வெள்ளி, 10 அக்டோபர், 2008

எல்லாமுமாகிய அண்ணலே!

விடியாத நாட்டிற்கு
விடிவெள்ளி நீதான்!
விடியலை வழங்கவந்த
வைகரையும் நீதான்!

துருப்பிடித்த உணர்வுகளைத்
துலக்கியவன் நீதான்!
துயிலோடும் தன்மானம்
ஊட்டியவன் நீதான்!

சுதந்தரப் பேச்செடுத்த
சூறாவளி நீதான்!
சுதந்தரம் பொழியவந்த
சூழ்மழையும் நீதான்!

பாரதத் தேரிழுக்கப்
புனைந்தவடம் நீதான்!
பாரதத் தேரோட்டிய
சாரதியும் நீதான்!

இந்தியா ஈன்றெடுத்த
இளையமகன் நீதான்!
இந்தியாவை ஈன்றெடுத்த
இளந்தாயும் நீதான்!

வெள்ளையனை விரட்டவந்த
வில்லம்பும் நீதான்!
கொள்கைகளை வளர்க்கவந்த
கோமகனும் நீதான்!

ஆய்தம்போல் தனித்துநின்ற
அகிம்சைவாதி நீதான்!
ஆயினும்என்? தேசத்தின்
அருஞ்சொத்தே நீதான்!

எல்லாமு மாகிய
அண்ணலும் நீதான்!
எல்லாரது நெஞ்சிலும்
நிறைந்தவனும் நீதான்!

அகரம்.அமுதா

2 கருத்துகள்: