அற்ற போரை
நத்தினர் படையெம் வாயில்
நின்றுபோர் முரசு கொட்டி
நிலத்திலெம் மினம ழிக்கத்
தன்னுயிர், குருதி சிந்தத்
தகையிலார் அணிய மானார்!

நெருக்கடிச் சூழ லில்நம்
நிலத்தினை இனத்தைக் காக்கக்
குருதியைச் சிந்தி வென்று
கொள்கிற துய்த மான
உரிமையே விடுத லையாம்;
ஓர்பொருள் அல்ல அஃதை
அருவிலை பேசு தற்கே!
அயர்வுறா தெதிர்த்து நிற்போம்!

பேரிடர் உற்றும்; நாளும்
பெருநெருக் கடிகள் கண்டும்
நீரெனக் குருதி சிந்தி
நிற்குமெம் மக்க ளாலும்
வீரரின் ஈகத் தாலும்
விதிர்த்திடா தெதிர்த்து நின்றோம்;
பாரினில் வரலா றேயெம்
பயனுறு வழிகாட் டாகும்!

வீரரின் குருதி யாலே
விளைந்தயிவ் விடுத லைப்போர்
சீரெலாம் உற்றும் துய்தம்
சேர்த்துமீ கத்தால் தேசம்
பேருரு வாக்கம் பெற்றும்
பெட்புடை உறுதி பெற்றும்
தேரிடச் செய்தார் அந்தச்
சிற்பியர் வணங்கு வோமே!

தகைந்து –துணிந்து; ஈகம் –தியாகம்; ஈவு –அர்ப்பணிப்பு; ஈடுகாட்டு –உதாரணம்; உக்கம் –உக்கிரம்; மாற்றலர் –பகைவர்; சாலவும் –மிகவும்; மிழற்றுதல் –சொல்லுதல்; ஒல்லாது –முடியாது; அருவிலை –பேரம்; துய்தம் –புனிதம்.

அகரம் அமுதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக