திங்கள், 18 ஆகஸ்ட், 2008

அரசே அறிவிப்பாய் ஆங்கு!

நாட்டில் நகர்ப்புரத்தில் நாடிப் படிக்கும்நாள்
ஏட்டின் எழுத்துகளில் இன்திரைப் -பாட்டுகளில்
பட்டிதொட்டிப் பாமரர்தம் பேச்சுகளில் இல்லைபெயர்த்
தட்டியிலும் இல்லை தமிழ்!

தொட்டுப் பயிலும் தொடக்கநிலைக் கல்விமுதல்
பட்டப் படிப்புவரைப் பைந்தமிழைக் -கொட்டும்
முரசே முழங்க முழுமனதாய் ஆளும்
அரசே அறிவிப்பாய் ஆங்கு!

செம்மொழியாச் செய்து சிரிக்கின்றீர் வெட்கமின்றி!
அம்மொழியும் ஆட்சிமொழி ஆனதுண்டா? -நிம்மதியாய்
நாடாள வேண்டி நடாத்துகிறீர் நாடகங்கள்
பீடாறும் பாங்கில் பெரிது!

சட்டம் இயற்றிச் சதுராடி வேற்றுமொழிக்
கொட்டம் அடக்கத்தான் கூறுகிறேன் -திட்டம்
வகுக்கத்தான் வேண்டும் வளர்தமிழின் மாண்பைத்
தொகுக்கத்தான் வேண்டும் தொடர்ந்து!

தாய்நாட்டில் தாய்மொழிக்குத் தக்கமதிப் பில்லையெனில்
மாய்ந்தேனும் அந்நிலையை மாற்றிடுவோம்! -தேய்ந்தேனும்
மீண்டுவரும் விண்ணிலவாய் மீளட்டும் மென்றமிழும்;
ஆண்டுவரும் நல்லரசே ஆங்கு!

எத்துறை நோக்கினும் எங்கும் எதிலும்நம்
முத்தமிழைக் காண முடியவில்லை -செத்தமொழிப்
பட்டியலில் சேர்க்கத்தான் பார்க்கின்றீர் உண்மையி(து)
அட்டியிலை என்பேன் அறிந்து!

இறைக்குச் சமற்கிருதம் என்றாகித் தோயுந்
துறைதோறும் ஆங்கிலமே தோன்றின் -முறையாசொல்!
தாய்நாட்டில் தாய்த்தமிழ் சாகும் நிலையெனில்
பேய்நாடீ தென்பேன் பெரிது!

பத்தொடு நாளும் பதினொன்றாய் ஆகின்றீர்;
நத்தி நரகலையே நாடுகிறீர்; -தித்திக்கும்
தீங்கரும்பாம் செந்தமிழைத் தீய்த்துத் தமிழர்க்குத்
தீங்கிழைத்து விட்டீர் தெரிந்து!

இதுவரை இன்றமிழ்க் கென்செய்தீர்? நாட்டை
மதுக்கடையாச் செய்து மகிழ்ந்தீர்; -இதற்கும்
வருந்தத்தான் வேண்டும் வழுநீங்க வேண்டின்
திருந்தத்தான் வேண்டும் தெரிந்து!

மதுக்கடைகள் மூடி வளம்சேர் தமிழ
முதுக்கடைகள் செய்ய முனைவீர் -புதுக்கடையால்
தாழும் பிறமொழிகள் தங்கத் தமிழ்நாட்டில்
வாழும் தமிழ்மொழியும் வந்து!


அகரம். அமுதா

2 கருத்துகள்: