133. ஊடல் உவகை!
இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு! 1321
பேரன்பென் மேற்செய்யப் பேருதவி செய்கின்ற
காரணத்தால் ஊடலைக் கைக்கொண்டேன்; – ஆரமுத
அன்பர்தம் மீதில்லை அப்பழுக்கென் றாலுமவர்
பொன்றிடாக் காதல் பொருட்டு!
ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்! 1322
சின்னதோர் துன்பம் சிறகடிக்கும்
நான்போடும்
மென்பிணக்குச் சண்டை விளையாட்டில்; - அன்பர்தம்
அன்புசிறு வாட்டம் அடைந்தாலும் பின்புறும்
பொன்பெறும் நன்மதிப்பே போன்று!
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீர்இயைந்து அன்னார் அகத்து! 1323
செல்லச் சினங்கொண்டு செய்யும்
சிறுவம்பிற்கு
இல்லை சுவர்க்கமும் ஈடென்பேன் – நல்ல
நிலத்தினில் நீர்பொருந்தி நிற்றல்போல்
என்றன்
உளத்தினில் நின்றார் உடன்!
புல்லி விடாஅப் புலவினுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை! 1324
கட்டித் தழுவிஅக் கட்டவிழா வண்ணம்நான்
இட்டு நிரப்பும் எரிச்சலுள் – நெட்டி
மலங்கடிக்கும் முற்றும் வளர்ந்திருக்கும்
நெஞ்சைக்
கலங்கடிக்கும் போர்வெங் கணை!
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்தோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து! 1325
தப்பே சிறிதுமிலை தாரத்தின் மீதெனினும்
தொப்பென்று போட்டுத் தொலைவிருத்தல் – அப்பப்பா!
போதாத காலமிது போவென்னும் போதுமிதில்
ஏதோஓர் இன்பம் இருக்கு!
உணலினும் உண்டது அறலினிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது! 1326
உண்பதைக் காட்டினும் உண்ட உணவுநன்றாய்க்
கண்டசெறி மானம் களிப்பாகும்; – மண்டையில்வை!
பொன்நிமிட வேர்வைப் புதுப்புணல் ஆடுதலின்
சின்நிமிட ஊடல் சுகம்!
ஊடலின் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்! 1327
கொண்ட பிணக்கத்தின் கொண்டை பிடித்தங்கு
மிண்டாமல் தோற்றாரே வென்றார்;இவ் – உண்மை
உடுக்கை இடைமீதே ஒட்டியுற வாடும்
படுக்கையில் காணப் படும்!
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வியர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு! 1328
வட்டச் சிறுநெற்றி வாய்க்கால் வழிந்தோட
ஒட்டிக் கலந்தின்பம் உய்வேனோ? - முட்டத்தான்
முன்னேறு கின்ற முயலிரண்டு கொண்டாளை
இன்னொருபொய்ச் சண்டை இழுத்து!
ஊடுக மன்னோ ஒளியிழை யாய்இரப்ப
நீடுக மன்னோ இரா! 1329
ஏற்ற இறக்கமெலாம் ஏய்ந்தவணி யாள்மனதை
மாற்ற முயன்றிடுவேன் மன்றாடி – ஆற்றல்
திரட்டித்தான் ஆங்கு திமிரட்டும் பெண்மான்;
இரட்டிப்பா கட்டும் இரவு!
ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்! 1330
காதலுக் கின்பமக் காதலர் போடும்பொய்
மோதலி னாலே முளைவிடும்; – மோதற்குக்
கூடுதல் இன்பத்தைக் கூட்டும் உடலையுடல்
மூடுவ தாலே முகிழ்ந்து!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக