ஒளிய வரங்கேட்டால்
வெட்கத்தைத் தந்து
விலகுகிறாய் – வட்டநிலா
மேகத்துள் சென்று
மெதுவாய் மறைவதுபோல்
மோகத்தை நாணால்
முறித்து! 001
பாதரசம் சாப்பிடுதல்
பாழாகும்; பாவைஉன்
பாதரசம் தானெனக்குப்
பாயாசம்; – நாதரசம்
உன்பேச்சென் காதுக்கே
ஊட்டிவிடு; வாழ்தற்கே
உன்மூச்சை என்மூக்கில்
ஊட்டு! 002
ஊர்த்தெருவில் போகின்றாய்
ஓரா யிரம்நிலவு
ஊர்வலமே போவதாய்
ஊர்சொல்லும் – தேர்வலம்தான்
தேவதைநீ செல்வதாய்ச்
சேதிவரப் பாரென்று
மாவதைதான் செய்யும்
மனம்! 003
கூதலுக்கு யார்தான்
குடைபிடிப்பார்? பொங்கியெழும்
காதலுக்கு ஊரார்
கவிவடிப்பார்; – சேதமின்னும்
மென்மேல் அதிகரிக்கும்;
நெஞ்சம் பரிதவிக்கும்;
சொன்னால்யார் கேட்கின்றார்
சொல்! 004
காத்துவரும் போதெல்லாம்
கன்னியுன் வாசனைதான்
பூத்துவரும்; ஏதோஓர்
போதைதரும்; - நேத்துவந்த
நெத்தியின் நாற்றமா
நெஞ்சை நிறைத்துவிடும்?
புத்தியிலே நீயிருக்கும்
போது! 005
தேர்போகும் வீதியிலே
தேவி உனைக்கண்டு
கார்போகும் சோலையிலே
காதலித்தேன் – யார்கண்கள்
பட்டதென்று நானறியேன்
பற்பலநாள் மெய்க்காதல்
கெட்டதென்று நீசொல்லக்
கேட்டு! 006
ஒன்றேதான் காதல்;
ஒருத்தியே காதலி
என்றே வரைந்தேன்
இதயத்தில்; - இன்றே
கணியெனக்கு என்னாச்சு?
காயமெங்கும் காதற்
பிணியெனக்கு உன்னாலன்
பே! 007
பெட்டிக் கடைமிட்டாய்
பிள்ளைகளை ஈர்ப்பதுபோல்
கட்டி இழுக்கின்றாய்
கண்களால்; – துட்டில்லா
ஏழைச் சிறுவன்போல்
ஏங்குகிறேன்; தாராய்இப்
பாழைக்குத் தான்சொப்
பனம்! 008
கருவாச்சு நின்மீதே
காதல்;அடி போடி
கருவாச்சி உன்மீதே
காதல் – உருவாச்சு;
நீதின்று போட்ட நெடுயமாங்
கொட்டையிதை
யார்திங்க? நீயே
எடு! 009
நீயழகி நின்பின்
நிறைய பயல்வரலாம்;
வாயருவி நீந்தி
மகிழ்ந்திடலாம்; – நாயுருவி
நானென்ற போதென்மேல்
நாட்டம் செலுத்துவதார்?
தெனென்று நீயென்னைச்
சேர்! 010
தாயமாய் நெஞ்சைத்
தரையில் உருட்டுகிறாய்;
காயத்தைக் கண்ணால்
கழட்டுகிறாய்; – தாயத்து
நான்கட்டிக் கொண்டாலும்
நாளுமுன் காதற்பேய்
தேன்சொட்டாய்த் தின்குதெனைத்
தீர்த்து! 011
இந்நாள் வரைபிறந்த
எல்லா அழகியரும்
உந்தன்முன் மூன்றாம்
முடப்பிறைதான்; – தந்தானே
பொன்னால் முழுமதியைப்
பூமிக்கே; அவ்வகையில்
ஊன்னப்பன் தான்பிரம்மன்;
ஓ..! 012
வண்டெல்லாம் உன்னை
வளைவீசித் தேடுதுபார்
செண்டென்று நம்பியுன்னில்
தேனெடுக்க; – பெண்ணழகே!
என்னிடமும் கண்வண்டு
இரண்டுண்டு அனுப்புகிறேன்
உன்தா வணியை
ஒதுக்கு! 013
சிறுபுள்ளிச் சுற்றளவும்
தோற்கும் இடைமேற்
பெறுமொட்டி யாணம்
சுமைதான் – குறுந்தகடு
பூங்கீறல் பெற்றதுபோல்
பூவுதடு பெற்றவளே!
தாங்குகிறேன் என்நெச்சில்
தாவு! 014
ஆழி எடுத்துன்
அறைக்குடுத்து; என்மனத்
தாழி திறந்தென்
தவம்கடை; – வாழிஉன்
பூவிழி மத்து;அதனால்
போகிறேன் செத்து;உன்னால்
தீவிழித்த தேநெஞ்சத்
தே! 015
நிழல்நிலத்தில் வீழ்தல்
நிதர்சனம்; பூவுன்
நிழல்விண்ணில் வீழ்ந்து
நிலவாச்சு; – அழகியே!
பாவலன் நான்சொன்னால்
பைத்தியம் என்கின்றார்;
நீவலம் வந்து
நிறுவு! 016
நான்கிறுக்கன் பூங்கவிதை
நன்றாய்க் கிறுக்குவேன்
ஏய்பொறுக்கி என்றேன்னை
ஏசாதே; – வான்வழுக்கிப்
பூவிக்கு வந்தநிலா
பூத்ததென் கட்டிலிலா?
சாமியே! நின்தாள்
சரண்! 017
புரியவேண்டி யாட்குப்
புரிந்தாலே போதும்;
புரியா மலேயெங்குப்
போகும்? – அரியவளே!
எல்லாம் தெரிந்தவுனக்கு
என்னைத் தெரியாதா?
கல்லாச்சா உன்நெச்சு?
காட்டு! 018
விண்ணிலவில் நீருண்டா?
விஞ்ஞானம் ஆய்கிறது;
வெண்ணிலவே! நின்உடல்
வேர்ப்பதனைக் – கண்டிருந்தால்
வெட்டிச் செலவு
விரயமில்லை; விஞ்ஞானம்
குட்டிச் சுவரென்பேன்
கூர்ந்து! 019
இல்லா தவள்நீ
இடையளவில் என்னளவில்
போல்லா தவள்நீ
புரிந்துணர்வில்; – நல்லாய்
உனக்கென்னை விட்டால்
உறவுண்டு; உறவென்று
எனக்குன்னை விட்டால்
எவள்! 020
ஆளரவம் இல்லா
தறிந்துமுத்தம் இட்டுவைத்தாய்
நீளரவம் ஊரும்
நெடுங்காட்டில்; – ஆளரவம்
உள்ள இடத்தில்
உறவல்லார் போல்நடந்து
கொள்வதெனைச் செய்யும்
கொலை! 021
வான்நீலம் மொத்தம்
வழித்தாலும் போதாது;
மீன்கடல்நீர் நீலம்
மிகக்குறைவு; – நான்விரும்பி
ஏடெடுத்தேன் உன்னை
எழுதிட; மைவிழிக்
கூடெடுத்து வந்து
கொடு! 022
-தொடரும்-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக