திங்கள், 1 டிசம்பர், 2008

மடயர்க்குப் பாடம் சொல்வாய்!


(மும்பையைப் பத்துப்பேர்கள் கொண்ட தீவிர வாதிகள் தாக்குதலைக் கண்டித்து எழுதப்பட்டது.) -26.11.2008-


அக்குளில் அழுக்கி னைப்போல்
       அண்டியே துன்பு றுத்தும்
குக்கலின் என்பு டைத்துக்
       கொடுங்குளிர் காய வேண்டும்!
மக்களை மாய்க்கு மந்த
       மதியிலார் போக்கால் பாரில்
சிக்கலே மிகுவ தாலே
       தீயரை ஒறுக்க வெண்டும்!

செப்படி வித்தை காட்டிச்
       செருவிடை மார்நி மிர்த்தி
எப்படை எதிர்த்த போதும்
       எறும்பென ஊதித் தள்ளும்
முப்படை நமக்கு முண்டு!
       முன்னரண் தாண்டி வந்து
தப்படி வைப்பின் அன்னார்
       தாள்களை யொடிக்க வேண்டும்!

தந்தைக்குப் பிறந்தா லன்றோ
       தருக்குவான் நேரில்! மாட்டு
மந்தைக்குப் பிறந்த கூட்டம்
       மறைந்தன்றோ தாக்கும்!? முற்றும்
சிந்திக்கும் திறனில் லாத
       தீயரைப் பிடித்து வந்து
தந்திக்கு முன்பு தைத்துத்
       தலைதனை இடர வேண்டும்!

சோற்றிலே கல்கி டந்தால்
       சுவைக்குமோ உண்டி? நெல்லின்
நாற்றிலே புல்வ ளர்ந்தால்
       நன்மையோ? பெருகி யோடும்
ஊற்றிலே நஞ்சி ருந்தால்
       உண்ணுதற் காமோ? நம்மில்
கூற்றெனக் கலந்து பட்ட
       கொடியரைக் கொல்ல வேண்டும்!

வேவுகொள் துறையே! நீயுன்
       வேலையை முடுக்கி விட்டு
வேவுகொள்; அன்றி நீயும்
       மெத்தென வீற்றி ருப்பின்
சாவுகொள்; எல்லை தாண்டித்
       தருக்கிடும் பேடி தம்மைக்
காவுகொள்; நாட்டின் ஆண்மை
       காவல்கொள்; விழிப்பி னைக்கொள்!

பஞ்சுமாப் பொதியிற் றீயைப்
       பதுக்கிடும் தன்மை போலக்
கொஞ்சமா சூழ்ச்சி செய்தார்?
       கொடுமனப் போக்கால் நாளும்
நஞ்சுமா நெஞ்சர் ஆடும்
       நாடகம் அறிந்த பின்னும்
அஞ்சுமா இந்தி யாதான்?
       அயருமோ எல்லைக் காவல்?

அணுக்கமாய் எடுத்து ரைப்பாய்!
       அறிவிலாப் பேய்ம னத்தர்
இனக்கமாய் வாரா விட்டால்
       இடியெனப் பொருது! போ!போ!
சுணக்கமேன்? இந்தி யாவே!
       தூமனம் துயில்தல் இல்லை;
மணக்குமோ காகி தப்பூ?
       மடயர்க்குப் பாடம் சொல்வாய்!

அகரம்.அமுதா

4 கருத்துகள்: