திங்கள், 1 மார்ச், 2010

கரிகாலன் ஈற்றெடுப்பு! (4)


மாணார்*அச் சிங்களர் மாய்த்தாரெம் மக்களை
வீணாய் அமைதிவழி வேண்டாமல்; –மாணாரைச்
சாய்க்கத் துமுக்கி*யைச் சார்ந்துதன் கையேந்தி
மாய்க்கப் பிறப்பெடுத்த மன்! (31)

மன்னவனே! எங்கள் மறவர் படைத்தலைவா!
வன்னவனே!* முப்படையை வார்த்தவனே! –தென்னவனே!
எங்கள் திருவே! எமையாளும் நீயன்றோ
கங்குல்* விளக்கும் கதிர்! (32)

கதிர்க்கையா! எல்லாளா! கார்வண்ண கோனே!
முதிர்ந்த அறிவின் முதலே! –விதிர்த்து*ப்
புறங்காட்டி ஓடும் பொறியற்ற நள்ளார்*க்(கு)
அறங்கூறி வாழ்விப்பார் யார்? (33)

யார்சொல்லி யுங்கேளார்; யானே எனத்தருக்கிப்
பொர்செய்து தோற்பார் புறங்கண்டே -மார்தட்டி
மண்ணையே கௌவும் மடமற நெஞ்சுடையார்
தன்னையே நோகமிகத் தாக்கு! (34)
தாக்கி அழிக்கத் தகையிலார் மேவுவதை
நோக்கி வெகுண்டாய்; நுதியில்லார்ப் –போக்கை
ஒறுக்கத் துணிந்த உரத்தாய்!உன் மூச்சைப்
பறிக்கத் துடித்தனரே பார்த்து! (35)

பார்முழுதும் ஆண்ட பரம்பரைய ரானாலும்
நீர்த்திரை*சூழ் பாரில் நிலைத்ததில்லை –நேர்த்திமிகு
எல்லாளா! உன்போல் இறப்பின்றி வாழ்ந்தவர்கள்
உள்ளாரா கொஞ்சம் உரை! (36)

உரைத்தார் பலமுறை; உன்னை அழித்துக்
கரைத்தாரந் நீற்றைக் கடலில் –மரித்தோன்
திரும்பான் எனச்சொல்லும் வாய்மூடும் முன்னம்
இருப்பாய் அவரின் எதிர்! (37)

எதிர்த்தோனைக் கண்டஞ்சா எல்லாளா! உன்னை
மதித்தோர்க்குத் தோள்கொடுக்கும் மள்ளா!* –மதித்துன்றன்
சொல்லுக்(கு) இணங்கித் தொடர்ந்த எமைக்காத்தாய்
அல்லும் பகலோடும் ஆங்கு! (38)

ஆங்கோர் படைநிறுவி ஆளப் பிறந்தவனே!
தூங்கா(து) எமைக்காக்கும் தூயவனே! –தேங்காயின்
உள்வெளுப்பாய் உள்ளம் விளங்கியவா! உன்றனையே
உள்ளுதப்பா எங்கள் உளம்! (39)

உளவுப் படைகண்ட ஒப்பில்லாய்! யாரும்
களவு செயவரிய காற்றே! –விளிவை*
அரிமுகத்தர்க்(கு) ஈயும்* அரசே! இமய
நரிமுகத்தர் வஞ்சித்தார் நன்கு! (40)

மாணார் –பெருமைகளற்ற பகைவர்; துமுக்கி -துப்பாக்கி; வன்னவன் –அழகானவன்; கங்குல் –இருள்; விதிர்த்தல் –நடுங்குதல்; நள்ளார் –பகைவர்; நுதி -அறிவுக்கூர்மை; நீர்த்திரை –நீரலை; மள்ளன் –மறவன்; விளிவு –அழிவு; ஈதல் –வழங்குதல்.

அகரம் அமுதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக