வியாழன், 14 ஆகஸ்ட், 2008

மலர்கள் மீண்டும் மலரும்!

வில்லென்ற புருவம் வைத்து
வேலென்ற விழிகள் வைத்துக்
கள்ளுண்ட அதரம் வைத்துக்
கனியுண்ட அங்கம் வைத்தே
இல்லென்ற இடையும் வைத்தவ்
இடையகத்தில் இன்பம் பொங்கும்
நெல்லென்ற ஒன்றை வைத்து
நிற்பவரோ பெய்வ ளைகள்?

மொழிமுறை முற்றும் மாற்றி
மொழிதலை விரும்பு வோரும்
வழிமுறை என்னும் பேரில்
வனிதையர்க் கிழைக்கும் தீங்கின்
இழிமுறை அறிந்தி ருந்தும்
இருப்பதோ கல்லாய்? அவரை
அழிமுறை அறிந்தெ ழுந்தே
ஆர்ப்பதே பெண்ணின் வேலை!

வேணவா தீரும் மட்டும்
விரும்பியே அணைத்துக் கொள்ளும்
ஆணவா தீர்ந்த பின்னும்
அணங்கவா தொடர்ந்து விட்டால்
வீணவா என்னும் கீழ்மை
விலங்கவா வன்றோ மஞ்சல்
பூணவா பூவ வாவைப்
பூணொண்ணா விதவைக் கோலம்!

பெற்றவளைக் காணப் போமோ?
பிறப்பினால் தமக்கை யாகப்
பெற்றவளைக் காணப் போமோ?
பின்னாளில் மனையைக் கூடிப்
பெற்றவளைக் காணப் போமோ?
பேச்சிலே முள்ளை வைத்து
மற்றவளை கைம்பெண் என்றே
மனங்குளிரும் பேர்கட் கெல்லாம்?

மதியென்பார் முகத்தை; வாயின்
மலரென்பார் சிரிப்பை; திரு
மதியென்பார் மணந்து கொண்டால்;
மணவாளன் இருக்கும் மட்டும்
மதியென்பார்; அவன்ம ரித்தால்
மதியவளை மிதியென் பார்கள்;
விதியென்றே வீட்டின் மூலை
வீழ்தலோ பெண்ணின் வீரம்?

மெட்டியை; மஞ்சல் தோய்ந்த
மணிக்கயிற் றோடு நெற்றிச்
சுட்டியை; பூவை; வண்ணம்
துளங்கிடும் ஆடை தன்னை;
போட்டோடு கைவ ளையைப்
புரத்தலன்றித் துறத்தல் நன்றோ?
அட்டியிலை அடுத்தோர் மாலை
அவள்தோளில் வீழ்தல் நன்றே?

பதுமைதான் இதுவ ரைநீ;
பாவைநீ துணிந்து விட்டால்
புதுமைதான் பூமி யெங்கும்;
புத்தியில் ஓர்ந்த றிந்தே
புதுக்கிடும் மறும ணத்தைப்
புரிதலே பெருமை யாண்டும்!
மதுக்குடம் ஏந்தும் கூந்தல்
மலர்மீண்டும் மலர்தல் வேண்டும்!

அகரம்.அமுதா

3 கருத்துகள்: