ஒளிய வரங்கேட்டால்
வெட்கத்தைத் தந்து 
   விலகுகிறாய் – வட்டநிலா
மேகத்துள் சென்று 
   மெதுவாய் மறைவதுபோல்
மோகத்தை நாணால் 
   முறித்து! 001
பாதரசம் சாப்பிடுதல் 
   பாழாகும்; பாவைஉன்
பாதரசம் தானெனக்குப் 
   பாயாசம்; – நாதரசம்
உன்பேச்சென் காதுக்கே 
   ஊட்டிவிடு; வாழ்தற்கே
உன்மூச்சை என்மூக்கில் 
   ஊட்டு! 002
ஊர்த்தெருவில் போகின்றாய் 
   ஓரா யிரம்நிலவு
ஊர்வலமே போவதாய் 
   ஊர்சொல்லும் – தேர்வலம்தான்
தேவதைநீ செல்வதாய்ச் 
   சேதிவரப் பாரென்று
மாவதைதான் செய்யும் 
   மனம்! 003
கூதலுக்கு யார்தான் 
   குடைபிடிப்பார்? பொங்கியெழும்
காதலுக்கு ஊரார் 
   கவிவடிப்பார்; – சேதமின்னும்
மென்மேல் அதிகரிக்கும்; 
   நெஞ்சம் பரிதவிக்கும்;
சொன்னால்யார் கேட்கின்றார் 
   சொல்! 004
காத்துவரும் போதெல்லாம் 
   கன்னியுன் வாசனைதான்
பூத்துவரும்; ஏதோஓர் 
   போதைதரும்; - நேத்துவந்த
நெத்தியின் நாற்றமா 
   நெஞ்சை நிறைத்துவிடும்?
புத்தியிலே நீயிருக்கும் 
   போது! 005
தேர்போகும் வீதியிலே 
   தேவி உனைக்கண்டு
கார்போகும் சோலையிலே 
  காதலித்தேன் – யார்கண்கள்
பட்டதென்று நானறியேன் 
  பற்பலநாள் மெய்க்காதல்
கெட்டதென்று நீசொல்லக் 
  கேட்டு! 006
ஒன்றேதான் காதல்; 
   ஒருத்தியே காதலி
என்றே வரைந்தேன் 
   இதயத்தில்; - இன்றே
கணியெனக்கு என்னாச்சு? 
   காயமெங்கும் காதற்
பிணியெனக்கு உன்னாலன் 
   பே! 007
பெட்டிக் கடைமிட்டாய் 
   பிள்ளைகளை ஈர்ப்பதுபோல்
கட்டி இழுக்கின்றாய் 
   கண்களால்; – துட்டில்லா
ஏழைச் சிறுவன்போல் 
   ஏங்குகிறேன்; தாராய்இப்
பாழைக்குத் தான்சொப் 
   பனம்! 008
கருவாச்சு நின்மீதே 
   காதல்;அடி போடி
கருவாச்சி உன்மீதே 
   காதல் – உருவாச்சு;
நீதின்று போட்ட நெடுயமாங் 
   கொட்டையிதை
யார்திங்க? நீயே 
   எடு! 009
நீயழகி நின்பின் 
   நிறைய பயல்வரலாம்;
வாயருவி நீந்தி 
   மகிழ்ந்திடலாம்; – நாயுருவி
நானென்ற போதென்மேல் 
   நாட்டம் செலுத்துவதார்?
தெனென்று நீயென்னைச் 
   சேர்! 010
தாயமாய் நெஞ்சைத் 
   தரையில் உருட்டுகிறாய்;
காயத்தைக் கண்ணால் 
   கழட்டுகிறாய்; – தாயத்து
நான்கட்டிக் கொண்டாலும் 
   நாளுமுன் காதற்பேய்
தேன்சொட்டாய்த் தின்குதெனைத் 
   தீர்த்து! 011
இந்நாள் வரைபிறந்த 
   எல்லா அழகியரும்
உந்தன்முன் மூன்றாம் 
   முடப்பிறைதான்; – தந்தானே
பொன்னால் முழுமதியைப் 
   பூமிக்கே; அவ்வகையில்
ஊன்னப்பன் தான்பிரம்மன்; 
   ஓ..! 012
வண்டெல்லாம் உன்னை 
   வளைவீசித் தேடுதுபார்
செண்டென்று நம்பியுன்னில் 
   தேனெடுக்க; – பெண்ணழகே!
என்னிடமும் கண்வண்டு 
   இரண்டுண்டு அனுப்புகிறேன்
உன்தா வணியை 
   ஒதுக்கு! 013
சிறுபுள்ளிச் சுற்றளவும் 
   தோற்கும் இடைமேற்
பெறுமொட்டி யாணம் 
   சுமைதான் – குறுந்தகடு
பூங்கீறல் பெற்றதுபோல் 
   பூவுதடு பெற்றவளே!
தாங்குகிறேன் என்நெச்சில் 
   தாவு! 014
ஆழி எடுத்துன் 
   அறைக்குடுத்து; என்மனத்
தாழி திறந்தென் 
   தவம்கடை; – வாழிஉன்
பூவிழி மத்து;அதனால் 
   போகிறேன் செத்து;உன்னால்
தீவிழித்த தேநெஞ்சத் 
   தே! 015
நிழல்நிலத்தில் வீழ்தல் 
   நிதர்சனம்; பூவுன்
நிழல்விண்ணில் வீழ்ந்து 
   நிலவாச்சு; – அழகியே!
பாவலன் நான்சொன்னால் 
   பைத்தியம் என்கின்றார்;
நீவலம் வந்து 
   நிறுவு! 016
நான்கிறுக்கன் பூங்கவிதை 
   நன்றாய்க் கிறுக்குவேன்
ஏய்பொறுக்கி என்றேன்னை 
   ஏசாதே; – வான்வழுக்கிப்
பூவிக்கு வந்தநிலா 
   பூத்ததென் கட்டிலிலா?
சாமியே! நின்தாள் 
   சரண்! 017
புரியவேண்டி யாட்குப் 
   புரிந்தாலே போதும்;
புரியா மலேயெங்குப் 
   போகும்? – அரியவளே!
எல்லாம் தெரிந்தவுனக்கு 
   என்னைத் தெரியாதா?
கல்லாச்சா உன்நெச்சு? 
   காட்டு! 018
விண்ணிலவில் நீருண்டா? 
   விஞ்ஞானம் ஆய்கிறது;
வெண்ணிலவே! நின்உடல் 
   வேர்ப்பதனைக் – கண்டிருந்தால்
வெட்டிச் செலவு 
   விரயமில்லை; விஞ்ஞானம்
குட்டிச் சுவரென்பேன் 
   கூர்ந்து! 019
இல்லா தவள்நீ 
   இடையளவில் என்னளவில்
போல்லா தவள்நீ
   புரிந்துணர்வில்; – நல்லாய்
உனக்கென்னை விட்டால் 
   உறவுண்டு; உறவென்று
எனக்குன்னை விட்டால் 
   எவள்! 020
ஆளரவம் இல்லா 
   தறிந்துமுத்தம் இட்டுவைத்தாய்
நீளரவம் ஊரும் 
   நெடுங்காட்டில்; – ஆளரவம்
உள்ள இடத்தில் 
   உறவல்லார் போல்நடந்து
கொள்வதெனைச் செய்யும் 
   கொலை! 021
வான்நீலம் மொத்தம் 
   வழித்தாலும் போதாது;
மீன்கடல்நீர் நீலம் 
   மிகக்குறைவு; – நான்விரும்பி
ஏடெடுத்தேன் உன்னை 
   எழுதிட; மைவிழிக்
கூடெடுத்து வந்து 
   கொடு! 022
   துரும்பிலும் உள்ளாயே;
காணிடம் எல்லாம்உன் 
   காட்சியே; – நீணிலத்தில்
ஆண்டவனும் நீயுமொன்றே; 
   அண்டிவந்து அன்புருக
வேண்டியவை ஈயா 
   விடத்து!  023
பல்முத்தம் என்றேபண் 
   பாடினேன்; நெஞ்சில்என்
சொல்குத்திற் றோ?தூக்கில் 
   தொங்கியதே; – மெல்லியலே!
நாக்கில் நரம்பின்றி 
   நான்சொன்ன தாய்உனது
மூக்கின்கீழ் புல்லாக்கு 
   முத்து! 024
தேவி சிரிப்பே திருவிழா; 
   நான்தொலைந்து
கூவியழு கின்றேன் 
   குழந்தையாய்; – ஈவிரக்கம்
காட்டாமல் கூட்டம் 
   கலைகிறது; பேரச்சம்
வாட்டாமல் வாட்டுதெனை 
   வந்து! 025
பேச்சரங்கப் போட்டியிலே 
   பேரைநீ சேர்க்காதே
கூச்சல் இடக்கூடும் 
   கூட்டத்தார்; – பேச்சரங்கைப்
பாட்டரங்காய் மாற்றுவதாய்ப் 
   பாவையுன் பூங்குரலில்
ஆட்பட்ட தாலே 
   அதிர்ந்து! 026
நீர்மோக்க நீவந்தால் 
   நீர்ப்பரப்புப் பாசிகள்நின்
சார்பாகத் தான்சற்றே 
   தள்ளிநிற்கும் – ஊர்க்குடங்கள்
வாய்பிளந்து பார்த்திருக்கும்; 
   வாய்ப்பிதுபோல் தங்களுக்கும்
வாய்க்கா ததினால் 
   வழிந்து! 027
நீர்மோந்து நீள்கரையில் 
   நீநடந்தால் நீர்க்குடம்கண்
ணீர்சிந்தி பாரம் 
   நினைந்தழும்; – ஊர்வரைக்கும்
தன்னைச் சுமக்குமோ? 
   தாளாது ஒடியுமோ?
மென்மருங்குல் என்றுள்ளம் 
   வேர்த்து! 028
நின்னை வரைந்ததற்பின் 
   நீர்க்குளத்தில் போய்ப்பிரம்மன்
தன்கை அலம்பமலர்த் 
   தாமரையும், – பொன்னிறத்துத்
தூரிகையைத் தானலம்பத் 
   துள்ளியெழும் மீன்பொதியும்,
நீரிலே தோன்றினவே 
   நேற்று! 029
கோவிலுக்குப் போனபூ 
   கொண்ட உவகையினை
நாவிருந்தால் கூறிவிடும் 
   நால்வரியில்; – தேவியுன்
கூந்தலுக்கு வந்தபூ கூறப் 
   புறப்பட்டால்
பூந்தமிழிற் சொல்தீர்ந்து 
   போம்! 030
-தொடரும்-
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக