புதன், 21 மே, 2008

திரைகடல் போகிறேன்!

நெஞ்சம் வளர்த்தே இடையகம் தேயும்
நிலவே! திரைகடல் போய்வரவா?
கஞ்சன் வழங்கிய தானம் போன்ற
கனிமொழி யே!நான் போய்வரவா?

பனிமல ரே!பூம் பஞ்சணை யே!உன்
பார்வையின் எல்லை கடந்திடவா?
கனிமர மே!பொன் ஊஞ்சலு மே!நல்
கற்பக மே!விடை கொடுத்திடுவா!

எல்லா நதியும் மலையில் தோன்றிக்
கடலில் தானே முடிகிறது –உன்
பொல்லா நதியோ விழியில் தோன்றிப்
பொதிகையில் சென்றேன் முடிகிறது?

குளத்தில் தானடி தாமரை மேவும்- செங்
குமுதத் தில்ஏன் இருகுளங்கள்?
நிலத்தில் வீழும் மின்னல் போலென்
நெஞ்சில் உன்னால் கலவரங்கள்!

அழுதது போதும் அடியே பெண்ணே!
வழிகின்றக் கண்ணீர் வற்றவிடு
விழுதென வழிகிற தெந்தன் விழிநீர்
செழுமடல் இதழால் ஒற்றியெடு!

பிரிவுத் துயரம் எனக்கும் உண்டு
பிரிவே உறவுக்கு வழிவகுக்கும்- இதழ்
பிரியா மொட்டுகள் மணப்பதுமில்லை
பிரிந்தால் தானடி மலர்மணக்கும்!

ஆண்டுகள் இரண்டு போனால் வருவேன்
அதுவரை அன்பே! வாழ்ந்துவிடு- உன்
சாண்முழ மல்லிகை நிலைக்கணும் அதனால்
எனையும் கொஞ்சம் வாழவிடு!


அகரம்.அமுதா

2 கருத்துகள்: