திங்கள், 5 ஜனவரி, 2009

பாவலர் இறையரசன்!


அகரம்.அமுதா + பாவலர் இறையரசன்
பாவலர் எனக்கு யாத்த வெண்பா!

வேங்கையின் வால்பிடித்தல் வெண்பா எழுதலென்பார்!
பாங்குடன் அப்பாப் பயிற்றுவிக்க -ஈங்குலகில்
வெல்லுங் கணினிவழி வென்ற அமுதாவே
வெல்நா லடிப்பா வியந்து!

பாவலருக்காக நான் யாத்த அறுசீர் விருத்தம்!

இலஞ்சியெழும் இளங்குவளை எழில்பழிக்கும்
        இருகண்கள் இழைத்த பார்வை
பொலஞ்சிறைப்புள் ளரசெனவே பொலியுமுறிப்
        புன்னகையோ புரிமின் னற்கீற்(று)
அலங்கலுறு நனைமலராய் அலர்மீசை நன்நெஞ்சர்,
        அமிழ்தனையர் அவர்தந் சீரிற்
புலர்ந்துவரும் பூங்கவிக்குப் புயல்வானிற்
        பொலிகதிரே பொருவாங் கண்டீர்!

அணிவகைகள் அணிவகுக்க, அம்பொருவும்
        பொருத்தென்ன, அமைய மையென்(று)
அணங்கெதுகை மோனைமுரண் அடிதோறும்
        இழைதொடையும் அடம்பி டிக்க
நணியிருந்து செம்பொருளும் நன்கமைய
        இறையரசர் நவிலும் பாட்டில்
உணர்விழப்பர், உளங்களிப்பர் ஒண்புலவர்;
        மாற்றமெதும் உரைப்பார் உண்டோ?

அருஞ்சொற்பொருள்:-பொலம் -பொன், சிறை -சிறகு, புள்ளரசு -பருந்து, பொலிபார்வை -விலங்குகின்றபார்வை (பொலிதல் -விலங்குதல், சிறத்தல்), முறி -தளிர்; புரி -சுருள், இலஞ்சி -வாவி, அலங்கல் -பூமாலை, நனை -தேன்,

பொரு -உவமை, அணங்கெதுகை -வருந்தெதுகை(அணங்குதல் -வருந்துதல்), நணி -அணிமையான,

அகரம்.அமுதா!

2 கருத்துகள்: