ஞாயிறு, 28 மார்ச், 2010

தமிழ்!



கிழவியே! கிளியே! நாளும்
        கிடந்துநான் கொஞ்சத் தூண்டும்
அழகியே! அமுதே! தேனே!
        அன்னையென் முலைப்பா லுண்ணும்
குழவியே! குருத்தே! ஆடும்
        கொடியிடை மாதே! உன்னைத்
தழுவியே இன்பம் கொள்ளும்
        தலைவனென் இன்னல் கேளாய்!

உண்டிலேன்; உன்னை எண்ணி
        உறக்கமும் கண்க ளோடு
கொண்டிலேன்; கண்ணு றக்கம்
        கொள்ளினும் கனவோ டின்பம்
கண்டிலேன்; கருத்தி லாடும்
        கற்பனைச் செய்யுள் ஒன்றும்
விண்டிலேன்; மூச்சுக் காற்றை
        விழுங்கவும் ஒன்னா துள்ளேன்!

திரையிலும், திசைகள் தோறும்,
        தெருவிலும், காணும் சின்னத்
திரையிலும், நாளே டோடும்,
        திறமறிந் திருவர் பேசும்
உரையிலும், வீட்டு னுள்ளும்,
        உன்றனைத் தேடித் தேடி
இரவிலும் பகலி னோடும்
        ஏங்கினேன் எங்குச் சென்றாய்?

அகரம் அமுதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக