புதன், 15 ஜனவரி, 2014

கதிர்விடு தூது! 2


மண்ணும் வளர்நிலவும் மற்றனைத்துக் கோல்களும்
விண்ணும் வெளிச்சப்பால் வேண்டிடஉண்ணா

முலையே! முலையூட்ட முன்வந்தாய்; உன்றன்
கலையை அவித்துக் கருத்தாய்இலையென்னா(து)

அன்னையும் ஆனாய்;நீ அப்பனும் தானானாய்;
அன்னையப்பன் ஆன அருளரசே! –முன்னாளில்

குந்திக்குப் பிள்ளை கொடுத்தவனே! பால்வெளியில்
குந்தி அரசாளுங் கொற்றவ!நீகுந்தும்

இருக்கை குறிஞ்சி; இளைப்பாறும் பூங்கா
பொருவில்லா முல்லை; புகழ்சார்மருதமுன்

பாராளும் மன்றம்வெம் பாலை பகைவரைநீ
பொராடி வெல்கின்ற போர்க்களமே; –நீராடி

நீமகிழ நெய்ததுறை நெய்தல்;நீ துஞ்சுதற்கு
மாமுகிலே பஞ்சுமெத்தை; வான்கட்டில்; –பூமியே

பட்டத் தரசி; பருவவேட் கையால்நீ
தொட்டுத்தொட் டுத்துய்க்கும் தோகையர்மற் -றெட்டுக்கோல்;

நாற்றிசையும் நாற்படையா ஐம்பூதம் நல்லமைச்சா
ஆர்க்கும் இடியே அணிமுரசா –வேற்படையும்

வாளுமே விண்மீனா வானமே வெண்குடையா
நீளுமிப் பால்வெளியே நின்நாடா – ஆளும்

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக